வியாழன், 25 ஜூலை, 2013

கல்வியே எதிர்காலத்திற்கான காப்பீடு




கல்வி என்பது முதலீடு மட்டுமல்ல, நமது வாழ்க்கை முழுவதற்குமான காப்பீடும் ஆகும். கல்வி என்பது மாபெரும் காப்பீடு எனினும் அது பாடங்கள் சம்பந்தப்பட்ட கல்வி மட்டும் அல்ல. வாழ்வில் வெற்றியடைந்த வெற்றியாளர்கள் கல்வியின் உறுதுணையுடன் தான் வெற்றிக் கனியை தக்க வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.
வெற்றியாளர்களை நன்கு படித்த தொழில் வல்லுநர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், தொழில் குடும்பத்தை சார்ந்தவர்கள் என  மூன்று வகையாக வகைப்படுத்தலாம். இந்த மூன்று வகையிலும், அனைத்து வகையான மனிதர்களும் உள்ளடங்கி விடுகிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்  அனைத்து தரப்பினருமே வெற்றியாளர்களாக முடியும் என்பதையே இது காட்டுகிறது.
திறமையே அடிப்படை
ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கு கல்வித் தகுதி மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், விளைவுகளை புரிந்துகொள்வதற்கும், பிறரின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் கல்வி உறுதுணையாக இருக்கிறது.
திறமையான நபர்களை வேலைக்கு அமர்த்தவே நிறுவனங்கள் விரும்புகின்றன. இன்றைக்கு நிறுவனங்கள் "ஒரு நல்ல பொறியாளர் பத்து சராசரி பொறியாளர்களுக்கு சமமானவர்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. தொழில் சந்தைகளில் திறமையான மாணவர்களுக்கே வாய்ப்புகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அப்படியென்றால் படிப்பை இடையில் நிறுத்தியவர்களின் நிலை?
தேடல் அவசியம்
அவர்கள் கல்வியின் துணையில்லாமல் வெற்றி கண்டிருக்கிறார்களா? விடைக்காக சற்று ஆராய வேண்டியது  இருக்கிறது.  பில்கேட்ஸ், மார்க் சூம்பெர்க் போன்றவர்களைப் பற்றி தெரியுமா? இவர்கள்  கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் தான். சாதாரண கல்லூரியில் இருந்து படிப்பை நிறுத்தியவர்கள் அல்ல, உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து படிப்பை நிறுத்தியவர்கள்.
அவர்கள் படிப்பின் தன்மையை உணராதவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களிடம் அதை தாண்டிய தேடல் இருந்தது. அதற்கு கல்வி  தேவையில்லை என்று எண்ணியிருக்கலாம்? அதை கடந்து சாதித்தார்கள் என்றால், அவர்களின் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். அவர்கள் இருந்தது அமெரிக்காவில், அதனால் அவர்களுக்கான தேடலையும், வாய்ப்புக்கான வாசல்களையும் கண்டுகொள்வது சற்று எளிதானதாக இருந்தது.
கல்வி வளர்ச்சி தரும்
பரம்பரையாக தொழில்புரிபவர்களில் வெற்றியடைந்தவர்களும் இருக்கிறார்கள், தோல்வியடைந்தவர்களும் இருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்களின் தொழில் பழகும் விதம் மாறுபடுவதுதான். ஒரு தொழிலை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்வதற்கும், மேல் மட்டத்தில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.
ஆனால் பரம்பரையாக தொழில்புரிபவர்களுக்கு வாய்ப்புகள் மிக எளிதாக கிடைத்து விடுகின்றது. இயற்கையாகவே நிறுவன கட்டமைப்பும், மனிதவளமும் இருக்கிறது. எனவே நிறுவனத்தை வளர்ச்சியின் பாதையில் நவீன முன்னேற்றங்களை காரணிகளாகக் கொண்டு இயங்குவது அவசியமாகிறது. அதற்கு கல்வி அறிவு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
எப்படிப்பட்ட வாய்ப்புகள், வசதிகள் கிடைத்தாலும் அதனை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள கல்வியும், கல்வியினால் கிடைத்த அறிவும் அவசியமாகிறது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் நமக்குள் இருக்கும் கல்வி எனும் பெரும் முதலீடு நம்மோடு இருந்தால் நம் எதிர்காலம் பாதிக்கப்படாது, என்பது தான் உண்மை.

 கல்வி மலர்