ஞாயிறு, 24 ஜனவரி, 2010

எது குடியரசு?

நாளை மறுநாள்  குடியரசு தினத்தை கொண்டாடவிருக்கிறோம்? முடியாட்சியை ஒழித்து உருவானது தான் குடியரசு. குடியரசு தினத்தை கொண்டாட அழைக்கப்பட்டிருக்கும் நாம் இந்தியக் குடிமகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதை விட, இந்திய முட்டாள்கள் என்பதில் சிறுமைப்படுத்தப்படுவதிலே தான் பெருமிதம் கொள்கிறோம்! ஆம் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, நம் தாய் தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, இந்தியக் குடியரசு முழுமையையும் ஆராய்ந்து பார்த்தொமானாலும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். எப்படி? இங்கே கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி -கனிமொழி-தயாநிதி-உதயநிதி-பேரன் பேத்திகள்..., கர்நாடகத்திலே தேவகௌடா-குமாரசாமி, ஆந்திரத்திலே, ஒரிசாவிலே என் அடுக்கிக்கொண்டே போகலாம். இறுதியிலே மத்தியில் பார்வையை திருப்பினால் வருத்தங்களே மிஞ்சும்.

முடியரசை ஒழித்தோம் இந்தியாவை இணைத்தோம் என மார்தட்டும் காங்கிரசு கட்சிக்கு நேரு குடும்பத்தை விட்டால் வேறு ஆட்களே இல்லை தலைமைப் பதவியேற்பதற்கு என்பது கேவலமாகத் தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள் இது குடியரசா இல்லை முடியரசா? சற்று ஆழ ஊன்றி சிந்தித்தோமானால் பிரித்தாளும் கொள்கையால் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயக் கொள்கைகளைத் தான் இன்றைக்கு நமது தேசத்தின் கட்சிகளும் பின்பற்றி, நம்மை கோமாளிகளாக்கி வருகின்றது எனும் உண்மை புலப்படும்.
நோயுற்றவனுக்கு உதவி புரிகிறது கலைஞர் காப்பீட்டு திட்டம் என பிதற்றுபவனுக்கு புரிவதில்லை அந்த திட்டத்திற்கான மதிப்பீடு டாஸ்மாக்கின் ஒரு சில நாள் வருமானம்தான் என்பது. மூளையை அடகு வைத்த நம் இனத்திற்கு, மொழிக்கு, நாட்டிற்கு தேவை விழிப்புணர்வு. அது எங்கனம் கிடைக்கும்? நம் பண்பாட்டின் வழி, தன் தாய் மொழியின் வழியே அன்றி வேறு வழியிலில்லை.
ஒவ்வொருவனும் தன் தாய் மொழியையும், தனது கலாசாரத்தின் உண்மையான சாராம்சத்தையும் உணராமல் பெறும் வளர்ச்சி உண்மையான வளர்ச்சியாகாது. கொண்டாட்டங்களும் அது போலத்தான், செம்மறி ஆட்டுமந்தைகளைப் போல அல்லாமல் பகுத்தறியும் மனிதனாக சிந்தித்து சரியான மாற்றங்களை ஆதரித்து, தவறான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதிலேதான் நம் மனித வாழ்வு இருக்கிறது. "பார்வையாளன் பங்கேற்பாளனாவதில்லை" என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களில் பங்கேற்க முயலுவோம் அல்லது துணைபுரிவோம். உண்மையான குடியரசு கொண்டாட்டங்களில் இல்லை. நல்ல குடியாட்சியில் வாழ்வதில் தான் உள்ளது.