குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 மார்ச், 2014

சுமைகளிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை...



பள்ளியில் படிக்கும் காலத்தில் எடை அதிகமானதும், பெரிய அளவிலுமான புத்தகப் பைகளை சுமந்து செல்லும் மாணவர்களை சில வருடம் முன்பு வரை பார்த்திருக்கலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு பைகளின் அளவு சற்று குறைந்திருந்தாலும், முன்னர் இருந்த நிலைக்கு பெரிய மாற்றம் இல்லை என்ற நிலையிலேயே தான் பைகளின் அளவு இருக்கிறது.
மாணவர்களின் பைகளில் புத்தகங்கள், எழுது பொருட்கள் பெட்டி,  ஜாமெட்ரி பாக்ஸ் (கணித வடிவியல் பெட்டி),  ஓவிய பொருட்கள் என இருக்கும்.  மேலும் ஒரு சில மாணவர்களின் பைகள் கதை புத்தகங்கள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என பல வகையான பொருட்களால் நிரம்பி இருக்கும். மாணவர்களுக்கு மாணவர்கள் இது வேறுபட்டாலும் கொண்டு வரும் பொருட்கள் அதிகம் என்பது பொதுவான ஒன்று.
ஒன்று போதும்
ஆனால் கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஒரு நோட்டு, ஒரு எழுதுகோல் என மாணவர்களின் பொருட்களின் அளவு மிகவும் சுருங்கி விடுகிறது. அதிலும் ஒரு சில மாணவர்கள் ஒன்றிரண்டு தாள்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்துவிடுகின்றனர். அப்படி வரும் மாணவர்களிலும் பேனாவை ஒழுங்காக கொண்டு வராத மாணவர்கள் வகுப்பிற்கு 2 பேராவது இருக்கும் நிலை பல கல்லூரிகளில் காணப்படுகிறது.
கல்லூரியில் நோட்டின் தேவை என்பது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது மாணவர்களின் நினைப்பாக இருக்கிறது. "குறிப்பெடுக்க விருப்பமில்லை என்ற போது, நோட்டு எதற்காக கொண்டு வர வேண்டும்?" என்பது மாணவர்களிடமிருந்து வரும் கேள்வி.
உதவும் தொழில்நுட்பம்
நோட்டு மற்றும் பேனாவுடன் எளிதாக உடன் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு சில பொருட்கள் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். அவற்றில் முதலாவது நம்முடன் இருப்பது அலைபேசி. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடையே "ஸ்மார்ட் ஃபோன்" பயன்படுத்தும் பழக்கம் பரவலாகி வருகிறது. இது போன்ற நவீன அலைபேசிகளில் பேசுவதை பதிவு செய்யும் வசதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதான செயலாக இருப்பதில்லை. அலைபேசிகளில் பல செயலிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
மாணவ மாணவியரிடையே புதிய தொழிநுட்பம் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் தங்களையும் மாற்றிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் சட்டைப் பையில் அல்லது காற்சட்டையில் வைக்கக்கூடிய வகையில் இருப்பது "பென் டிரைவ்" அல்லது "மெமரி கார்டு" தகவல்களை பெற்றுச் சென்று கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பயன்படுத்தி பாட சம்பந்தமான தகவல்களைப் பெறலாம்.
தேவைக்கு மட்டும்
மாற்றங்கள் பாடப்புத்தகத்திற்கான சுமைகளை குறைத்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்களே அவற்றை எளிதாக மாற்றியிருக்கலாம்.  தொழில்நுட்பங்களை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தொழில்நுட்பம் இல்லாமலும் பழக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொழில்நுட்பங்கள் மிகவும் தேவையாக இருக்கின்ற நேரத்தில் செயல்படாமல் நம்மை ஏமாற்றலாம். அதற்கு ஏற்ற வகையிலும் தயாராக இருக்க வேண்டும்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22929&cat=1

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை




பயணங்கள் நமக்கு அளவில்லாத பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. மனிதனின் வாழ்க்கையில் இடப்பெயர்வானது பிறந்தது முதல் ஆரம்பித்துவிடுகிறது. மருத்துவமனை, வீடு, பள்ளிக்கூடம், பயிற்சி மையம், கல்லூரி, நிறுவனம் என ஒன்றிலிருந்து ஒன்றாக கிளை விட்டு வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. நகர்தல் பெரும்பாலும் இறுதியில் நகரத்திற்கு அழைத்து வந்துவிடுகிறது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்பொழுது புதியவற்றை கற்றுக்கொள்கிறோம். புதிய நண்பர்களை கண்டுகொள்கிறோம். நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு நாள் முழுவதற்குமான செயல்பாடுகளில் முந்தைய இடத்திற்கும், புதிய இடத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏற்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவராக இருந்தால் புதிய நண்பர்களுடன் ஆட்டோவில், பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பும், புதிய நட்பும் உருவாகிறது. மனது புதியவற்றோடு, பழைய இடங்கள், அங்கிருந்த நண்பர்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்க்கிறது. சில காலங்கள் முடிந்த பிறகு புதிய இடம் நம்மோடு நெருக்கமாகிவிடுகின்றது.  பள்ளிக் காலத்தை பொறுத்த வரை 5 லிருந்து 6ஆம் வகுப்புக்கும், 10லிருந்து பதினோறாம் வகுப்பிற்கு மாணவர்கள் செல்லும்பொழுதும் "நண்பர்களை பிரிகிறோமே" என்ற வருத்தம் மாணவர்களிடையே அதிகமாகிறது.
வேறு வகுப்பிற்கு சென்ற பிறகு, மதிய உணவு இடைவேளையில் பழைய நண்பர்களோடு சாப்பிடும் நேரங்கள் மகிழ்ச்சியானவை. "என்னுடைய வகுப்பில், நமது பழைய வகுப்பைப் போன்று பழகுவதற்கு இனிமையானவர்கள் இல்லை" என நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது பிரிந்த பொழுதுகளில் நடக்கும். கல்லூரியை நோக்கிய பயணம் நட்பின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது.
பள்ளிக்காலம் ஒரு அடிப்படையை நமக்குள் உருவாக்கியிருக்கும். கல்லுரிக்காலம் வாழ்க்கைப் பயணத்திற்கான தெளிவை உண்டாக்குகிறது. எதிர்காலத்திற்கான முடிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு சிறிதளவாவது  கலந்து இருக்கிறது. நண்பர்களிடமிருந்து நல்ல பழக்க வழக்கங்களையும், கெட்ட பழக்க வழக்கங்களும் ஒட்டிக்கொள்ளும் காலமும் இந்தக் காலம் தான். தன்னிடம் புதிதாக வந்திருக்கும் பழக்கம் நன்மைக்கானதா அல்லது தீமைக்கானதா என்று மனம் ஆராய்வதில்லை மாறாக "நண்பர்களோடு இருக்கிறோமே அதுவே மகிழ்ச்சி" என்றுதான் மனம் திருப்தி கொள்கிறது.
பணிபுரியும் காலத்திலும், அதன் பிறகான வாழ்க்கையிலும் படிக்கும்பொழுது உருவான நண்பர்கள் நல் ஆலோசகர்களாகவும், கவலைகளை பகிர்ந்துகொள்வதற்கான நல்ல வடிகாலாகவும், முகியமாக மகிழ்ச்சியையும், மனதில் இளமையையும் உருவாக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறார்கள். நட்பிற்குள்ளாக ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் பெரிதாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு நண்பர்களுக்கு இருக்கிறது. நட்பின் பெயரால் வன்முறையையும், தவறான பாதையையும் தேர்ந்தெடுப்பது முன்னேற்றத்திற்கான தடைக்கல்.
நமது பெற்றோர் நம் மீதான நம்பிக்கையில் நமக்கு முடிவுகளை எடுப்பதற்கு உரிமை அளித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை. நட்பு தேவைகளை மையப்படுத்தி இல்லாமல் உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும், நாட்டிற்கும் சமுதயத்திற்கும்  நன்மை விளைவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22521&cat=1

செவ்வாய், 28 ஜனவரி, 2014

குழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே...


குழந்தைகள் திறனுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. குழந்தைகளை செயல்திறன் உள்ளவர்களாக மாற்றுவதற்காக ஒவ்வொரு பெற்றோரும் எடுக்கும் முயற்சிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. குழந்தைகளின் வருங்காலம் கல்வியையும் கடந்து வெற்றிகரமாக அமைவதற்கு ஒரு சில முயற்சிகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். அவை...
தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்
தன்னம்பிக்கைதான் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய சிந்திக்கும்பொழுதே, தன்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், தன்னால் சரிவர செய்ய முடியுமா போன்ற எண்ணங்கள் குழப்பத்திற்குள்ளாக்கலாம்.
அது போன்ற நேரங்களில், சிறு வயதில் தங்கள் குழந்தைகளைப் போன்று இருந்து  பிற்காலத்தில் சாதித்தவர்களின் வரலாறுகளை  எடுத்துக்கூறி அவர்களாலும் எளிதாக சாதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்துங்கள். உங்களோடு உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து,  நேரடியாக இல்லாமல் மறைமுகமாக குழந்தையின் திறமைகள் குறித்து குழந்தைகளுக்கு முன்னால் உற்சாகமாக பேசுங்கள். இது குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.  
நண்பர்களை உருவாக்கிக்கொடுங்கள்
தனது பெற்றோருடன், உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூற முடியாததை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் ஒரு நபராக மட்டும் நண்பர்கள் இல்லாமல், பொதுவான குணங்களை மெருகேற்றுவதற்கும், விளையாட்டு, கூடுதல் திறன்களை வளர்த்தல், பயிற்சிகள் போன்றவற்றில் தோள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.
குழந்தைகளின் வளர்ச்சியில் நண்பர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. "உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்" என்பது நாம் அறிந்த பொன்மொழி. நண்பர்கள் இல்லாதவர்கள் தங்கள் எண்ணங்களை மனதிற்குள்ளாகவே வைத்து மன நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். நல்ல நண்பர்கள் உடையவர்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுகின்றனர். நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாதன விளையாட்டுப் பொருட்களின் உதவியுடன் தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர். இதன் மூலம் வெளி உலகத் தொடர்புகள் இயற்கையாகக் கிடைப்பதில்லை. நண்பர்கள் ஒரு தொடர்புச்சாதனமாக பயன்படுகிறார்கள்.
குழு செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்
நண்பர்களோடு இணைந்து விளையாடுவதற்கு அனுமதி அளியுங்கள். நடனம், சேவை சார்ந்த செயல்கள், நாடகம் போன்றவற்றில் பங்குகொள்வதற்கு உற்சாகம் அளியுங்கள். ஏனெனில் குழுச்செயல்பாடுகள் மற்றவர்களை அறிந்துகொள்ள உதவும். மேலும் பல்வேறு எண்ணங்கள் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் பல பாடங்களை கற்றுத் தரும். ஒற்றுமையுணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் வருங்காலத் தலைமுறைக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு குழு செயல்பாடுகள் தான் துணை புரியும்.
தலைமைப் பண்பை உருவாக்குங்கள்
முடிவெடுத்தல் தான் ஒரு மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது. தானாக முடிவெடுக்கும் நிலையை குழந்தைப்பருவத்திலேயே வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் எதிர்காலம் குறித்த பயம் நீங்கி, எதையும் சந்திக்கும், சாதிக்கும் துணிச்சல் அதிகமாகும். சிறிய சிறிய செயல்பாடுகளில் அவர்களாகவே முடிவெடுக்க வைத்து அதன் விளைவுகள் எப்படி இருக்கிறது, எப்படி இருந்தால் நல்லது என அன்புடன் உணர வையுங்கள்.   
பாதுகாப்பு & அன்பு மிகுந்த சூழலை அளியுங்கள்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குழந்தைகள் குறித்த கவலையை பெற்றோர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையால் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். கிடைக்கும் குறைவான நேரத்தையும் தொலைக்காட்சி பார்த்தல், தங்களின் தனிப்பட்ட வேலைகளைப் பார்ப்பதற்கே செலவிட்டுவிடுகின்றனர்.  குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்களோடு அமர்ந்து ஒரு நண்பனாக பேசுவதில்லை. இதன் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
பெற்றோர் தங்களை உற்சாகப்படுத்தி பேசுவதும், தங்கள் பிரச்சனைகள் குறித்து அக்கறை செலுத்துவதும் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். பாதுகாப்பின்மையை குழந்தைகள் உணர்ந்தாலும் அன்பு மிகுந்த நட்பான சூழ்நிலையில் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக இருப்பர்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22325&cat=1

புதன், 15 ஜனவரி, 2014

பண்டிகைக் கால விடுமுறைகளும், மாணவப் பருவமும்...


மாணவர்களுக்கு பரீட்சை காலம் எப்படி கடினமானதோ அதற்கு நேர் எதிரானது விடுமுறைகளும், பண்டிகைக் காலங்களும்.
விடுமுறைகள் என்றால் விளையாட்டுக்களோடும், பொழுது போக்குகளோடும் மட்டும் கடந்து செல்லும். ஆனால் பண்டிகைக்கால விடுமுறைகள் அப்படிப்பட்டது அல்ல. புதிய உடை, பல்சுவை பலகாரங்கள், உணவு வகைகள், கொண்டாட்டம் என மற்ற விடுமுறைகளை விட மாறுபட்டு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
ஆண்டுதோறும் ஒரே விதமான பண்டிகைகளே இருந்தாலும், ஓவ்வொரு ஆண்டுக்குமான பண்டிகைக் கொண்டாட்டங்களானது சூழ்நிலைகள், வயது ஆகியவற்றைப் பொருத்து மாற்றம் காண்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பண்டிகைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் படிக்கும் காலத்தில் பொதுவானதாக இருக்கிறது. பண்டிகைகளின் போது மற்ற நண்பர்களையும் அழைத்து பலகாரங்களை உண்ண வைப்பது, உணவு வழங்குவது என நட்பையும், ஒற்றுமையையும் அதிகப்படுத்துவதாக அந்தக் காலங்கள் விளங்குகிறது.
வார இறுதிகளில் வரும் பண்டிகைகள் மாணவர்களிடையே "ஒரு விடுமுறை குறைந்து விட்டதே" என சிறு சோர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் கொண்டாட்டங்களில் மட்டும் மாற்றம் இருப்பதில்லை. பொங்கல் கால விடுமுறைகள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை, எப்படி இருந்தாலும் உறுதியாக 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைக்கும் வகையில் வந்துவிடுகிறது.
பலகாரங்கள் பரிமாற்றம்
ஒவ்வொரு பண்டிகைக்குமான தின்பண்டங்களுக்கு நண்பர்கள் மத்தியில் போட்டியே இருக்கும். தீப ஒளித்திருநாளாக இருந்தால் முறுக்கு, அதிரசம், சீடை போன்ற பலகாரங்களும், கிறிஸ்துமஸ் என்றால் கேக்குகளும், ரம்ஜான் என்றால் பிரியாணிகளுமாக உடன் படிக்கும் நண்பர்களால் வீடுகள் களை கட்டும். பாரபட்சம், விருப்பு, வெறுப்புகளின்றி பகிர்ந்து உண்ணும் பண்டிகைக் காலங்கள் இனிப்புகளோடு இனிமையையும் தருகிறது.
தமிழர் திருநாள்
அனைத்து தரப்பினராலும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையாக, ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழகத்தின் அனைத்து வீடுகளும் இதனை எதிர்நோக்கி இருக்கின்றன.  மாணவர்களைப் பொறுத்த வரையில் மாறிவரும் கல்வி முறைகளும், பயிற்சி மையங்களும் பண்டிகைகளை ஒரு சுதந்திரமான நாளாக உணரும் வகையில் மட்டுமே மாற்றி இருக்கிறது. மேலும் தொலைக்காட்சி அலைவரிசைகள் வீட்டிற்கு வெளியே செல்லாத வகையில் வீட்டிற்குள்ளேயே கட்டிப்போடும் வேலையை செய்கின்றன. செயற்கையான பொழுதுபோக்குகள் அதிகரிக்க அதிகரிக்க பண்டிகைகள் தனது அடிப்படையை இழந்து வருகின்றது.
ஒரு பண்டிகைக்கான சாராம்சங்கள் உணரப்பட்டால்தான் பண்டிகையின் நோக்கம் நிறைவேறும். மனிதனை கவலைகள், துன்பங்களிலிருந்து மீட்டு வந்து, மரபினை மங்காமல் வளர்ச்சியடைய வைக்கும் பணியினை சிறப்பாக செய்வதற்குத்தான் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. விடுமுறை நாள் என்று பார்க்காமல் பண்டிகைகளை, அது ஏன் உருவாக்கப்பட்டது? என ஆராய்ந்து அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் நம்மை உண்மையான வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் பாடங்கள் வேலை வாய்ப்பினை முன்னிறுத்தி அளிக்கப்படுகிறது. அவை வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களை அளிப்பதில்லை. ஆனால் அவற்றுள் சிலவற்றை பண்டிகைகள் நமக்கு கற்றுத் தருகிறது.
அடிப்படையை உணர வேண்டும்
எடுத்துக்காட்டாக பொங்கல் பண்டிகை இயற்கையை போற்றுவதற்கும், அதனை பாதுகாக்கும் உழவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது போன்ற நாட்களில் கிடைக்கும் நேரங்களை, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் பகுதிகளில் மரங்கள், செடிகள் நட்டு பராமரிப்பதற்கான பணிகளை தொடங்கலாம்.  விலங்குகள், பறவைகள் வாழ்வதற்கு இடைஞ்சல் இல்லாமலும், அவைகளுக்குமான முக்கியத்துவத்தை நமது வாழ்க்கையில் அளிக்கலாம்.
மேலும் பொங்கல் விடுமுறைகளில்தான் பெரும்பாலான நகர்ப்புற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இளம் மாணவர்களுக்கும் அப்போழுதுதான் தங்கள் ஊரை, உறவினர்களை, புதிய வாழ்க்கை சூழலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உறவினர்களோடு இருக்கும் மகிழ்ச்சியானது உறவுகளை வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். தனது மரபு வழி இங்கே இருந்துதான் தொடங்குகிறது என்பதை உணர்ந்து, தனது வருங்கால வளர்ச்சியின் போது ஊரின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உறுதிகொள்ள வேண்டும்.
விடுமுறை மட்டுமல்ல...
ஏனெனில் பண்டிகைகள் வாரம்தோறும் வந்து போகும் விடுமுறைகள் மட்டுமல்ல,  சக மனிதனின் அன்பையும், மண்ணின் ஈரத்தையும் நம்மில்  உணரச்செய்யும் நல்ல ஆசிரியருமாகும்.
கல்வி மலர் 

வியாழன், 28 நவம்பர், 2013

வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்...


பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப் பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது.
வேலைச் சோர்வும், பயணக் களைப்பும் ஒன்று சேர்ந்துவிடுவதால், வீட்டிற்கு வந்தவுடன் உணவருந்தி தூங்குவதையே உடல் விரும்புகிறது. உணவிற்கும், தூக்கத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே குழந்தைகளை கவனிக்க முடிகிற்து.
காலை நேர பரபரப்பு அலுவலகத்திற்கும், பள்ளிக்கூடத்திற்கு கிளம்புவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. இரவு நேரம் ஒரு சில வார்த்தைகளோடு முடிந்துவிடுகிறது. பல பெற்றோர்  தங்கள் குழந்தைகள் தாமாகவே படிக்கும் அறிவு பெற்றவர் என்று எண்ணிவிடுகிறார்கள். ஒரு சிலர் தங்கள் பிள்ளைகள் பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக  பாடம் படித்துவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்துவிடுகின்றனர். பெற்றோர்கள் பலரது நிலையும் என்னவென்றால் பிள்ளைகளுக்கு படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே பிரச்சனைகள் இருக்கும், அந்த பிரச்சனைகளை பள்ளிக்கூடங்களும், பயிற்சி நிலையங்களும் தீர்த்து விடும் என்று நினைப்பதுதான்.
தொலைக்காட்சி பார்ப்பதன் மூலமும், தவறான நண்பர்கள் நட்பின் மூலமும் வீணாக பொழுதை கழிக்கும் மாணவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்றால், பெற்றோர் தங்கள் செலவுக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதும் வேறு எதை பற்றியும் கேள்வி கேட்கக்கூடாது என்றே நினைக்கின்றனர். தொழில்நுட்ப அறிவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கமும், பிள்ளைகளின் மனதில் தங்கள் பெற்றோருக்கு தற்போதைய சூழ்நிலைகள் பற்றிய புரிந்துணர்வு இருப்பதில்லை, அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை, அந்த காலத்திலேயே இருக்கிறார்கள் என்ற  மனநிலையை ஏற்படுத்தி கோபத்தை உருவாக்கி விடுகிறது.
 
இதற்கான தீர்வு என்ன? நேரமில்லை என்பதைவிட அரை மணிநேரம் கிடைத்தால் கூட குழந்தைகளோடு அவர்கள் படிப்பினை கடந்து, அவர்கள் நட்பு வட்டம், விருப்பம், இலட்சியம், திட்டம், பள்ளிக்கூடத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள், பயிற்சி நிலையங்கள் குறித்த குறைகள், பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிள்ளைகளின் வளர்ச்சிகள் குறித்த தங்களின் பெருமை, சந்தோசம் போன்றவறை நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டாலே போதும். அந்த அரை மணி நேரம் பிள்ளைக்ளின் 24 மணி நேர உற்சாகத்திற்கு நிச்சயமாக உரமாக அமையக்கூடும்.

பெற்றோர் இரு பக்கங்களிலும் உள்ள குறைகள், நிறைகளை ஆராய்ந்து தீர்வை கண்டுகொள்வதில் ஆர்வம் செலுத்தினால்தான் இன்றைய இளைய சமுதாயம் எதிர்காலத்தில் பன்முக வளர்ச்சி கொண்ட கட்டமைப்பான குடும்ப அமைப்பில் சிறந்து விளங்கும்.
கல்வி மலர் 

வியாழன், 24 அக்டோபர், 2013

சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்



கட்டை வண்டி பிடித்து நடை பழகிய, மணலில் எழுதி எழுத்துப் பழகிய, விடுகதை புதிர்கள் போட்டு விளையாடி அறிவு வளர்த்த நிகழ்வுகள் எல்லாம் நம் கண் முன்னே மெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது.
நகரமயமாக்கலும், தொழில்நுட்பங்களின் உதவியும், பொருளாதாரமே நோக்கம் என அமைத்துக் கொண்ட வாழ்க்கையும் வருங்கால சந்ததியினரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைக்கு தாய் அன்பையும், தந்தை அறிவையும் ஊட்டி வளர்ப்பர் என்ற நிலையும் நகர வாழ்வில் இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.
வேலைப் பழு, பயண நேரம், நெருக்கடி போன்றவற்றால் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதில் குழப்பத்திற்குரிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர் இத்தகைய நிலையில் சிக்கி தவிக்கின்றனர் என்பதுதான்.
இப்படியான மாறுபட்ட சூழ்நிலையில், குழந்தையானது பிறந்தது முதல் சந்திக்கும் அல்லது அறியும் தகவல்கள் அனைத்தும் நாம் நம்முடைய இள வயதில் அறிந்திராதவைகளாக இருக்கிறது. காரணம் விளையாட மண் இல்லை, நீந்துவதற்கு நீராதாரங்கள் இல்லை, நல்லொழுக்கக் கதைகள் கற்றுத் தருவதற்கு தாத்தா, பாட்டிகள் இல்லை, தென்றலை உணர்வதற்கும், வான் நிலவின் அழகை காண்பதற்கும் இட வசதிகள் இல்லை.
கற்றுத் தரும் இயற்கையை இல்லாததாக்கி வருவதால், கற்றுக் கொள்வதற்கும், பொழுதினை போக்குவதற்கும் செயற்கையை நம்ப வேண்டியதாகிவிட்டது.
தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை கண்டு உலகைத் தெரிந்துகொள்வதற்கும், சி.டி.க்களின் மூலம் மழலைப் பாடல்களை அறிந்துகொள்வதற்கும், வீடியோ கேம்களின் மூலம் விளையாட்டு ஆசைகளை நிவர்த்தி செய்து வந்துகொண்டிருக்கிறோம். தற்போது இதில் புதிதாக "டேப்ளட்" என்று சொல்லக்கூடிய மேகக் கணினிகளும் இடம் பிடித்துள்ளன.
குழந்தைகளுக்கு ஏ, பி, சி, டி, கற்றுத்தருவதற்கும், மழலைப் பாடங்களைக் கற்றுத் தருவதற்கும் தனித்தனியாக அப்ளிகேஷன்ஸ் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாகவும், பணம் செலுத்தியும் பெறக்கூடிய வகையில் இருக்கும் இது போன்ற "அப்ளிகேஷன்"களை நவீன, நாகரீக பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு அளிக்கின்றனர்.
4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை தங்கள் நேரத்தை வீடியோ விளையாட்டுக்களிலும், இணையதளங்களிலும் செலவிடுகின்றனர். "வெளியில் சென்றால் எங்கே போகிறான் என்றே தெரியாது, அதற்கு பதில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பிரச்சனையில்லை" என்று ஆறுதல்படும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இணையத்தின் ஊடாக எங்கே எல்லாம் செல்கிறார்கள் என கவனிப்பதில்லை.
ஒரு தொழில்நுட்பத்தை குழந்தைகள் பயன் படுத்தும்பொழுது, அந்த தொழில்நுட்பம் குறித்து தங்கள் குழந்தைகளை விட பெற்றோருக்கு அதிக அறிவு இருப்பது அவசியம். ஏனெனில் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தால் வரும் பாதிப்புகள், குழந்தையை ஒரு கட்டத்திற்குள்ளாக செயல்பட வைக்கும் அல்லது கண்காணிக்கும் திறன் இருப்பது அவசியம்.
தங்களிடம் அதற்கான தெளிவு இல்லாதபோது குழந்தைகளை இணையத்திலும், வீடியோ கேம்களிலும், முழுக்க நேரத்தை செலவிட வைப்பது பாதுகாப்பில்லாதது ஆகும். புதியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும்பொழுது நன்மைகளை மட்டும் காணாது தீமைகளையும் ஆராய்வது அவசியம்.
இன்றைக்கு பல பெற்றோருக்கு குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையே அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்தான் பிற்காலத்தில் தங்கள் குழந்தைகள் குறித்து அதிகம் கவலை கொள்ளுபவர்களாகிறார்கள்.
வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள் ஒரே நேர்கோட்டிலான சிந்தனைகளை தரக்கூடிய சூழ்நிலைகளையே உருவாக்கித் தருகிறது. ஆனால் திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள், பரந்த அறிவினை தரக்கூடியதாக இருக்கிறது.
ஏனெனில் விளையாட்டு மைதானம் விளையாட்டோடு நண்பர்களை தருகிறது, காலநிலை மாற்றத்தையும் கற்றுத்தருகிறது. நீச்சல் குளம் பாதுகாப்பான நீச்சலை மட்டுமே கற்றுத் தருகிறது. ஆனால் ஆறானது நீச்சலோடு திரண்டு வரும் நீரோட்டத்தை எதிர்கொள்வதன் மூலம் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கிறது.
வாழ்க்கையின் வசந்தம் திறந்த வெளியில் தான் இருக்கிறது. அதனை பெற்றுக்கொள்ள நம் குழந்தைகளை வெளியே அழைத்து வருவோம். அதற்கேற்ற முறையில் நம் சுற்றுப்புறத்தையும் கட்டமைக்கும் பணியும் நமக்கு உள்ளது.
கல்வி மலர்