வருங்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருங்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூன், 2014

விளையாட்டாகிப் போன விளையாட்டு




"காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா" என்று மகாகவி பாரதியார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாடினார். ஆனால் காலை, மாலை, இரவு என அனைத்து காலங்களும் படிப்பாக மட்டுமே ஆகிவிட்டது. இந்த நிலை உருவாக என்ன காரணம்?

தமிழகத்தைவிட  குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இத்தாலி, ஸ்வீடன், போலந்து, பெலாரஸ், பின்லாந்து போன்ற நாடுகள்  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவிலான தங்கப் பதக்கங்களை பெற்று வருகின்றன. ஆனால் அதனை விட பன்மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தகுதிச் சுற்றுகளுக்கே தகுதி பெற முடியாமல் தடுமாறும் நிலையில்தான் இன்றளவும் இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் அடிப்படையிலான தரவரிசையில் 53வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் இடப்பரப்பளவில் 7 வது இடத்திலும், மக்கள் தொகையின் அடிப்படையில் 2வது இடத்திலும் இருக்கும் நமக்கு இது பெரும் அவமானம் இல்லையா.

உலகக்கோப்பை

கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் பெரும் உற்சாகத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது. போட்டிகள் குறித்து ஒவ்வொரு நாளும் அலசி, ஆராய்ந்து வரும் நாம், இந்தியா இதில் பங்கெடுக்க முடியாமல் போனது குறித்து கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து ஒரு வீரர் உருவாக வேண்டும் என நினைத்திருப்போமா.

"விளையாடினால் உடலில் அடிபடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். வெயில் அதிகம்" என்று கூறும் அதே பெற்றோர்தான், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செலவதற்கே மோட்டார் பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பதும் "உடல்நலமே பெரும் சொத்து" என்பதும் நம் முன்னோர்கள் கூறிச்சென்ற உடல்நலம் குறித்த பழமொழிகள். ஆனால் இன்று நாம் சுவரை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்து வருகின்றோம்.

உடற்பயிற்சி

நிகழ்கால இந்தியா "இளம் இந்தியா" என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் வருங்கால இந்தியாவை "நோய்மிகு இந்தியா"வாக மாறிவிடக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 45, 000 கோடி ரூபாய். ஆனால் இதில் பள்ளிக்கூடங்கள் சார்ந்த  உடற்பயிற்சிக்கு எத்தனை ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.

12 முதல் 16 வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம். இப்பருவத்தில் மாணவர்களை நெறிப்படுத்த உடற்பயிற்சி அவசியம் தேவை. ஆனால் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே பள்ளிப் பருவத்தை கடந்து செல்லும் தலைமுறையாக, இந்தத் தலைமுறை இருக்கிறது.

மாணவர் வளம்

தமிழகம் முழுவதும் 56,573 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.  இந்த எண்ணிக்கை மாபெரும் சாதனைகளை படைக்கக்கூடிய அளவில்லா சக்தி கொண்டது. ஆனால் இந்த சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளை தவிர்த்து, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

250 மாணவருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக 180 மாணவர் இருந்தால் இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில் உள்ளது.

ஆசிரியர்கள் இல்லை

23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது. அரசினர் நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்கள் 23,500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையினாலும், விளையாட்டு உபகரணங்கள், உதவிகள் போதுமான அளவில் வழங்கப்படாததும் அரசிற்கு பொருளாதார இழப்பின்மை போன்று தெரிந்தாலும். அனைத்துவிதமான திறமைகளை கொண்டிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழிகாட்டுதல் இல்லாமல் விளையாட்டினை  மறந்தேவிடுகின்றனர்.

வேண்டுகோள்

கடந்த 2013 ஜூன் மாதத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கல்வித்துறை அமைச்சரிடம் "விளையாட்டுக்கென தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம்" என, பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.  கருத்துக்கள் குறித்து எந்த அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது?

கலைக்கல்லூரிகள்

கல்லூரிகள் 2 விழுக்காட்டு இடத்தை விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. இதனை பல்கலைக்கழகங்களும், யூ.ஜி.சி.யும் கண்காணிக்க வேண்டும். அதிலும் ஒரு சில கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள் என்றால் "இந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது, அதனால் இந்த படிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று வேறு ஒரு பாடப்பிரிவை திணிக்கும் நிலை உள்ளது.

இதானால் விளையாட்டு ஆர்வத்துடன் கல்லூரியில் படிக்க வரும் மாணவர் "படிப்பா, விளையாட்டா" என்ற குழப்ப நிலையில் இறுதியில் விளையாட்டை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

முக்கியத்துவம்

"அனைத்து மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு மைதானங்களும் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்க முன்வர வேண்டும்." என்கிறார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர்.

பொறியியல் கல்லூரிகள்


 தங்கள் மாணவர்கள் படித்து வெற்றியோடு வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான கல்லூரிகளும், திறனுள்ளவர்களாக, வேலைவாய்ப்பை பெற தகுதியுள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்று சில கல்லூரிகளும் நினைக்கின்றன. ஆனால் மிகச் சொற்பமான பொறியியல் கல்லூரிகளே "விளையாட்டு வீரர்களாகவும் திகழ வேண்டும்" என்று மிக ஆர்வத்துடன் பயிற்சியை வழங்கி, போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள்.

550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அரசு வழங்கும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 500 இடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு கல்லூரிக்கு ஒரு இடம் என்ற அளவில் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்லூரிக்கு ஒரு விளையாட்டு வீரர் இருந்தால் போதுமா? ஒரு விளையாட்டினை விளையாடுவதற்கு 10 பேருக்கு மேற்பட்ட விளையாட்டுக்குழு தேவைப்படுகிறது. பிறகு எப்படி விளையாட்டு மேம்படும்.

மருத்துவக் கல்லூரிகள்

உடல் நலமிக்க இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மற்றவர்களின் உடல்நலம் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க கற்றுத்தரும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விளையாடுவதற்கான வாய்ப்புகளை அளிப்பதில் பின் தங்கியே இருக்கின்றன.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடின் மூலமே, மாணவர்களுக்கு மருத்துவ துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை உணர்ந்துகொள்ளலாம்.
சரிவிகித வளர்ச்சி
"அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும்" என்ற நோக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதியை முதல்வர் ஒதுக்கீடு செயததாக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கல்வி வளர்ச்சி மட்டும் தனியாக இருப்பது, ஒரு கை மட்டும் நல்ல வளர்ச்சியையும், மற்றொரு கை குறைவான வளர்ச்சியும் பெற்றதற்கு ஈடாகும். உடல்நலம் சார்ந்த உடற்பயிற்சியும் இணைந்தால்தான் அது சரிவிகித வளர்ச்சி.
2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக  பட்ஜெட்

உயர் கல்வித்துறை - ரூ.3,627 கோடி
பள்ளி கல்வித் துறைக்கு - ரூ.17,731 கோடி
இலவச புத்தகங்கள்- ரூ.264.35 கோடி 
இடைநிற்றலைக் குறைக்க - ரூ.55.11 கோடி 
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் - ரூ.585.17 கோடி  
இலவச மடிக்கணினி - ரூ.4,200 கோடி 
உடற்பயிற்சி & உபகரணங்கள் - ?

என்ன செய்யலாம்?
பள்ளி, கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு விளையாட்டு வீரர்களையும் அழைத்து வந்து வீரர்களுக்கு மரியாதையையும், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் கொண்டு வரவேண்டும்.
சி.எஸ்.ஆர். எனப்படும் "கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி" நடவடிக்கைகளில் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொண்டு வருவதற்கு விதிமுறைகள் கொண்டு வரவேண்டும். பெரு நிறுவனங்கள் தங்கள் நிதியில் குறிப்பிட்ட பங்கினை விளையாட்டு மன்றங்களைத் துவக்கி வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உலகத் தரத்தில் புதிய மைதானங்களை உருவாக்க வேண்டும்.
நலிவடைந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டு அவசியம் என்ற நிலையைக் கொண்டு வந்து, மாணவரின் மதிப்பெண் சான்றிதழில் அதனை பதிய வேண்டும்.
வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வேறு மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்களை அழைத்து வரும் நிலையை மாற்றி, விளையாட்டு வீரர்களை பணியமர்த்த வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து துறையிலும் வேலைவாய்ப்பினை அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல் நலம் எனும் மாபெரும் பொறுப்பு அனைவருக்கும் இருந்தாலும், அதனை பேணிக்காப்பதில் அரசாங்கமே முக்கிய பங்காற்றுகிறது. தொற்று நோய் பரவினாலும், தொற்றா நோய் இருந்தாலும் அரசாங்கமே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன் நின்று நடத்தவேண்டிய கடமை இருக்கிறது. எதிர்காலமானது, நலமுடன் கூடிய வெற்றி பதக்கங்களை நாட்டுக்கு அளித்து, உலக அளவில் பெறுமை சேர்க்கும் வீரர்களைக் கொண்டதாக நாடு அமையட்டும்.
- இலா. தேவா
கல்விமலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24723&cat=1

திங்கள், 23 ஜூன், 2014

உற்சாகமாக வாருங்கள்: பொழுதுபோக்குகளையும் வருமானமாக்கலாம்



குழந்தைகளின் மனதில் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி என்று குறிப்பிட்ட ஒரு சில துறைகள் சார்ந்த கனவுகளை விதைக்கிறோம்.
ஆனால் பெரும்பாலும்  அவர்கள் எதிர்காலத்தில் அதனையும் கடந்த ஏதோ ஒரு பணியில்தான் ஈடுபடுகிறார்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுக்கே உண்டான தனிப்பட்ட கனவுகளையும், பொழுதுபோக்குகளையுமே எதிர்காலமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் வெற்றி கண்டு வருகிறார்கள்.

ஒவியம் வரைய வேண்டும் என்று நினைத்த பலர் அவர்கள் தங்கள் ஆசைகளுக்கு தொடர்பில்லாத ஒரு பணியில் வேலை பார்த்து வருவார்கள். விளையாட்டே எதிர்காலம் என்று நினைத்தவர்கள், சூழ்நிலைகளால் விளையாட்டையே மறந்துவிட்டிருப்பார்கள். ஆனால் நிகழ்காலம் அனைவருக்குமான வாய்ப்புகளை திறந்துவிட்டிருக்கிறது. தாங்கள் நினைத்தவற்றை சாதிப்பதற்கான வழிகள் முன்பை விட எளிதாகக் கண்டுகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

பொழுதுபோக்கு துறைகளாக இருந்தாலும் அத்துறையில் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவும், பொருளாதாரத்தை பெருக்கக்கூடிய வணிக அறிவும் தேவைப்படுகிறது. அதனை அளிக்கும் வகையில் பயிற்சிக்கூடங்கள் அல்லது துறை சார்ந்த வல்லுநர்களிடம் நேரடி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தங்கள் எண்ணங்களை நிகழ்வுகளாக்கி சாதனைகள் புரியலாம்.

பொழுதுபோக்குகளை வணிகமாக்க வாய்ப்பளிக்கும் சில துறைகள்

புகைப்படக்கலை
நாடகம்
பங்குச்சந்தை வணிகம்
செயலாற்றும் இயந்திரங்கள் (ரோபோட்டிக்ஸ்)
அசைவூட்டம் (அனிமேஷன்)
இசை
உடற்பயிற்சி
விளையாட்டு
அழகுக்கலை


- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24700&cat=1

ஞாயிறு, 15 ஜூன், 2014

மாற்றங்கள்: நிகழ்வுகளும், விளைவுகளும்

\


மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை கட்டமைப்பை பல்வேறு சூழ்நிலைகளில் நாம் கேட்டிருக்கலாம்.
அந்த வார்த்தைகளை சிந்தித்தும் இருக்கலாம். மாற்றம் என்பது தொழில்நுட்பத்திற்கும், உடை,  வாய்ப்புகள் போன்றவற்றிற்கு மட்டுமே என்பது பலரது எண்ணமாக இருக்கலாம். அல்லது பெரிய மாற்றங்களால் மனது கவலை கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமல் அதன் சாராம்சத்தையோ  பயன்படுத்தியிருக்கலாம்.
எவை மாற்றங்கள்?
அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் மாற்றங்கள் என்பது உடனடியாக நம்மையே மாற்றிப்போடும் பெரும் நிகழ்வுகள் மட்டுமல்ல. நம்மை சிறிது சிறிதாக செதுக்கும் சின்னஞ்சிறிய கருத்துக்கள், நிகழ்வுகள், புரிதல் போன்றவையும் மாற்றங்களே. சிறிய வயதில் பிடித்த உணவு, பொழுதுபோக்குகள், பயணங்கள் போன்றவை இப்போதும் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும், அதனை அப்படியே தொடர்ந்து பின்பற்றுவதில்லை. நம்மிடையே துரித உணவுப் பழக்கங்கள், நவீன தொழில்நுட்பப் பொழுதுபோக்குகள், பெரும் ஓய்வு என தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

பெரும்பாலும் மாறுதலுக்கு மனம் எப்போதும் தயாராக இருப்பதில்லை. ஒரு சில நேரங்களில் முற்றிலும் மறுக்கும் நிலையிலேயே மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால், அரைகுறை மனதுடன் மாற்றங்களை ஒரு வித சந்தேகப் பார்வையின் வழியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் செயல்களே வெற்றிகரமான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.


மாற்றங்கள் நம்மை மாற்றும்


சின்ன  மாற்றங்கள் கூட பெரிய மாறுதலை உருவாக்கும். ஒரு சிறு தீக்குச்சியிலிருந்து வரும் தீயானது பெரும் வெளிச்சத்தை உருவாக்குகிறது. சின்னஞ்சிறு விதையிலிருந்து வெளிவரும் விதையிலைதான் பெரும் ஆலமரத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நாம் அறிந்த முதுமொழி. எனவே எந்த ஒரு செயலையோ, நிகழ்வையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மண்ணில் விழும் முதல் மழைத்துளியானது கோடைகாலத்தின் வெப்பத்தை எல்லாம் தணிக்கும் பெரு மழையாய் மனம் எண்ணும் வகையில் ஆனந்தத்தைத் தருகிறது.


வித்தியாசத்தை உணரவேண்டும்


மாற்றங்கள் நீதி நெறிகளின்படியும், ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கானதாகவோ அல்லது நேர்மையான வழியில் பொருள் ஈட்டித்தருவதாகவோ இருக்கலாம். தவறான பாதையில் நம்மை இட்டுச்செல்லும் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன்னுரிமையோ அல்லது ஆதரவையோ தருவது அழிவிற்கு மட்டுமே இட்டுச்செல்லும். அதேபோன்று ஒருவர் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதற்காக நாமும் அதனை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் மருத்துவரின் கையில் இருக்கும் கத்திக்கும், கயவனின் கையில் இருக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசம் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


அன்றும், இன்றும்


வாழும் நாட்கள் அனைத்தும் நாம் நினைத்தாலும் ஒன்றுபோல் இருப்பதில்லை, இருக்காது. ஆனால் வழக்கமான ஒரு சில நடைமுறைகளில் ஒரு சிலவற்றை மாற்றாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பலர் இருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இருவர் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள் "ஆளே மாறிவிட்டாயே". மாறிவிட்டாயே என்பதற்கான அர்த்தம், உடல் ரீதியானதாகவோ அல்லது உடை ரீதியானதாகவோ அல்லது வாழ்க்கை நடைமுறைகள் சார்ந்ததாகவோ இருக்கலாம். இளம் வயதில் பிடித்தவை, தற்பொழுது வெறுப்புக்குரியதாகவோ அல்லது கடந்த காலத்தின் சிறு பிள்ளைத்தனமான ஆசையாகவோ மாறி இருக்கலாம்.


மாறாமல் இருப்பதும் நல்லதே


எனவே ஒரு மாற்றம் குறித்து முடிவெடுக்கும்பொழுது கடந்தவை, எதிர்கால சூழல்கள் என அனைத்தையும் சிந்தித்து தெளிவான முறையில் மாற்றங்களை நோக்கி சென்றால் அதுவே வளர்ச்சியும் வெற்றியுமாகும். மாற்றங்கள் அனைத்திற்கும் தேவை என்பது போன்று தோன்றினாலும், ஒரு சிலவை மாறாமல் இருப்பதுதான் வருங்காலத்திற்கு நாம் கொடுக்கும் சிறப்பான வரவேற்பாக இருக்க முடியும். குறிப்பாக சத்தான உணவுப்பழக்க வழக்கங்கள், சூழலுக்கு ஏற்ற உடை, இயற்கையோடு இணைந்த வாழ்வு மற்றும் உறவுகளின் தொடர்ச்சி ஆகியவை மாறாமல் இருப்பது வாழ்வை மாறாத மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.


- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24524&cat=1

ஞாயிறு, 18 மே, 2014

சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு


நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம். ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு செயலை அடிப்படையாகக்கொண்டே நடைபெறுகின்றன. அந்த செயல்களுக்கான காரணங்களை ஆராய்வது மிகவும் தேவையாக இருக்கிறது. ஏனெனில் அவைதான் எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்கான பாடங்களை தனக்குள் கொண்டு விளங்குகிறது.
சிறு வயதில் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்கவழக்கங்கள் பிற்காலத்தில் நலமுடன் வாழவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பான பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் சேமிக்கும் பழக்கம். சேமிப்பினை குறித்து சிறு வயதில் இருந்து வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் அறிவுறுத்தி ஊக்கப்படுத்தும் நிலை அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.
 
மகிழ்ச்சியே தொடக்கம்

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட மாணவர்களின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
 
தந்தையிடமோ, தாயிடமோ ஐநூறு ரூபாய் வேண்டும் என அவசியமான தேவைகளுக்கு அவசரமாக கேட்கும்பொழுது கிடைக்காமல் போகலாம். ஆனால்   சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகள் சிக்கலானதாக இருக்க வாய்ப்பில்லை. அவசியமான அவசரத் தேவைகளுக்கு உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே. இது போன்ற நிகழ்வுகளில் சிறு வயதில் ஏற்படும் மகிழ்ச்சி வளரும் பருவத்தில் சேமிப்பின் மீதான ஈர்ப்பினை தொடர்ந்து அதிகரிக்கச் செய்யும்.

வாழ்க்கை உணர்த்தும்
நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் சோறு ஒரே பருக்கையால் ஆனது அல்ல.  எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.
 
ஏனெனில் நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

- இலா. தேவா
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23931&cat=1

புதன், 2 ஏப்ரல், 2014

பொறியியல்தான் படிக்க வேண்டுமா?



ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் முழுமையாக முடிப்பதே ஒரு சாதனை என்ற காலம் மாறி, இன்று பல விதங்களிலும் பெற்ற விழிப்புணர்வு மூலமாக, பெரும்பாலமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மேற்படிப்புக்கும் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு பி.ஏ. பி.காம்., போன்ற படிப்புக்களாகவே இருந்தது. தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்ட காலங்களில் மாணவர்கள் "சிவில் இன்ஞினியரிங்" படிப்பினை அதிகம் தேர்ந்தெடுத்தனர். காலப்போக்கில் படிப்படியாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆரம்பமாயின. ஆரம்பமாகும் கல்லூரிகள் எல்லாம் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஞினியரிங் பாடங்களையே கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு சில கல்லூரிகள் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப படிப்பினை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.
மாற்றத்தை ஏற்படுத்திய தகவல் தொழில்நுட்பத் துறை
ஒரு வித கலக்கத்தோடு தகவல் தொழில்நுட்பத் துறையை தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள் கனவிலும் நினைத்திராத வண்ணம் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு, இதற்கு முன்னர் தங்கள் பெற்றோர், உறவினர், அரசு ஊழியர் என பலரும் 30 வருடங்கள் வேலை பார்த்தும் பெற்றிராத சம்பளம் என ராஜ உபசரிப்போடு வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
ஐ.டி. துறையில் இந்தியாவில் ஏற்பட்ட அபரிவித வளர்ச்சியும், சம்பளமும் மாணவர்களை ஐ.டி. துறையின் பக்கம் இழுத்தது. மருத்துவத்திற்கு மட்டுமே நன்கொடை என்றிருந்த நிலையை ஐ.டி. போன்ற துறைகளை உடைய கல்லுரிகள் மாற்றின. பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் படித்த பின் பெறப்போகும் வருமானத்தைக் கருத்தில் கொண்டு தாராளமாக நன்கொடைகளை வழங்க தயாராயினர்.
வளம் கொழித்த கல்லூரிகள்
பொறியியல் கல்லூரிகள் பணம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக இருப்பதை நன்குணர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தாங்களும் பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்று போட்டி போட்டுக்கொண்டு பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தனர், ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளில் ஐ.டி. துறையும் இணைந்துகொண்டது.
இடையில் ஐ.டி. துறையில் ஏற்பட்ட சிறிய தளர்ச்சி மாணவர்களை ஐ.டி. தவிர்த்து இ.சி.இ., பயோ டெக்னாலஜி போன்ற துறைகளை தேர்ந்தெடுக்க வைத்தது. கல்லுரிகள் பெருகப் பெருக மாணவர்கள் சேர்க்கையும் நிரம்பி வழிந்தது. கலை & அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் படிப்புக்கு பணம் பல மடங்கு அதிகம் செலவானாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ஞினியர் என சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டனர். பொருளாதாரம் தடை புரிந்தாலும் , வங்கிக்கடன் மற்றும் இதர கடன்கள் மூலமாக தங்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றி வந்தனர்.
ஏமாற்றம் தரும் வளாகத்தேர்வு
கற்றவரெல்லாம் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை பெற்றனரா? என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படித்தவர்கள் பலருக்கும் தாங்கள் எடுத்து படித்த துறைக்கு ஏற்ற வேலை எங்கு கிடைக்கும் என்பதே தெரியாமல் இருக்கின்றனர். இந்த குறையை போக்க பல கல்லூரிகளும் வளாகத்தேர்வு மூலமாக மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து நன்கொடையின் அளவை அதிகரித்தன. ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் போகப்போக அதுவும் ஒரு ஏமாற்று வேலையாக மாறிப்போயின.
பல கல்லூரிகளில் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் உடனடியாக பணியமர்த்தப்படாமல் காலம் தாழ்த்தி பணியமர்த்தப்பட்டனர். அதுவும் மாறி அடுத்த மாதம், அதற்கு அடுத்த மாதம் என காத்திருந்து படித்து முடித்து ஒராண்டாகியும் வேலை பெறாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகம். அது போக பெரிய நிறுவனத்தில் வேலை என்று கூறி தேர்ந்தெடுத்து அந்த பெரிய நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தாமல், அந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் சிறு வேலைகளை செய்யும் குறு நிறுவனங்களிலும், பிபிஒ சென்டர்களிலும் குறைந்த  சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படும் அவலமும் தொடர்ந்து நடந்து வருகிறது.
துறை மாறும் பொறியியலாளர்கள்
பொறியியல் படித்த பலர் தாங்கள் படித்த துறைக்கு சம்பந்தமே இல்லாமல் இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காகவா பல இலட்சம் செலவு செய்து பொறியியல் படித்தனர்.  அதற்கு பதிலாக பல ஆயிரங்கள் செலவு செய்து கலை & அறிவியல் கல்லூர்களில் படித்திருக்கலாமே. சரியான வழி நடத்துதலும், சிந்தனையுமின்றி துறை ரீதியான தேவைகளை கருத்தில் கொள்ளாமலும் பல மாணவர்கள் பொறியியலை தேர்ந்தெடுக்கின்றனர்.
தேவைகள் பல துறைகளிலும், பல படிப்புகளிலும் கொட்டி கிடக்கின்றது. முன்பு ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு இருந்த முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து பொறியியலின் பக்கம் அனைவரின் முழுக் கவனத்தையும் செலுத்த வைத்துவிட்டது.
எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் அதிக என்ணிக்கையில் தொடங்கப்பட்ட கல்லூரிகளால், கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு குறைந்த உள் கட்டமைப்பு வசதிகளும் தரமின்மையும் ஒரு காரணமாகும்.
பொறியியலைக் கடந்து..
மனிதன் வாழ பொறியியலைப் போன்று கலை, அறிவியல், மருத்துவம், சுகாதாரம் என அனைத்து துறைகளுமே தேவைப்படுகிறது. எனவே அத்துறைகளையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். பெரு நகரங்கள், தொழில் நகரங்கள் தவிர்த்து மற்ற நகரங்களில் எத்தனை பொறியியலாளர்களுக்கு வேலை காத்திருக்கிறது? மற்ற நகரங்களில் பிற படிப்புக்களை படித்தவர்களுக்குத் தாம் அதிகம் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொள்ளாமல் நாம் பொறியியல் மட்டுமெ நோக்கம் என எண்ணுவது தவறு. அதற்காக பொறியியலே படிக்க வேண்டாம் என்று இல்லை.
10 பேர் குடியிருக்கக்கூடிய வீட்டில் 50 பேர் குடியிருக்க முடியுமா? முடியாதல்லவா. எனவே நாம் படிக்கும் படிப்பை தேர்ந்தெடுக்கும் போது பெற்றோர் சொன்னார்கள், என் நண்பன் இந்த படிப்பை எடுத்திருக்கிறான், இப்பொழுது இந்த துறை படித்தவர்களுக்குத்தான் வேலை என்றெல்லாம் பாராமல் 
எந்த துறையில் தன்னால் சாதிக்க இயலும்?
அடுத்து வரும் ஆண்டுகளில் எந்தத் துறை சிறந்து விளங்கும்?
எந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன்?
அந்த ஊரில் வாழ எவ்வளவு ஊதியம் தேவை?
என பல கேள்விகளுக்கும் விடை கண்டு தகுந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் தேவையின்றி பொருளாதார இழப்பு, கால விரயம், மன நெருக்கடி போன்றவை ஏற்படாமல் நல்ல, மகிழ்வான வேலை வாய்ப்பைப் பெறலாம்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23270&cat=1

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கற்றல்: வளர்ச்சிக்கான முதல் படி


மனித வாழ்வானது கற்றுக்கொள்வதின் அடிப்படையிலேயே வளம் பெறுகிறது. கற்ற நல்லவற்றை செயல்படுத்தியதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் சாதனைகள் புரிந்தவர்கள்தான், மற்றவர்களின் வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றனர்.
கற்கும்பொழுது நாம் விரும்பாவிட்டாலும் நல்லவற்றோடு, கெட்டவற்றையும் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில் மிகத் தெளிவுடன் கற்றலை அணுக வேண்டியது இருக்கிறது.
கற்றலை முழுமையடைய வைப்பவையாக கவனித்தல், நினைவில் நிறுத்துதல், இவற்றின் மூலம் அடையக்கூடிய நிலை போன்றவை இருக்கிறது. ஒன்றை கற்றால் மட்டுமே அதனை செயல்படுத்த முடியும். அதே நேரம் சிறப்பாக கற்றவர்களால் மட்டுமே, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். கற்றல் என்பது ஒரு நிலையோடோ அல்லது குறிப்பிட்ட மனிதர்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவோ நின்றுவிடக்கூடியது அல்ல; தொடர்ந்து தலைமுறைதோறும், காலங்களைக் கடந்தும் மெருகேறுவதாகவே இருக்கிறது.
கவனித்தல்
ஒன்றை கற்றுக்கொள்கிறோம் என்றால்,  அதில் ஈடுபாடும், புரிதலும் இருந்தால்தான் ஆர்வத்துடன் கவனிக்க முடியும். ஒன்றில் ஈடுபாட்டை கொண்டு வருவது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய செயல் அல்ல. ஏனெனில் "மனித மனம் குரங்கைப் போன்றது, அது ஒரே சிந்தனையில் நிலையாக இருக்காது" என்று பெரியவர்களும், படித்த புத்தகங்களும் கூறும் கருத்தாகும். இப்படிப்பட்ட மனதினை ஒரு நிலைப்படுத்தி பாடங்களை கவனிக்க வைப்பதுதான் முக்கியமானது.
நினைவில் நிறுத்துதல்
கவனித்த நிகழ்வுகள் எல்லாம் எப்போதும் நினைவில் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு கவனிக்கும்பொழுது புரிந்த மாதிரி தெரிந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு கற்ற தகவல் மெதுவாக மறந்து விடும். இப்படிப்பட்ட நிலையில், கற்றதை மீண்டும் நினைவுபடுத்தவோ அல்லது புரிய வைக்கவோ வேண்டியது இருக்கிறது. தொடர்ந்து நினைவில் இருப்பதுதான் கற்றல் முழுமை அடைவதற்கான நிலை. முழுமையாக நினைவில் இருந்தால்தான் புரிந்துகொண்டதை அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க முடியும்.
நினைவுத் திறனே ஒருவரின் அடுத்த இலக்கை நோக்கிய செயல்பாடுகளை  வெற்றிகரமாக்க துணை புரிகிறது.
கற்பதில் இருக்கும் ஆர்வம் வளர்ச்சியை உண்டாக்குகிறது. வளர்ச்சி அறிவியல், ஆற்றல், வாழ்வியல் என அனைத்திலும் புதிய உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23259&cat=1

வியாழன், 27 மார்ச், 2014

ஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்



12 ஆம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது. இனி அடுத்து படிக்கப்போகும் படிப்பைப்பற்றியோ, அல்லது எதிர்காலம் என்ன என்பது பற்றியோ வீட்டிலும், நண்பர்கள் மத்தியிலும், சந்திக்கும் நபர்களிடமிருந்தும் பலவிதமான ஆலோசனைகள் இலவசமாக கிடைத்தவாறு இருக்கும்.
நன்கு படித்த மாணவ மாணவிகள் பெரும்பாலும் இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்பதில் ஓரளவு தெளிவான முடிவுகளுடன் இருப்பர். இருந்தாலும் கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பங்கள் இருக்கும். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று சராசரி படிப்புடைய மாணவ மாணவிகள் பலரும் இருப்பார்கள்.
சூழ்நிலை
குறைவான மதிப்பெண்கள் எடுத்த பலரும் பொருளாதார வசதியின் காரணமாக நன்கொடைகளை வழங்கி நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்துவிடுகின்றனர், அதே போன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்த சிலர், கல்விக்கட்டணங்கள் மற்றும் கல்லூரியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களால் செலவு செய்ய முடியாது, என்று வேறு படிப்புகளில் படிக்க வைப்பதும், அல்லது வேறு கல்லூரியை தேர்ந்தெடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நல்ல இலட்சியங்களுக்கும், சிறப்பான சாதனைகளுக்கும்  பொருளாதாரம் எப்பொழுதும் தடையாக இருந்துவிடுவதில்லை, என்பது பெரும் சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து நாம் கற்றிருக்கிறோம். பணம் இருக்கிறது என்பதற்காக படிக்க முடியாத பாடத்தை எடுத்துவிட்டு, அரியர்களுடன் பொழுதையும், பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கும் எத்தனையோ பேரை நாமும் கண்டிருப்போம். பணம் இருக்கிறது என்றாலும், இல்லை என்றாலும், பெருமைக்காக படிக்காமல் தன்னால் முடிந்ததை படிக்கவேண்டும் என்பதை உணர வேண்டும். தன்னால் படிக்க முடிந்தது பொருளாதாரத்தால் தடை பட்டால் என்ன செய்வது?
பொருளாதாரம்
இன்றைக்கு நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது. வங்கிக்கடன் மூலம் தான் விரும்பும் படிப்பை படிக்கலாம். இருந்தாலும், சில வங்கிகளின் சில நிபந்தனைகள் அதையும் எட்டாக்கனியாக்கிவிடுகின்றது. சில நல்ல உள்ளங்களின் உதவியோடும், அறக்கட்டளைகளின் உதவித்தொகையின் மூலமும் சிலர் படிப்பைத்தொடர்கின்றனர்.
இவை தவிர்த்து தற்போதைய கல்லூரி நேர மாற்றங்களின் விளைவாக கூடுதலான நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை பெற்று அதனால் கிடைத்த பொருளாதாரத்தைக் கொண்டு முடிந்த அளவு கல்விச் செலவுகளை ஈடு செய்ய முயற்சிக்கலாம். இவை யாவும் கை கூடவில்லை என்றாலும், மனம் தளராமல் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், கிடைத்த வாய்ப்பில் எது தனது விருப்பத்திற்கு ஏற்ற படிப்பினை சார்ந்து வருகிறது என கண்டுபிடித்து, அதனை வெற்றிகரமாக படித்து, பிறகு அதன் மூலம் பெறக்கூடிய பலன்களைக் கொண்டு தனது சரியான எண்ணங்களின் வழியாக வெற்றி நடை போடலாம்.
குழப்பங்கள்
படிப்பினை தேர்ந்தெடுத்து வைத்திருப்பவர்களை விட, மதிப்பெண்கள் வந்தவுடன் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்குத்தான் பல குழப்பங்கள் வரும். ஏனெனில் கல்லூரியை தேர்ந்தெடுப்பதா? அல்லது பாடத்தை தேர்ந்தெடுப்பதா? அல்லது பாடத்திற்கு ஏற்ற கல்லூரியை தேர்ந்தெடுப்பதா? எந்த ஊரில் படிப்பது? என பல கேள்விகள் அதிக அளவில் இவர்களை துளைக்கும். ஏனெனில் பலரும் ஏன் படிக்கிறேன், எதற்கு படிக்கிறேன் என்று தெரியாமலேயே படிப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்த பெரிய கவலையோ, கலக்கமோ இன்றி இறுதியாண்டு வரை வந்துவிடுகின்றனர். இறுதியாண்டில் வேலை, அடுத்து என்ன செய்வது என்பது போன்ற சிந்தனைகள் வரும்போதுதான், தங்கள் படிப்பைப்பற்றி பெரிய அளவில் சிந்திக்கின்றனர். அப்படி சிந்திப்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களே.
இப்படிப்பட்ட குழப்பத்தில் உள்ளவர்கள் எந்த ஓரு சூழ்நிலையிலும் அதிக செலவுகளை ஏற்படுத்தும் பொறியியல் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது. சில இலட்சங்கள் செலவு செய்துவிட்டு, அந்தத் துறை பிடிக்கவில்லை, என அதனை விட்டுவிட்டு வேறு துறையை தேர்ந்தெடுப்பது மிகவும் வலி தரக்கூடியது. ஆம், ஏனெனில் பெற்றோர் ஓவ்வொரு பருவத்திற்கும் எவ்வளவு கடினப்பட்டு பணம் ஏற்பாடு செய்து தர வேண்டியது இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.  பிள்ளையின்  எதிர்காலம் பற்றிய மகிழ்வான எண்ணத்துடன் பல நெருக்கடிகளைச் சந்தித்து கடன் பெற்று, எவ்வளவு ஆசையுடன் நம்மை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களை துன்பப்பட வைத்து படித்துவிட்டு, வேண்டாம் என்று சொல்வதை விட, நிதானத்துடன் தயக்கம் குறைத்து நல்ல ஆலோசனையைப் பெற முயற்சிக்கலாமே.
தோல்வி
எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்ததை விடவும், மிகுந்த துன்பத்தை தரக்கூடியதாக கருதப்படுவது தேர்வில் தோல்வி அடைவதாகும். தோல்வி அடைவதனால் ஏற்படும் கவலையை விட, அந்த தோல்விக்கு பிறர் கூறும் அறிவுரைகள், மேலும் பயத்தை உண்டாக்கி விடுகிறது. அது போல சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள், தேர்வில் அடையும் தோல்வியை, தங்கள் குடும்பத்தின் தோல்வியாக கருதி, தோல்வியடந்த உள்ளத்தை மேலும் காயப்படுத்திவிடுகின்றனர். உண்மையில், வாழ்வும் வாய்ப்பும் அத்துடன் முடிந்துவிடுவதில்லையே. பள்ளி செல்லாதவர்கள் எல்லாம் சாதிக்கும்பொழுது, தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சாதிப்பதும் எளிதானது அல்லவா.  
தோல்வியை மான, அவமானமாகக் கருதுவதை பெற்றோரும், உறவினர்களும், மாணவர்களும் கைவிட வேண்டும். தோல்வி என்பது நிலையானது அல்ல, கடந்து வரக்கூடியதுதான் என்று எண்ண வேண்டும். தேர்வில் ஓருவேளை தோல்வி அடைந்தாலும், மாணவர்களும், இத்துடன் நம் எதிர்காலம் முடிந்துவிட்டது என் சிந்திக்காமல் அடுத்து வரும் வாய்ப்புகள், தங்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்று நம்பிக்கையும், விடா முயற்சியும் கொள்ளவேண்டும்.
மதிப்பெண்களை வைத்து வாழ்க்கை இல்லை என்பதை பெற்றோரும், மாணவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய நல்ல விருப்பங்களை, இலட்சியங்களை வைத்துதான், தங்களுடைய சிறப்பான எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். மதிப்பெண்களை வைத்து அல்ல. உற்சாகத்தையும், ஊக்கத்தையும் என்றும் கைவிடாமல் போராடினால், வெற்றி நமதே!
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23213&cat=1

வியாழன், 6 மார்ச், 2014

சுமைகளிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை...



பள்ளியில் படிக்கும் காலத்தில் எடை அதிகமானதும், பெரிய அளவிலுமான புத்தகப் பைகளை சுமந்து செல்லும் மாணவர்களை சில வருடம் முன்பு வரை பார்த்திருக்கலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு பைகளின் அளவு சற்று குறைந்திருந்தாலும், முன்னர் இருந்த நிலைக்கு பெரிய மாற்றம் இல்லை என்ற நிலையிலேயே தான் பைகளின் அளவு இருக்கிறது.
மாணவர்களின் பைகளில் புத்தகங்கள், எழுது பொருட்கள் பெட்டி,  ஜாமெட்ரி பாக்ஸ் (கணித வடிவியல் பெட்டி),  ஓவிய பொருட்கள் என இருக்கும்.  மேலும் ஒரு சில மாணவர்களின் பைகள் கதை புத்தகங்கள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என பல வகையான பொருட்களால் நிரம்பி இருக்கும். மாணவர்களுக்கு மாணவர்கள் இது வேறுபட்டாலும் கொண்டு வரும் பொருட்கள் அதிகம் என்பது பொதுவான ஒன்று.
ஒன்று போதும்
ஆனால் கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஒரு நோட்டு, ஒரு எழுதுகோல் என மாணவர்களின் பொருட்களின் அளவு மிகவும் சுருங்கி விடுகிறது. அதிலும் ஒரு சில மாணவர்கள் ஒன்றிரண்டு தாள்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்துவிடுகின்றனர். அப்படி வரும் மாணவர்களிலும் பேனாவை ஒழுங்காக கொண்டு வராத மாணவர்கள் வகுப்பிற்கு 2 பேராவது இருக்கும் நிலை பல கல்லூரிகளில் காணப்படுகிறது.
கல்லூரியில் நோட்டின் தேவை என்பது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது மாணவர்களின் நினைப்பாக இருக்கிறது. "குறிப்பெடுக்க விருப்பமில்லை என்ற போது, நோட்டு எதற்காக கொண்டு வர வேண்டும்?" என்பது மாணவர்களிடமிருந்து வரும் கேள்வி.
உதவும் தொழில்நுட்பம்
நோட்டு மற்றும் பேனாவுடன் எளிதாக உடன் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு சில பொருட்கள் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். அவற்றில் முதலாவது நம்முடன் இருப்பது அலைபேசி. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடையே "ஸ்மார்ட் ஃபோன்" பயன்படுத்தும் பழக்கம் பரவலாகி வருகிறது. இது போன்ற நவீன அலைபேசிகளில் பேசுவதை பதிவு செய்யும் வசதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதான செயலாக இருப்பதில்லை. அலைபேசிகளில் பல செயலிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
மாணவ மாணவியரிடையே புதிய தொழிநுட்பம் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் தங்களையும் மாற்றிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் சட்டைப் பையில் அல்லது காற்சட்டையில் வைக்கக்கூடிய வகையில் இருப்பது "பென் டிரைவ்" அல்லது "மெமரி கார்டு" தகவல்களை பெற்றுச் சென்று கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பயன்படுத்தி பாட சம்பந்தமான தகவல்களைப் பெறலாம்.
தேவைக்கு மட்டும்
மாற்றங்கள் பாடப்புத்தகத்திற்கான சுமைகளை குறைத்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்களே அவற்றை எளிதாக மாற்றியிருக்கலாம்.  தொழில்நுட்பங்களை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தொழில்நுட்பம் இல்லாமலும் பழக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொழில்நுட்பங்கள் மிகவும் தேவையாக இருக்கின்ற நேரத்தில் செயல்படாமல் நம்மை ஏமாற்றலாம். அதற்கு ஏற்ற வகையிலும் தயாராக இருக்க வேண்டும்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22929&cat=1

புதன், 12 பிப்ரவரி, 2014

நலமான வளத்தை தரும் வாசிக்கும் பழக்கம்




பொழுதுபோக்கு அம்சங்கள் பெருகப்பெருக பொழுதினை போக்குவது எளிதானதாகிவிட்டது. ஆனால் கடந்து சென்ற பொழுதுகள் கற்றுத்தந்தது என்ன என சிந்தித்தால் பலன் ஒன்றும் மிஞ்சியிருக்காது. இதற்கு முக்கிய காரணம் பயன்தராத பொழுதுபோக்கு அம்சங்கள்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினர் வளர்ச்சியை விரைவாக அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நிதானமாக, தெளிவுடன் ஒரு செயலை செய்து படிப்படியாக அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை மாறி வருகிறது. வாய்ப்புகள் இருக்கிறது வளமாகிக்கொள்வோம் என்று நினைப்பதில் தவறில்லை என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் நல்ல வழியை கொண்டது என்று சொல்ல முடியாத நிலையில் இன்றைய உலகின் நிலை இருக்கிறது.
நகர வாழ்க்கையின் நெருக்கடிகள் பணத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.  பொருளாதாரத்தால் சாதித்தவர்களை கண்டு பிறரும் அந்த பாதையை பின்பற்ற தொடங்குகின்றனர். வாழ்க்கையே பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும்தான் என்ற நினைப்பு மேலோங்கி இருக்கிறது. பொருளாதாரத்தைக் கடந்த வாழ்வியலை மறந்துகொண்டிருக்கிறோம்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அதிகமான ஊதியத்தை தரக்கூடிய படிப்பு, வேலையை வரவேற்கும் வகையில் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்கின்றனர். இதற்கு முக்கிய அடிப்படைக் காரணமாக "பொதுநலன், இரக்கம் போன்றவை குறைந்து வருவதும், சுயநலன் பெருகி வருவது" போன்றவை இருப்பதாக உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பொதுநலன், இரக்கம் போன்றவை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி இருக்க வேண்டும் அல்லது அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்து வரும் வேளையில் சூழ்நிலைகள் இயற்கையாகவே அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. வளரும் இளம் தலைமுறைக்கு தேவையானதை கற்றுக்கொடுப்பதின் மூலமே சுயநலத்தை இல்லாததாக்க முடியும். கற்றுக்கொடுத்தல் என வரும்பொழுது அதில் பெரும் பங்கு வகிப்பது புத்தகங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தெரிவதைப்போல் தெரிவதை மாற்றக்கூடிய திறன் புத்தகங்களுக்கு உண்டு. ஏனெனில் புத்தகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பார்வையையோ, கருத்துக்களையோ, கொள்கைகளையோ கொண்டிருப்பதில்லை. அவை மாறுபட்ட கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கும் பணியை வெற்றிகரமாக செய்கிறது. ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டோம் என்றால் அந்த புத்தகம் நாம் விரும்பும் நேரமெல்லாம் அதன் கருத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. மற்றொரு புத்தகத்தை படிக்கும்பொழுது அது வேறு ஒரு கோணத்தில் இந்த உலகை பார்ப்பதற்கு உதவி செய்கிறது.
படித்த மாறுபட்ட புத்தகங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. சிந்தனை தேடுதலை உன்டாக்குகிறது. தேடுதல் நாம் அறிந்திராத பல கண்டுபிடிப்புகளை நம்மை கண்டுகொள்ள வைக்கிறது. ஒரு இயல்பான வாழ்க்கை முறையை மாற்றி செயல்திறன் வாய்ந்த புதிய வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லும் பணியை புத்தகங்கள் சிறப்புற செய்கின்றன. நாம் சந்தித்திராத மனிதர்களின் வாழ்க்கையை, தெரியாத அறிவியலை, புரியாத வரலாற்றை, உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கலையை, மரபுகளை புத்தகங்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
இளம் தலைமுறைக்கு மின் சாதனங்களிலிருந்து விடுதலை அளித்து புத்தகங்களை கையில் எடுக்க வைப்பது அவசியமாக இருக்கிறது. கண்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பைத் தரும் அவற்றை விட்டு, புத்தக வாசிப்பு பழக்கத்திற்கு அழைத்து வருவது ஒரே நாளில் வந்துவிடாது. அதனை சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.
வாசிக்கும் திறனை மேம்படுத்த குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு, ஆரம்பத்தில் படங்கள் நிறைந்த புத்தகத்தை அளித்து, விளையாடுவதற்கு அளிக்கலாம்.  தொடர்ந்து படிப்படியாக படக்கதைகள் அடுத்து புத்தகங்கள் என மேம்படுத்தலாம். இளம் வயது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடம், துறை, கதைகள் குறித்த புத்தகங்கள் வாங்கி தினமும் 10 நிமிடமாவது ஒதுக்கி வாசிக்க ஆரம்பிக்கலாம். நிச்சயம் முன்னேற்றம் காணப்படும்.
எல்லோருக்கும் அவசியமானது தினந்தோறும் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வது. நாளிதழை படிப்பதன் மூலம் வாசிக்கும் ஆர்வம் நிச்சயம் அதிகமாகும். ஆரம்பத்தில் விருப்பமான செய்திகளை மட்டும் படிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல மற்ற செய்திகளையும் படிக்க தோன்றும். இதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வு புத்தக வாசிப்பிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
புத்தக வாசிப்பானது விழிப்புணர்வு, சிந்தனை, ஆர்வம், ரசிக்கும் தன்மை, ஆராயும் குணம், மனிதத்தன்மை, போராட்ட குணம் என வாழ்வியலின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு களம்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22569&cat=1

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை




பயணங்கள் நமக்கு அளவில்லாத பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. மனிதனின் வாழ்க்கையில் இடப்பெயர்வானது பிறந்தது முதல் ஆரம்பித்துவிடுகிறது. மருத்துவமனை, வீடு, பள்ளிக்கூடம், பயிற்சி மையம், கல்லூரி, நிறுவனம் என ஒன்றிலிருந்து ஒன்றாக கிளை விட்டு வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. நகர்தல் பெரும்பாலும் இறுதியில் நகரத்திற்கு அழைத்து வந்துவிடுகிறது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்பொழுது புதியவற்றை கற்றுக்கொள்கிறோம். புதிய நண்பர்களை கண்டுகொள்கிறோம். நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு நாள் முழுவதற்குமான செயல்பாடுகளில் முந்தைய இடத்திற்கும், புதிய இடத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏற்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவராக இருந்தால் புதிய நண்பர்களுடன் ஆட்டோவில், பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பும், புதிய நட்பும் உருவாகிறது. மனது புதியவற்றோடு, பழைய இடங்கள், அங்கிருந்த நண்பர்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்க்கிறது. சில காலங்கள் முடிந்த பிறகு புதிய இடம் நம்மோடு நெருக்கமாகிவிடுகின்றது.  பள்ளிக் காலத்தை பொறுத்த வரை 5 லிருந்து 6ஆம் வகுப்புக்கும், 10லிருந்து பதினோறாம் வகுப்பிற்கு மாணவர்கள் செல்லும்பொழுதும் "நண்பர்களை பிரிகிறோமே" என்ற வருத்தம் மாணவர்களிடையே அதிகமாகிறது.
வேறு வகுப்பிற்கு சென்ற பிறகு, மதிய உணவு இடைவேளையில் பழைய நண்பர்களோடு சாப்பிடும் நேரங்கள் மகிழ்ச்சியானவை. "என்னுடைய வகுப்பில், நமது பழைய வகுப்பைப் போன்று பழகுவதற்கு இனிமையானவர்கள் இல்லை" என நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது பிரிந்த பொழுதுகளில் நடக்கும். கல்லூரியை நோக்கிய பயணம் நட்பின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது.
பள்ளிக்காலம் ஒரு அடிப்படையை நமக்குள் உருவாக்கியிருக்கும். கல்லுரிக்காலம் வாழ்க்கைப் பயணத்திற்கான தெளிவை உண்டாக்குகிறது. எதிர்காலத்திற்கான முடிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு சிறிதளவாவது  கலந்து இருக்கிறது. நண்பர்களிடமிருந்து நல்ல பழக்க வழக்கங்களையும், கெட்ட பழக்க வழக்கங்களும் ஒட்டிக்கொள்ளும் காலமும் இந்தக் காலம் தான். தன்னிடம் புதிதாக வந்திருக்கும் பழக்கம் நன்மைக்கானதா அல்லது தீமைக்கானதா என்று மனம் ஆராய்வதில்லை மாறாக "நண்பர்களோடு இருக்கிறோமே அதுவே மகிழ்ச்சி" என்றுதான் மனம் திருப்தி கொள்கிறது.
பணிபுரியும் காலத்திலும், அதன் பிறகான வாழ்க்கையிலும் படிக்கும்பொழுது உருவான நண்பர்கள் நல் ஆலோசகர்களாகவும், கவலைகளை பகிர்ந்துகொள்வதற்கான நல்ல வடிகாலாகவும், முகியமாக மகிழ்ச்சியையும், மனதில் இளமையையும் உருவாக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறார்கள். நட்பிற்குள்ளாக ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் பெரிதாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு நண்பர்களுக்கு இருக்கிறது. நட்பின் பெயரால் வன்முறையையும், தவறான பாதையையும் தேர்ந்தெடுப்பது முன்னேற்றத்திற்கான தடைக்கல்.
நமது பெற்றோர் நம் மீதான நம்பிக்கையில் நமக்கு முடிவுகளை எடுப்பதற்கு உரிமை அளித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை. நட்பு தேவைகளை மையப்படுத்தி இல்லாமல் உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும், நாட்டிற்கும் சமுதயத்திற்கும்  நன்மை விளைவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22521&cat=1

செவ்வாய், 28 ஜனவரி, 2014

குழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே...


குழந்தைகள் திறனுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. குழந்தைகளை செயல்திறன் உள்ளவர்களாக மாற்றுவதற்காக ஒவ்வொரு பெற்றோரும் எடுக்கும் முயற்சிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. குழந்தைகளின் வருங்காலம் கல்வியையும் கடந்து வெற்றிகரமாக அமைவதற்கு ஒரு சில முயற்சிகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். அவை...
தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்
தன்னம்பிக்கைதான் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய சிந்திக்கும்பொழுதே, தன்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், தன்னால் சரிவர செய்ய முடியுமா போன்ற எண்ணங்கள் குழப்பத்திற்குள்ளாக்கலாம்.
அது போன்ற நேரங்களில், சிறு வயதில் தங்கள் குழந்தைகளைப் போன்று இருந்து  பிற்காலத்தில் சாதித்தவர்களின் வரலாறுகளை  எடுத்துக்கூறி அவர்களாலும் எளிதாக சாதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்துங்கள். உங்களோடு உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து,  நேரடியாக இல்லாமல் மறைமுகமாக குழந்தையின் திறமைகள் குறித்து குழந்தைகளுக்கு முன்னால் உற்சாகமாக பேசுங்கள். இது குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.  
நண்பர்களை உருவாக்கிக்கொடுங்கள்
தனது பெற்றோருடன், உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூற முடியாததை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் ஒரு நபராக மட்டும் நண்பர்கள் இல்லாமல், பொதுவான குணங்களை மெருகேற்றுவதற்கும், விளையாட்டு, கூடுதல் திறன்களை வளர்த்தல், பயிற்சிகள் போன்றவற்றில் தோள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.
குழந்தைகளின் வளர்ச்சியில் நண்பர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. "உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்" என்பது நாம் அறிந்த பொன்மொழி. நண்பர்கள் இல்லாதவர்கள் தங்கள் எண்ணங்களை மனதிற்குள்ளாகவே வைத்து மன நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். நல்ல நண்பர்கள் உடையவர்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுகின்றனர். நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாதன விளையாட்டுப் பொருட்களின் உதவியுடன் தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர். இதன் மூலம் வெளி உலகத் தொடர்புகள் இயற்கையாகக் கிடைப்பதில்லை. நண்பர்கள் ஒரு தொடர்புச்சாதனமாக பயன்படுகிறார்கள்.
குழு செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்
நண்பர்களோடு இணைந்து விளையாடுவதற்கு அனுமதி அளியுங்கள். நடனம், சேவை சார்ந்த செயல்கள், நாடகம் போன்றவற்றில் பங்குகொள்வதற்கு உற்சாகம் அளியுங்கள். ஏனெனில் குழுச்செயல்பாடுகள் மற்றவர்களை அறிந்துகொள்ள உதவும். மேலும் பல்வேறு எண்ணங்கள் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் பல பாடங்களை கற்றுத் தரும். ஒற்றுமையுணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் வருங்காலத் தலைமுறைக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு குழு செயல்பாடுகள் தான் துணை புரியும்.
தலைமைப் பண்பை உருவாக்குங்கள்
முடிவெடுத்தல் தான் ஒரு மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது. தானாக முடிவெடுக்கும் நிலையை குழந்தைப்பருவத்திலேயே வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் எதிர்காலம் குறித்த பயம் நீங்கி, எதையும் சந்திக்கும், சாதிக்கும் துணிச்சல் அதிகமாகும். சிறிய சிறிய செயல்பாடுகளில் அவர்களாகவே முடிவெடுக்க வைத்து அதன் விளைவுகள் எப்படி இருக்கிறது, எப்படி இருந்தால் நல்லது என அன்புடன் உணர வையுங்கள்.   
பாதுகாப்பு & அன்பு மிகுந்த சூழலை அளியுங்கள்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குழந்தைகள் குறித்த கவலையை பெற்றோர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையால் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். கிடைக்கும் குறைவான நேரத்தையும் தொலைக்காட்சி பார்த்தல், தங்களின் தனிப்பட்ட வேலைகளைப் பார்ப்பதற்கே செலவிட்டுவிடுகின்றனர்.  குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்களோடு அமர்ந்து ஒரு நண்பனாக பேசுவதில்லை. இதன் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
பெற்றோர் தங்களை உற்சாகப்படுத்தி பேசுவதும், தங்கள் பிரச்சனைகள் குறித்து அக்கறை செலுத்துவதும் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். பாதுகாப்பின்மையை குழந்தைகள் உணர்ந்தாலும் அன்பு மிகுந்த நட்பான சூழ்நிலையில் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக இருப்பர்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22325&cat=1

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

வருங்காலம்: தயாராகுங்கள் இளைஞர்களே, இனி உங்கள் வீடும் அலுவலகமே


தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தொழில்நுட்ப உதவியுடன் வேலை பார்த்து வரும் நபர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தை தங்களுக்கு பிடித்த இடமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
தற்போது பல நிறுவனங்கள் தங்கள் அலுவலர்கள் மகிழ்ச்சிகரமாக இயங்குவதற்கு வசதியாக, அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையை மாற்றுவதற்கான திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் உருவாக்கி வருகின்றன.
ஒரு ஆய்வறிக்கையின்படி, சிறு குழந்தைகளுடன் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நேரத்தை விட பிற பெண்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதே போன்று 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் உழைப்பவர்களாக உள்ளனர். பிறர் குறைவான நேரமே வேலை பார்க்கின்றனர். 5பேரில் ஒருவர் தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை கவனிப்பவர்களாக உள்ளனர். வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது போன்று ஓவ்வோருவருக்கும் உள்ள கடமைகள் மாறுபடும்பொழுது, கிடைக்கக்கூடிய நேரமும் வித்தியாசப்படுகிறது. பணிச்சூழலைப் பொறுத்த அளவில், தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் 2025ஐ நெருங்கும்பொழுது வேலைவாய்ப்புச்சந்தையை 75 சதவிகிதம் தங்களதாக்கிக் கொள்வர்.
இத்தகைய நிலவரத்தில், நெகிழ்வான பணியிட விவகாரம் என்பது ஒரு நிறுவனத்தின் அதிமுக்கிய முடிவாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இது நிறுவனத்தின் வளர்ச்சி, வீழ்ச்சியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு காரணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும், நிர்வாக நிலை சம்பந்தபட்டதாகும்.
பணியாளர்கள் தாங்கள் விருப்பப்படும் இடத்தில் வேலை பார்க்கும்பொழுது, தங்கள் மேலதிகாரிகளின் கோபப் பார்வையிலிருந்து விலகி இருக்கலாம். ஆனால் அதே நேரம் இரவு நேரத்தில் அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் அவர்களை கவலைக்குள்ளாக்க வாய்ப்புகள் அதிகம்.
முன்னணி நிறுவனங்கள், வேலைச்சூழலை மாற்றுவதற்கான அவசியத்தை உணர்ந்தாலும், அனைத்து விதமான வேலைக்கும் இம்முறை ஒத்து வராது என்பதனை உணர்ந்திருக்கின்றனர். எனவே வேலைக்கு தகுந்தவாறு எல்லைகளை நிர்ணயிப்பது அவசியமாகிறது. ஊழியர்கள் எதிபார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் திட்டங்களை தீட்ட வேண்டியுள்ளது.
புதிய வழிமுறைகளை உருவாக்கும்பொழுது நிர்வாகிகள், புதிய நிர்வாக முறைகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி ஓவ்வோரு ஊழியரையும் தொடர்பு கொள்வது? வேலை வாங்கும் விதம், ஓவ்வொரு குழுவுக்கும் இடையே தொடர்புகளை சரியான முறையில் பராமரித்தல் போன்றவையும் இதில் அடங்கும்.
பணியாளர்களுக்கு நல்லதாக இருப்பது, நிறுவனத்திற்கும் நல்லதாகவே இருக்கும் என்ற நிலைப்பாடு நிறுவனத்திற்கிடையே உள்ளது. பணியாளர் தான் குறிப்பிட்ட சூழலில் திறம்பட இயங்க முடியும் என்று மனதளவில் எண்ணும்பொழுது வேலைத் திறன் அதிகமாகிறது, இதன் மூலம் பணிகள் விரைவாக முடிவதுடன், நிறுவனமும் லாபத்தை விரைவாக காண முடியும் என்பதே நிறுவனங்களின் கணிப்பு ஆகும்.
கல்வி மலர்