கற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மகிழ்ச்சியும், வெற்றியும் பெற சிந்தனை, சுதந்திரத்தை சீர்பட அளிப்போம்



பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்தும், சூழ்நிலைகளைப் பொறுத்தும் மாறுபட்ட அர்த்தங்களைத் தரும். ஆனால் ஒரு வார்த்தை அனைத்து இடங்களிலும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வார்த்தை தான் சுதந்திரம்.
கண்காணிப்பு
ஒரு இயந்திரமானது, அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ப மனித உதவியோடு செய்து முடிக்கின்றது. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான பணியை செய்கிறது. அவ்வவ்பொழுது ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், தேவையான பொருள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
 
செயல்பாடு

மனிதன் தான் கடக்கும் நிகழ்வுகளை, கோர்க்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட வேலைகளை ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டு செய்கிறான். அந்த வேலைகள் திட்டமிடப்பட்ட செயல்களை நோக்கி அவனை நகர்த்துகின்றன. ஒரே செயலை மறுபடி மறுபடி செய்யும்பொழுது ஒரு வகையில் அது எளிதான வேலையாக இருந்தாலும், பலருக்கும் அது விருப்பமிகு வேலையாக இருப்பதில்லை. ஏனெனில் மூளை ஒரே வேலைக்கு மட்டுமே தன்னை தயர்படுத்திக்கொள்வதால் வேறு செயல்பாடுகள் குறித்த சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக ஒரு கைதியின் நிலையில், ஒரே செயல்பாட்டை செயலாற்றும் மனிதனின் சிந்தனை அறிவும் ஒரு குறுகிய செயல்பாட்டிற்குள்ளாக முடங்கிவிடுகிறது.
 
இதனை உணர்ந்தவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகவும், தான் சார்ந்த நிறுவனம் அல்லது இடத்தின் வளர்ச்சிக்காகவும் புதிய செயல்பாடுகளை நோக்கி தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதுவே சுதந்திரத்தை நோக்கிய பயணம். மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையும் இதைப் போன்றுதான் உள்ளது.
 
நெருக்கடி

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடி, மாபெரும் பணிகளை செய்யக்கூடிய நபருக்கு இருக்கக்கூடிய  நெருக்கடிகளை விட மிகவும் அதிகம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் மாணவர்கள் காலை எழுந்தது முதல் படிப்பு, படிப்பு என இரவு தூங்கும் வரை படிப்பை தவிர எதுவும் இல்லை என்ற நிலையிலேயே எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை 14 ஆண்டுகள் கடந்துவிடுகின்றனர்.
 
பள்ளிக்காலத்தில் அதீத கட்டுப்பாட்டுடன் வளரும் மாணவர், கூண்டிலிருந்து விடுபட்ட பறவையானது உலகை மகிழ்ச்சியுடன் வலம் வருவதைப் போன்று, கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கின்றான். இந்த மகிழ்ச்சியும் பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
 
எது சுதந்திரம்?

சுதந்திரம் என்ற ஒன்று அது கிடைக்கும் நபரைப் பொருத்து மாறுபடுகிறது.   ஒரு கட்டுப்பாடற்ற இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், இனிப்புகளை உண்பதையே இலட்சியமாகக் கொண்ட ஒரு சிறுவனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், நன்மை செய்வதற்காக போராடும் ஒரு போராளிக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு.
 
சுதந்திரம் என்பது முழுவதுமாகக் கிடைக்கும்பொழுது அது தவறுகளுக்கே வழிவகுக்கும் என்பது நாம் அறிந்ததே. அளிக்கப்படும் சுதந்திரம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும்பொழுதே அதற்கான உண்மையான அர்த்தம் கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அனைத்து தரப்பினரும் இதுகுறித்து ஏங்கினாலும்,  அதிகமான ஏக்கத்திற்கும், வாய்ப்பிற்கும் ஏங்குபவர்களாகவும், அளிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருப்பவர்கள் குழந்தைகளே.
 
ஏனெனில் கற்கவேண்டியது பாடப்புத்தகத்தை மட்டுமல்ல, அதையும் கடந்து இருக்கிறது என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் பொருளாதார நோக்கம் கொண்டவர்களாக  மட்டுமே குழந்தைகளை உருவாக்குகிறோம். அவர்களின் இதர ஆசைகளை நிராசைகளாக்கி விடுகின்றோம்.
 
முன்னுரிமை

ஒவியனாக வேண்டும் என்று ஆசைப்படும் மாணவனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம், ஆதரவை விட பொறியியல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், ஆதரவு அதிகமாக இருக்கிறது. இருவரையும் ஒரே தராசில் இருபுறமும் வைக்க தயங்குகிறோம். வருமானமே ஒரு மனிதனின் தன்மையை வெளிப்படுத்துவதாக எண்னுகிறோம். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது என்று நம்மை நாமே பணத்திற்கு அடிமையாக்கி விடுகிறோம்.
 
படிப்பையும் கடந்து

குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே முக்கியமல்ல என்பதை உணர்த்தி உறவுகளோடு பழகுவதற்கான உரிமையை அளிப்போம். நமது உறவினர் யார் என்பதனை அறிய பள்ளிக்கு விடுப்பு எடுத்து உறவுகளின் சுக, துக்கங்களில் அவர்களையும் பங்கெடுக்க வைப்போம். ஏனென்றால் இன்றைய குழந்தைகளுக்கு அனுதினமும் சந்திக்கும் வெயில் குறித்த புரிதல்கள் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தத்தை அளிக்கக்கூடியது.
 
வாழ்க்கையின் நிகழ்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களின் கருத்துக்களை அனுதினமும் கேட்டு வந்தாலே அவர்கள் வாழ்வு சிறக்கும். வருங்காலம் அவர்களை பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தள்ளாமல் மகிழ்ச்சியை நோக்கி தள்ளும். கோடி ரூபாய் கொடுத்தும் கிடைக்காத மன நிம்மதி, சிறுசிறு நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும்.
 
சீர்பட செதுக்குவோம்

குழந்தைகளுக்கான சுதந்திரம் அவர்களின் சிந்தனையில் தொடங்குகிறது. சிந்தனைகளை சீர்பட செதுக்கினால் அழகான வாழ்வு மலரும். ஒரேயடியாக கட்டிப்போட்டால் அது மழுங்கிப்போகும். போர்க்களத்தின் சண்டையில் கூர்மையிழந்த வாளுக்கு இருக்கும் மதிப்பானது, துருப்பிடித்து கிடக்கும் வாளுக்கு கிடைப்பதில்லை. மாலையும், மரியாதையும், புகழ் பாடல்களும் போர் வாளுக்கே உண்டு. அதனை உணர்ந்தவர்களாக தேவைப்படும் சுதந்திரத்தை அளித்து குழந்தைகளை வளர்ப்போம்.
- இலா. தேவா 
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25108&cat=1

சனி, 7 ஜூன், 2014

முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்



வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
நல்லவையும், கெட்டவையும் நம் முன்னால் நமக்கு தெரிந்தவாறே இருக்கின்றன. அதனை தேர்ந்துகொள்வதும், தேர்ந்துகொள்ளாததும் நம் உரிமை என்றாலும், அதனை நமக்கானதாக்கிக்கொள்வது பல நேரங்களில் நமக்கு விருப்பப்படாமலே நிகழ்ந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை. காலமும், சூழ்நிலைகளும் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டெ இருக்கிறது.
காரணிகள்
தேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நமதாக இருந்தாலும், அதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தாக்கம் அதிகமான பங்கினை வகிக்கிறது. தெளிவாக, சுயமாக முடிவெடுப்பவர்கள் சுற்றி இருப்பவர்களைக் குறித்து தெளிவுடன் இருப்பதால், தங்கள் தேர்வுகளை சிறப்பாக அமைத்து, வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படி முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே.
தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்களின் எண்ணங்களையே தனது முடிவுகளாகக் கொண்டவர்கள், முடிவுகள் தவறானவுடன் சுற்றி இருப்பவர்களைக் குறை கூறுபவர்களாக இருக்கிறார்கள்.  முடிவெடுப்பதில் பல காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது தேவைகள் குறித்த கடந்த கால, எதிர்காலங்கள். முடிவெடுக்கும்  சூழ்நிலையில் உள்ள கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் என யாவும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுப்பதற்கு துணை புரிகிறது. அதனால் விளையும் நன்மைகள், பாதிப்புகள் என அனைத்தையும் சிந்தித்துதான் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.
ஆனால் எல்லோரும் இதே போன்று சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அந்த நேரத்தில் என்ன நினைவில் இருக்கிறதோ அதனை மையமாகக்கொண்டு முடிவெடுத்து, அதன் வழியில் சென்றே முடிவுகளை மாற்றிக்காட்டுபவர்களும் உள்ளனர். எடுத்த முடிவில் இறுதி வரை நிலைத்திருப்பதும் அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து முடிவினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதும், ஒருவரின் தனிப்பட்ட திறமை. 
வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
சிறு சிறு முடிவுகளையும் நாமே எடுத்து பழக வேண்டும். உதாரணத்திற்கு உணவகத்திற்கு செல்கிறோம் என்றால், "நீங்களே சொல்லுங்கள், நீங்களே சொல்லுங்கள்" என ஒருவர் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் இருவரும் ஒரே உணவை பெற்று உண்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவு குறித்த ஆசை மனதில் இருந்தாலும், மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலேயே தனக்கான தேவையை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்து, உண்ணும் உணவின் சுவையை நாவில் உணர மாட்டார்கள்.
இதே போன்றுதான் முடிவுகள் எடுக்கும்பொழுதும் தனக்கான சரியான தேவையை உணராமல், அடுத்தவரின் முடிவுகளை ஆராயாமல் தனதாக்கிக்கொள்ளும்போதும் நேரிடும். எடுக்கும் முடிவுகளுக்கு தானே பொறுப்பு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், பின்னோக்கி வராமல் முயற்சியோடு, தளராமல் முடிவுகளின் பாதையில் வெற்றி காண வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு என்பதை முழுதாக உணர்ந்தாலே போதும். முடிவுகள் எடுக்கும்பொழுது பெரும் மனக்குழப்பத்திற்குள்ளாகாமல், தெளிந்த நிலையில் ,எடுத்த வேலையில் வெற்றி தரும் முடிவினை எடுக்கலாம்.
- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24359&cat=1

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கற்றல்: வளர்ச்சிக்கான முதல் படி


மனித வாழ்வானது கற்றுக்கொள்வதின் அடிப்படையிலேயே வளம் பெறுகிறது. கற்ற நல்லவற்றை செயல்படுத்தியதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் சாதனைகள் புரிந்தவர்கள்தான், மற்றவர்களின் வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றனர்.
கற்கும்பொழுது நாம் விரும்பாவிட்டாலும் நல்லவற்றோடு, கெட்டவற்றையும் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில் மிகத் தெளிவுடன் கற்றலை அணுக வேண்டியது இருக்கிறது.
கற்றலை முழுமையடைய வைப்பவையாக கவனித்தல், நினைவில் நிறுத்துதல், இவற்றின் மூலம் அடையக்கூடிய நிலை போன்றவை இருக்கிறது. ஒன்றை கற்றால் மட்டுமே அதனை செயல்படுத்த முடியும். அதே நேரம் சிறப்பாக கற்றவர்களால் மட்டுமே, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். கற்றல் என்பது ஒரு நிலையோடோ அல்லது குறிப்பிட்ட மனிதர்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவோ நின்றுவிடக்கூடியது அல்ல; தொடர்ந்து தலைமுறைதோறும், காலங்களைக் கடந்தும் மெருகேறுவதாகவே இருக்கிறது.
கவனித்தல்
ஒன்றை கற்றுக்கொள்கிறோம் என்றால்,  அதில் ஈடுபாடும், புரிதலும் இருந்தால்தான் ஆர்வத்துடன் கவனிக்க முடியும். ஒன்றில் ஈடுபாட்டை கொண்டு வருவது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய செயல் அல்ல. ஏனெனில் "மனித மனம் குரங்கைப் போன்றது, அது ஒரே சிந்தனையில் நிலையாக இருக்காது" என்று பெரியவர்களும், படித்த புத்தகங்களும் கூறும் கருத்தாகும். இப்படிப்பட்ட மனதினை ஒரு நிலைப்படுத்தி பாடங்களை கவனிக்க வைப்பதுதான் முக்கியமானது.
நினைவில் நிறுத்துதல்
கவனித்த நிகழ்வுகள் எல்லாம் எப்போதும் நினைவில் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு கவனிக்கும்பொழுது புரிந்த மாதிரி தெரிந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு கற்ற தகவல் மெதுவாக மறந்து விடும். இப்படிப்பட்ட நிலையில், கற்றதை மீண்டும் நினைவுபடுத்தவோ அல்லது புரிய வைக்கவோ வேண்டியது இருக்கிறது. தொடர்ந்து நினைவில் இருப்பதுதான் கற்றல் முழுமை அடைவதற்கான நிலை. முழுமையாக நினைவில் இருந்தால்தான் புரிந்துகொண்டதை அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க முடியும்.
நினைவுத் திறனே ஒருவரின் அடுத்த இலக்கை நோக்கிய செயல்பாடுகளை  வெற்றிகரமாக்க துணை புரிகிறது.
கற்பதில் இருக்கும் ஆர்வம் வளர்ச்சியை உண்டாக்குகிறது. வளர்ச்சி அறிவியல், ஆற்றல், வாழ்வியல் என அனைத்திலும் புதிய உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23259&cat=1

திங்கள், 2 டிசம்பர், 2013

கற்பது எளிது


மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகளை நாம் சந்திக்கிறோம்.
காலையில் எழும்பியதிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை நாம் சந்திக்கும் மனிதர்கள், படிக்கும் புத்தகங்கள், பிறர் மூலம் பெறும் தகவல்கள், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்கள் வழியாக அறிந்து கொள்ளும் தகவல்கள் என நமக்கு சம்பந்தமான, சம்பந்தமில்லாத, தேவையான, தேவையில்லாத தகவல்கள் பலவற்றை அறிகிறோம். வரக்கூடிய நாட்களிலும் அது போன்ற நிகழ்வுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பிறர் வாழ்வில் கண்ட சம்பவங்கள் நாளை நமக்கும் நேரிடலாம்.
நமக்கு கற்றுக்கொள்ள கிடைக்கும் இந்த சந்தர்ப்பங்களை, நாம் உபயோகமாக பயன்படுத்தினால் தான் நமது அறிவை வளர்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஏடறிவு மட்டும் அல்லாமல் அனுபவ அறிவும் அவசியம் தேவை என்பதாலேயே செய்முறை வகுப்புகள் நமக்கு கற்றுத்தரப்படுகிறது. செய்முறை வகுப்புகள் மூலமாகவே ஒரு மாணவன் எளிதாக புரிந்துகொள்கிறான் என்பது கல்வியலாளர்களின் வாதம். அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு "ப்ளே ஸ்கூல்ஸ்" என்று சொல்லப்படுகின்ற விளையாட்டின் வழியாக கற்றுத்தரக்கூடிய பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றன.
பாடப்புத்தகங்களை குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்கேற்ற சூழ்நிலையை இருப்பிடத்தில் அமைத்துக்கொடுக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை சத்தமாக படிக்கும், ஒரு சிலர் அமைதியாக உட்கார்ந்து படிப்பர். சத்தமாக படிக்கும் குழந்தைகளை அமைதியாக படிக்குமாறு அறிவுறுத்தக்கூடாது. படிக்கும்போது மனப்பாடம் செய்து மட்டும் படிக்காமல் பாடத்தினை புரிந்து படிக்கவேண்டும். வார்த்தைகளை விட கருத்தே முக்கியம் என்பதை உணர வேண்டும்.
எடுத்துக்காட்டாக அறிவியல் பாடத்தை படிக்கும் பொழுது வேதிவினை எவ்வாறு நடைபெறுகிறது என்று புரிந்துகொண்டாலே போதும். வேதியல் தனிமங்களின் பெயர்களை மட்டும் நன்கு நினைவில் கொண்டு புரிந்து கொள்ளலாம். சமூக அறிவியல் பாடங்களை படிக்கும் பொழுது வரலாற்று சம்பவங்களை தெளிவுபட கேட்டறிந்தாலே போதும். ஆண்டுகளை மட்டும் சரியாக நினைவில் நிறுத்தி எளிதாக படிக்கலாம்.
கணிதப் பாடங்களை கூட எளிதாக சம்பவங்களை கொண்டு புரிய வைக்கும் ஆசிரியர்கள் நம்மிடையே உண்டு. பாடங்களை நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய சம்பவங்களை தொடர்புபடுத்தி கற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அதுபோன்று ஆசிரியர்களும் புத்தகங்களை கடந்து கற்றுக்கொடுக்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களை பாடப் புத்தகங்களில் உள்ளவாறு மட்டும் கற்காமல், நமக்கு ஏற்ற வகையில் நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியுமோ அதற்கு தகுந்தவாறு நினைவில் நிறுத்தினாலே போதும். கற்பது எளிதாக மாறும்.
கல்வி மலர் 

செவ்வாய், 5 நவம்பர், 2013

யார் கற்றுத்தருவது?




கற்றல் என்ற வார்த்தைக்கு இருக்கும் வீரியமானது வேறு எந்த வார்த்தைக்கும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் மனிதன் பிறந்தது முதல் தனது இறுதி காலம் வரை ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறான். கற்றலானது தானாக சென்று அறியாவிட்டாலும், சூழ்நிலைகளானது வாய்ப்புகளை ஏற்படுத்தி ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதற்கான சிறு சிறு வாய்ப்புகளையும் அளித்துவிடுகிறது.
தாயிடமிருந்து கற்க ஆரம்பிக்கும் கல்வியானது தந்தை, மூத்தோர், ஆசிரியர்கள், நண்பர்கள், சந்தித்த நிகழ்வுகள், புத்தகங்களில் இருந்து படித்தது என பல்வேறு வகைகளில் வாய்ப்புகள் தானாகவும், நாமே விரும்பியும், விரும்பாமல் சென்றும் கற்றுக்கொள்வதற்கான நிகழ்வுகள் நடந்துவிடுகிறது.
பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்கள் பாடங்களை கற்றுத்தந்தாலும், மாணவர்கள் அதனை பெரியவிதமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிந்த பின்னர் கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தங்கள் வேலை உருவத்தில் வந்து கற்றலுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு வேலைக்கு சென்றவுடன் அந்தப்பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்காக பெரிய நிறுவனங்கள் குறந்த கால பயிற்சியை அளிக்கின்றன. சிறிய நிறுவனங்கள் பயிற்சி என எதுவும் தனிப்பட்ட முறையில் அளிக்காவிட்டாலும், ஓவ்வொரு வேலையாக கற்றுக்கொடுக்கப்பட்டு நன்கு பழகிய பின்னர் குறிப்பிட்ட பணி ஒதுக்கப்படுகிறது.
வேலை தேடி களைத்திருந்த மனமானது புதிய வேலை கிடைத்தவுடன் சோர்வுகள் நீங்கி புதிய உற்சாகத்தில் இருக்கும். அந்த உற்சாகம் மறைந்து போகும் வகையில் தான், வேலைக்கு சேர்ந்த புதிய நாட்கள் பலருக்கும் அமைகிறது. ஏனெனில் பணிச்சுழலுக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் புதியவராக இருப்பதால், ஏற்கனவே இருந்தவர்கள் புதியவரின் குணம், பழக்க வழக்கம், திறன்கள் குறித்து ஏற்கனவே இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே பார்ப்பர்.
அதுவும் ஒரு சில நிறுவனங்களில் புதியதாக சேர்ந்தவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணிகள் ஒப்படைத்தாலும், பணியில் வரக்கூடிய அடிப்படைச் சிக்கல்கள், நடைமுறைகள் குறித்து கற்றுத் தருவதற்கு ஒரு சில பணியாளர்கள் முன் வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் யார் கற்றுத் தருவது?
பணி குறித்த குழப்பமான நிலையில் புதிய பணியாளர் தயக்கமின்றி சக பணியாளர்களிடம் கேட்டு சந்தேகத்தை தீர்ப்பது நல்லது. ஒரு சில நேரங்களில் தாமாகவே முடிவெடுப்பது கெட்ட பெயரை உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது. அதே போன்று ஆரம்பத்தில் செய்யும் சிறு சிறு தவறுகளை வருத்தத்திற்குரிய நிகழ்வாக பாராமல் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக கருதினால் தான் மகிழ்ச்சி தொடரும்.
அதற்காக அனைத்து தவறுகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொன்றின் சூழ்நிலைகள் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தெளிவு இருப்பது அவசியம். ஏனெனில் ஒரு பணி அதற்கான பொறுப்பாளர்கள், அந்த பணியாளர்களின் நிலை போன்றவையும் ஒரு நிகழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வேலைக்கு தயாராகும்பொழுது இளைஞர்கள் இது போன்ற நிலைகளையும் நினைவில் கொண்டு மனதினை தயார்படுத்த வேண்டும். வேலை தான் ஒரே நோக்கம் என்று இருக்கும் இளைய சமுதாயம் வேலை கிடைத்தவுடன் அதற்கடுத்த விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது.
ஏனெனில் பொதுவாக மாணவப்பருவமாக இருந்தாலும், வேலை தேடும் காலங்களாக இருந்தாலும், அதற்குப் பின்னதான வாழ்க்கை எதுவாக இருந்தாலும் "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்ற மனப்பான்மை பெரும்பாலோரிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த மனப்பான்மைதான் கற்றலுக்கு இருக்கும் பெரும் இடையூறு.
சிறிய விஷயங்களில் கவனத்தை செலுத்துவதன் மூலம் நமக்குள் இருக்கும் உற்சாகத்தையும், சுறு சுறுப்பையும் வெளிக்கொண்டு வர முடியும். கவனம் என்பது பதட்டமாகவோ, படபடப்பாகவோ மாறிவிடக்கூடாது. நிதானமும், தெளிவும் தீர்க்கமான பார்வையும் சிறப்பான பணிக்கும், வெற்றிகரமான வாழ்க்கை பயணத்திற்கும் அடிப்படையாக இருக்கும்.
எனவே கற்றல் என்பது மற்றவர்கள் நமக்கு கற்றுத் தந்த காலங்களைக் கடந்த பின்னர், நமக்கான முன்னேற்றத்திற்கு நாமாகவே முன் வந்து கற்றல் என்பது அவசியமாகிறது. கற்றல் தொடரவில்லையென்றால் மனித வாழ்வு இயந்திரத்தனமானதாக மாறிவிடும். ஏனெனில் கற்றல் என்பது உற்சாகம், புதிய தொடக்கம் மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கு அடித்தளமிடும் வளர்ச்சியுமாகும்.
நமக்கான உற்சாகத்திற்கு நாம்தான் தயாராக வேண்டும். எனவே கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுப்பதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்த நாமே நம்மை தயார்படுத்த தயாராவோம்.
கல்வி மலர்