திங்கள், 28 ஜூலை, 2014

பயணம்: பல்லவபுரம் சந்தையும் இனிப்புக் கிழங்கும்...

சிறு குறிப்பு

சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்று பல்லவபுரம். பேச்சு வழக்கிலும், பெரும்பாலான ஆவணங்களிலும் தற்போது பல்லாவரம் என்று அழைக்கப்படுகிறது. அரசின் பெயர் பலகையிலும், ஆவணங்களிலும் மட்டுமே பல்லவபுரம் என்று குறிப்பிடப்பட்டாலும், பேருந்துகளில் பல்லாவரம் என்று  குறிப்பிடுவதின் மர்மம் புரியவில்லை.  

பல்லவபுரம் என்றே நாமும் மெய் பெயரால் அழைக்கலாம். மருவியது வேண்டாமே. இந்த ஊர் இன்று நேற்றல்ல 7ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றின் பக்கங்களில் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. பல்லவர்களின் பங்களிப்பின் விளைவாக பல்லவபுரம் என்று இந்த ஊர் இன்றளவும் பெயர் பெறுகிறது. கால ஓட்டம் இந்த ஊரை மேலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றிவிட்டது.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் இவ்வூரின் ஒரு பகுதியில் பயிற்சிக்களமாக உருவாக்கப்பட்ட இடம், தற்போதும் நமது இராணுவ பயிற்சித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் அனைவரும் அறிந்த விமான நிலையம் இதன் எல்லையில் அமைந்திருப்பது, ஊரினை உலக வரைபடத்திலும் குறிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சந்தை

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. அது வெளிப்படுத்தப்படாமல் மறைந்தோ அல்லது மறந்தோ போயிருக்கலாம். ஆனாலும் ஒரு சில பெருமைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றி வைத்திருக்கும். அப்படிப்பட்ட பெருமைகளுள் ஒன்று பல்லவபுரத்தில் கூடும் வெள்ளிக்கிழமை சந்தை. 

ஒரு நூற்றாண்டை நெருங்கும் மரபுவழிமிக்க இச்சந்தை, இன்றும் பெருமளவில் மக்கள் கூடும் இடமாக நிலைபெற்றிருக்கிறது. சந்தை குறிந்து அறிந்திருந்தாலும் நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு பொன்னேரியைச் சேர்ந்த நண்பரால்  சாத்தியமாயிற்று.

 ஊரகப்பகுதியிலிருந்து வந்தாலும், நகர வாழ்வின் அம்சங்கள் நமது பார்வையை நகரின் இயக்கம் சார்ந்தே நம்மை பயணிக்க வைக்கிறது. அதே போன்று சந்தையில் நடை போட ஆரம்பித்தது முதல், இங்கேயும் இப்படியா என்ற மகிழ்ச்சியை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் சந்தையின் சந்தடிகளைவிட பல்வேறு பொருட்களின் விற்பனையின் தாக்கம்.

வளம் தரும் செடிகள்

சந்தையின் ஆரம்பத்தில் காலணிகள், கரும்புச்சாறு கடை, பழக்கடைகளை கடந்து சென்றவுடன் பூஞ்செடிகள், மர நாற்றுகள் என பசுமையினை பரப்பும் செடிகளிண் விற்பனை மும்முர நடந்துகொண்டிருந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றோரு புறம் இது சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்ப தவறவில்லை. 

ஏனெனில் சென்னை வீடுகளால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. சாலை ஓரங்களில் மரங்கள் இருந்தாலும், வீட்டில் மண் தரையையோ, பல வகைப்பட்ட செடி வகைகளையோ காண்பது அரிதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ரோஜா செடிகளை மட்டுமல்லாது மல்லிகை கொடி நாற்றுகளையும், மாதுளம் செடிகளையும் மக்கள் வாங்குவது கண்டு, தனிப்பட்ட நகர பிம்பங்களையும் கடந்து, இங்கே இயற்கையை உயிரோடு வைத்திருக்கும் மனிதர்களின் மாண்பு மகிழ வைத்துவிட்டது.

மின்னணு சாதனங்கள்

சந்தை ஏன் நிலைபெற்று இருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக விற்பனைக்கு வரும் பொருட்களின் பங்களிப்பே முழு முதல் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. வெட்ட வெளியில் எல்.சி.டி. தொலைக்காட்சி 5,000 முதல் கிடைப்பது ஆச்சரியத்தை அளித்தது. கனிணி, பழைய அலைபேசிகள், கனிணி சார்ந்த பொருட்கள் என மின்னணு பொருட்களும் எளிதாக குறைத்து பேசி வாங்கும் வகையிலே உள்ளது.

இனிப்புக் கிழங்கு

மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இனிப்புக் கிழங்கு. பார்வைக்கு சாதாரணமாக இருந்தால் எளிதாக கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அதன் பிரம்மாண்டம் கண்களை அகல விரிய வைக்கிறது. ஏறத்தாழ இரண்டே கால் அடி உயரமும், முக்கால் அடி விட்டமும் கொண்ட உருண்டை வடிவத்தில் இருந்தது அந்தக் கிழங்கு. கொல்லி மலையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், அது முழு விளைச்சலை அடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் விற்பனையாளர் கூறினார்.

இந்த இனிப்புக் கிழங்கு மூட்டு வலி,  உடல் சூடு, செரிமானப் பிரச்சனைகளை தீர்ப்பதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து வாங்குவதாகக் கூறினார். இரண்டு கிழங்குகளை வைத்துள்ள இவர், மூர் சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதாகக் கூறினார். 20 நாட்களுக்கு கெடாமல் இருப்பதால் விற்பனையில் பிரச்சினை இருப்பதில்லையாம். 

ஒரு சிறு துண்டின் விலை 5 ரூபாய். ஆளுக்கொரு துண்டினை வாங்கி உண்டோம். இனிப்பாகவே இருந்தது. அதன் இனிப்பு சுவை இளநீரின் சுவையைப் போன்று இருந்தது. இருந்தாலும் அந்த இனிப்பின் மேல் எனக்கு சற்று சந்தேகமே....

மேலும்...

புதிய, பழைய பாத்திரங்கள், பீரோக்கள், கட்டில்கள், மர மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள், விளையாட்டுப் பொருட்கள், மளிகை சாமான்கள், நடமாடும் தேநீரகங்கள், பழைய காசுகளை விற்பவர்கள், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள், கோழிகள், பறவைகள், அலுவலக உபயோகங்களுக்கான பழைய பொருட்கள், சுத்தியல், கடப்பாறை போன்ற இரும்பு பொருட்கள், கயிறு வகைகள், இசை உபகரணங்கள் என சந்தை பல்வேறு  பொருட்களால் நிரம்பி வழிகிறது.

வழி

பல்லவபுரம் ரயில் நிலையத்திலிருந்து நடந்தால் 5 நிமிடத்தில் சந்தையை அடையலாம். விமான நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் நடந்து செல்லலாம். தண்டவாளத்தின் அருகே தடதடக்கும் ரயில் ஓசையினை மறையச் செய்யும் வகையில் சந்தையின் குரலோசைகள் இருக்கின்றன.

காண ஆவலா?

சந்தை 1 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கடைகளாலும், சாலை முழுவதும் மக்களுமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுகிறது.


வெளிச்சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கும் கட்டணம்



ஞாயிறு, 13 ஜூலை, 2014

மகிழ்ச்சியும், வெற்றியும் பெற சிந்தனை, சுதந்திரத்தை சீர்பட அளிப்போம்



பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்தும், சூழ்நிலைகளைப் பொறுத்தும் மாறுபட்ட அர்த்தங்களைத் தரும். ஆனால் ஒரு வார்த்தை அனைத்து இடங்களிலும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வார்த்தை தான் சுதந்திரம்.
கண்காணிப்பு
ஒரு இயந்திரமானது, அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ப மனித உதவியோடு செய்து முடிக்கின்றது. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான பணியை செய்கிறது. அவ்வவ்பொழுது ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், தேவையான பொருள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
 
செயல்பாடு

மனிதன் தான் கடக்கும் நிகழ்வுகளை, கோர்க்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட வேலைகளை ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டு செய்கிறான். அந்த வேலைகள் திட்டமிடப்பட்ட செயல்களை நோக்கி அவனை நகர்த்துகின்றன. ஒரே செயலை மறுபடி மறுபடி செய்யும்பொழுது ஒரு வகையில் அது எளிதான வேலையாக இருந்தாலும், பலருக்கும் அது விருப்பமிகு வேலையாக இருப்பதில்லை. ஏனெனில் மூளை ஒரே வேலைக்கு மட்டுமே தன்னை தயர்படுத்திக்கொள்வதால் வேறு செயல்பாடுகள் குறித்த சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக ஒரு கைதியின் நிலையில், ஒரே செயல்பாட்டை செயலாற்றும் மனிதனின் சிந்தனை அறிவும் ஒரு குறுகிய செயல்பாட்டிற்குள்ளாக முடங்கிவிடுகிறது.
 
இதனை உணர்ந்தவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகவும், தான் சார்ந்த நிறுவனம் அல்லது இடத்தின் வளர்ச்சிக்காகவும் புதிய செயல்பாடுகளை நோக்கி தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதுவே சுதந்திரத்தை நோக்கிய பயணம். மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையும் இதைப் போன்றுதான் உள்ளது.
 
நெருக்கடி

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடி, மாபெரும் பணிகளை செய்யக்கூடிய நபருக்கு இருக்கக்கூடிய  நெருக்கடிகளை விட மிகவும் அதிகம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் மாணவர்கள் காலை எழுந்தது முதல் படிப்பு, படிப்பு என இரவு தூங்கும் வரை படிப்பை தவிர எதுவும் இல்லை என்ற நிலையிலேயே எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை 14 ஆண்டுகள் கடந்துவிடுகின்றனர்.
 
பள்ளிக்காலத்தில் அதீத கட்டுப்பாட்டுடன் வளரும் மாணவர், கூண்டிலிருந்து விடுபட்ட பறவையானது உலகை மகிழ்ச்சியுடன் வலம் வருவதைப் போன்று, கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கின்றான். இந்த மகிழ்ச்சியும் பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
 
எது சுதந்திரம்?

சுதந்திரம் என்ற ஒன்று அது கிடைக்கும் நபரைப் பொருத்து மாறுபடுகிறது.   ஒரு கட்டுப்பாடற்ற இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், இனிப்புகளை உண்பதையே இலட்சியமாகக் கொண்ட ஒரு சிறுவனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், நன்மை செய்வதற்காக போராடும் ஒரு போராளிக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு.
 
சுதந்திரம் என்பது முழுவதுமாகக் கிடைக்கும்பொழுது அது தவறுகளுக்கே வழிவகுக்கும் என்பது நாம் அறிந்ததே. அளிக்கப்படும் சுதந்திரம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும்பொழுதே அதற்கான உண்மையான அர்த்தம் கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அனைத்து தரப்பினரும் இதுகுறித்து ஏங்கினாலும்,  அதிகமான ஏக்கத்திற்கும், வாய்ப்பிற்கும் ஏங்குபவர்களாகவும், அளிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருப்பவர்கள் குழந்தைகளே.
 
ஏனெனில் கற்கவேண்டியது பாடப்புத்தகத்தை மட்டுமல்ல, அதையும் கடந்து இருக்கிறது என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் பொருளாதார நோக்கம் கொண்டவர்களாக  மட்டுமே குழந்தைகளை உருவாக்குகிறோம். அவர்களின் இதர ஆசைகளை நிராசைகளாக்கி விடுகின்றோம்.
 
முன்னுரிமை

ஒவியனாக வேண்டும் என்று ஆசைப்படும் மாணவனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம், ஆதரவை விட பொறியியல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், ஆதரவு அதிகமாக இருக்கிறது. இருவரையும் ஒரே தராசில் இருபுறமும் வைக்க தயங்குகிறோம். வருமானமே ஒரு மனிதனின் தன்மையை வெளிப்படுத்துவதாக எண்னுகிறோம். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது என்று நம்மை நாமே பணத்திற்கு அடிமையாக்கி விடுகிறோம்.
 
படிப்பையும் கடந்து

குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே முக்கியமல்ல என்பதை உணர்த்தி உறவுகளோடு பழகுவதற்கான உரிமையை அளிப்போம். நமது உறவினர் யார் என்பதனை அறிய பள்ளிக்கு விடுப்பு எடுத்து உறவுகளின் சுக, துக்கங்களில் அவர்களையும் பங்கெடுக்க வைப்போம். ஏனென்றால் இன்றைய குழந்தைகளுக்கு அனுதினமும் சந்திக்கும் வெயில் குறித்த புரிதல்கள் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தத்தை அளிக்கக்கூடியது.
 
வாழ்க்கையின் நிகழ்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களின் கருத்துக்களை அனுதினமும் கேட்டு வந்தாலே அவர்கள் வாழ்வு சிறக்கும். வருங்காலம் அவர்களை பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தள்ளாமல் மகிழ்ச்சியை நோக்கி தள்ளும். கோடி ரூபாய் கொடுத்தும் கிடைக்காத மன நிம்மதி, சிறுசிறு நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும்.
 
சீர்பட செதுக்குவோம்

குழந்தைகளுக்கான சுதந்திரம் அவர்களின் சிந்தனையில் தொடங்குகிறது. சிந்தனைகளை சீர்பட செதுக்கினால் அழகான வாழ்வு மலரும். ஒரேயடியாக கட்டிப்போட்டால் அது மழுங்கிப்போகும். போர்க்களத்தின் சண்டையில் கூர்மையிழந்த வாளுக்கு இருக்கும் மதிப்பானது, துருப்பிடித்து கிடக்கும் வாளுக்கு கிடைப்பதில்லை. மாலையும், மரியாதையும், புகழ் பாடல்களும் போர் வாளுக்கே உண்டு. அதனை உணர்ந்தவர்களாக தேவைப்படும் சுதந்திரத்தை அளித்து குழந்தைகளை வளர்ப்போம்.
- இலா. தேவா 
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25108&cat=1