மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மகிழ்ச்சியும், வெற்றியும் பெற சிந்தனை, சுதந்திரத்தை சீர்பட அளிப்போம்



பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்தும், சூழ்நிலைகளைப் பொறுத்தும் மாறுபட்ட அர்த்தங்களைத் தரும். ஆனால் ஒரு வார்த்தை அனைத்து இடங்களிலும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வார்த்தை தான் சுதந்திரம்.
கண்காணிப்பு
ஒரு இயந்திரமானது, அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ப மனித உதவியோடு செய்து முடிக்கின்றது. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான பணியை செய்கிறது. அவ்வவ்பொழுது ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், தேவையான பொருள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
 
செயல்பாடு

மனிதன் தான் கடக்கும் நிகழ்வுகளை, கோர்க்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட வேலைகளை ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டு செய்கிறான். அந்த வேலைகள் திட்டமிடப்பட்ட செயல்களை நோக்கி அவனை நகர்த்துகின்றன. ஒரே செயலை மறுபடி மறுபடி செய்யும்பொழுது ஒரு வகையில் அது எளிதான வேலையாக இருந்தாலும், பலருக்கும் அது விருப்பமிகு வேலையாக இருப்பதில்லை. ஏனெனில் மூளை ஒரே வேலைக்கு மட்டுமே தன்னை தயர்படுத்திக்கொள்வதால் வேறு செயல்பாடுகள் குறித்த சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக ஒரு கைதியின் நிலையில், ஒரே செயல்பாட்டை செயலாற்றும் மனிதனின் சிந்தனை அறிவும் ஒரு குறுகிய செயல்பாட்டிற்குள்ளாக முடங்கிவிடுகிறது.
 
இதனை உணர்ந்தவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகவும், தான் சார்ந்த நிறுவனம் அல்லது இடத்தின் வளர்ச்சிக்காகவும் புதிய செயல்பாடுகளை நோக்கி தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதுவே சுதந்திரத்தை நோக்கிய பயணம். மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையும் இதைப் போன்றுதான் உள்ளது.
 
நெருக்கடி

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடி, மாபெரும் பணிகளை செய்யக்கூடிய நபருக்கு இருக்கக்கூடிய  நெருக்கடிகளை விட மிகவும் அதிகம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் மாணவர்கள் காலை எழுந்தது முதல் படிப்பு, படிப்பு என இரவு தூங்கும் வரை படிப்பை தவிர எதுவும் இல்லை என்ற நிலையிலேயே எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை 14 ஆண்டுகள் கடந்துவிடுகின்றனர்.
 
பள்ளிக்காலத்தில் அதீத கட்டுப்பாட்டுடன் வளரும் மாணவர், கூண்டிலிருந்து விடுபட்ட பறவையானது உலகை மகிழ்ச்சியுடன் வலம் வருவதைப் போன்று, கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கின்றான். இந்த மகிழ்ச்சியும் பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
 
எது சுதந்திரம்?

சுதந்திரம் என்ற ஒன்று அது கிடைக்கும் நபரைப் பொருத்து மாறுபடுகிறது.   ஒரு கட்டுப்பாடற்ற இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், இனிப்புகளை உண்பதையே இலட்சியமாகக் கொண்ட ஒரு சிறுவனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், நன்மை செய்வதற்காக போராடும் ஒரு போராளிக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு.
 
சுதந்திரம் என்பது முழுவதுமாகக் கிடைக்கும்பொழுது அது தவறுகளுக்கே வழிவகுக்கும் என்பது நாம் அறிந்ததே. அளிக்கப்படும் சுதந்திரம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும்பொழுதே அதற்கான உண்மையான அர்த்தம் கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அனைத்து தரப்பினரும் இதுகுறித்து ஏங்கினாலும்,  அதிகமான ஏக்கத்திற்கும், வாய்ப்பிற்கும் ஏங்குபவர்களாகவும், அளிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருப்பவர்கள் குழந்தைகளே.
 
ஏனெனில் கற்கவேண்டியது பாடப்புத்தகத்தை மட்டுமல்ல, அதையும் கடந்து இருக்கிறது என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் பொருளாதார நோக்கம் கொண்டவர்களாக  மட்டுமே குழந்தைகளை உருவாக்குகிறோம். அவர்களின் இதர ஆசைகளை நிராசைகளாக்கி விடுகின்றோம்.
 
முன்னுரிமை

ஒவியனாக வேண்டும் என்று ஆசைப்படும் மாணவனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம், ஆதரவை விட பொறியியல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், ஆதரவு அதிகமாக இருக்கிறது. இருவரையும் ஒரே தராசில் இருபுறமும் வைக்க தயங்குகிறோம். வருமானமே ஒரு மனிதனின் தன்மையை வெளிப்படுத்துவதாக எண்னுகிறோம். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது என்று நம்மை நாமே பணத்திற்கு அடிமையாக்கி விடுகிறோம்.
 
படிப்பையும் கடந்து

குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே முக்கியமல்ல என்பதை உணர்த்தி உறவுகளோடு பழகுவதற்கான உரிமையை அளிப்போம். நமது உறவினர் யார் என்பதனை அறிய பள்ளிக்கு விடுப்பு எடுத்து உறவுகளின் சுக, துக்கங்களில் அவர்களையும் பங்கெடுக்க வைப்போம். ஏனென்றால் இன்றைய குழந்தைகளுக்கு அனுதினமும் சந்திக்கும் வெயில் குறித்த புரிதல்கள் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தத்தை அளிக்கக்கூடியது.
 
வாழ்க்கையின் நிகழ்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களின் கருத்துக்களை அனுதினமும் கேட்டு வந்தாலே அவர்கள் வாழ்வு சிறக்கும். வருங்காலம் அவர்களை பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தள்ளாமல் மகிழ்ச்சியை நோக்கி தள்ளும். கோடி ரூபாய் கொடுத்தும் கிடைக்காத மன நிம்மதி, சிறுசிறு நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும்.
 
சீர்பட செதுக்குவோம்

குழந்தைகளுக்கான சுதந்திரம் அவர்களின் சிந்தனையில் தொடங்குகிறது. சிந்தனைகளை சீர்பட செதுக்கினால் அழகான வாழ்வு மலரும். ஒரேயடியாக கட்டிப்போட்டால் அது மழுங்கிப்போகும். போர்க்களத்தின் சண்டையில் கூர்மையிழந்த வாளுக்கு இருக்கும் மதிப்பானது, துருப்பிடித்து கிடக்கும் வாளுக்கு கிடைப்பதில்லை. மாலையும், மரியாதையும், புகழ் பாடல்களும் போர் வாளுக்கே உண்டு. அதனை உணர்ந்தவர்களாக தேவைப்படும் சுதந்திரத்தை அளித்து குழந்தைகளை வளர்ப்போம்.
- இலா. தேவா 
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25108&cat=1

புதன், 25 ஜூன், 2014

விளையாட்டாகிப் போன விளையாட்டு




"காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா" என்று மகாகவி பாரதியார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாடினார். ஆனால் காலை, மாலை, இரவு என அனைத்து காலங்களும் படிப்பாக மட்டுமே ஆகிவிட்டது. இந்த நிலை உருவாக என்ன காரணம்?

தமிழகத்தைவிட  குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இத்தாலி, ஸ்வீடன், போலந்து, பெலாரஸ், பின்லாந்து போன்ற நாடுகள்  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவிலான தங்கப் பதக்கங்களை பெற்று வருகின்றன. ஆனால் அதனை விட பன்மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தகுதிச் சுற்றுகளுக்கே தகுதி பெற முடியாமல் தடுமாறும் நிலையில்தான் இன்றளவும் இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் அடிப்படையிலான தரவரிசையில் 53வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் இடப்பரப்பளவில் 7 வது இடத்திலும், மக்கள் தொகையின் அடிப்படையில் 2வது இடத்திலும் இருக்கும் நமக்கு இது பெரும் அவமானம் இல்லையா.

உலகக்கோப்பை

கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் பெரும் உற்சாகத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது. போட்டிகள் குறித்து ஒவ்வொரு நாளும் அலசி, ஆராய்ந்து வரும் நாம், இந்தியா இதில் பங்கெடுக்க முடியாமல் போனது குறித்து கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து ஒரு வீரர் உருவாக வேண்டும் என நினைத்திருப்போமா.

"விளையாடினால் உடலில் அடிபடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். வெயில் அதிகம்" என்று கூறும் அதே பெற்றோர்தான், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செலவதற்கே மோட்டார் பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பதும் "உடல்நலமே பெரும் சொத்து" என்பதும் நம் முன்னோர்கள் கூறிச்சென்ற உடல்நலம் குறித்த பழமொழிகள். ஆனால் இன்று நாம் சுவரை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்து வருகின்றோம்.

உடற்பயிற்சி

நிகழ்கால இந்தியா "இளம் இந்தியா" என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் வருங்கால இந்தியாவை "நோய்மிகு இந்தியா"வாக மாறிவிடக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 45, 000 கோடி ரூபாய். ஆனால் இதில் பள்ளிக்கூடங்கள் சார்ந்த  உடற்பயிற்சிக்கு எத்தனை ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.

12 முதல் 16 வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம். இப்பருவத்தில் மாணவர்களை நெறிப்படுத்த உடற்பயிற்சி அவசியம் தேவை. ஆனால் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே பள்ளிப் பருவத்தை கடந்து செல்லும் தலைமுறையாக, இந்தத் தலைமுறை இருக்கிறது.

மாணவர் வளம்

தமிழகம் முழுவதும் 56,573 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.  இந்த எண்ணிக்கை மாபெரும் சாதனைகளை படைக்கக்கூடிய அளவில்லா சக்தி கொண்டது. ஆனால் இந்த சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளை தவிர்த்து, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

250 மாணவருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக 180 மாணவர் இருந்தால் இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில் உள்ளது.

ஆசிரியர்கள் இல்லை

23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது. அரசினர் நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்கள் 23,500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையினாலும், விளையாட்டு உபகரணங்கள், உதவிகள் போதுமான அளவில் வழங்கப்படாததும் அரசிற்கு பொருளாதார இழப்பின்மை போன்று தெரிந்தாலும். அனைத்துவிதமான திறமைகளை கொண்டிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழிகாட்டுதல் இல்லாமல் விளையாட்டினை  மறந்தேவிடுகின்றனர்.

வேண்டுகோள்

கடந்த 2013 ஜூன் மாதத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கல்வித்துறை அமைச்சரிடம் "விளையாட்டுக்கென தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம்" என, பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.  கருத்துக்கள் குறித்து எந்த அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது?

கலைக்கல்லூரிகள்

கல்லூரிகள் 2 விழுக்காட்டு இடத்தை விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. இதனை பல்கலைக்கழகங்களும், யூ.ஜி.சி.யும் கண்காணிக்க வேண்டும். அதிலும் ஒரு சில கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள் என்றால் "இந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது, அதனால் இந்த படிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று வேறு ஒரு பாடப்பிரிவை திணிக்கும் நிலை உள்ளது.

இதானால் விளையாட்டு ஆர்வத்துடன் கல்லூரியில் படிக்க வரும் மாணவர் "படிப்பா, விளையாட்டா" என்ற குழப்ப நிலையில் இறுதியில் விளையாட்டை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

முக்கியத்துவம்

"அனைத்து மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு மைதானங்களும் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்க முன்வர வேண்டும்." என்கிறார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர்.

பொறியியல் கல்லூரிகள்


 தங்கள் மாணவர்கள் படித்து வெற்றியோடு வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான கல்லூரிகளும், திறனுள்ளவர்களாக, வேலைவாய்ப்பை பெற தகுதியுள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்று சில கல்லூரிகளும் நினைக்கின்றன. ஆனால் மிகச் சொற்பமான பொறியியல் கல்லூரிகளே "விளையாட்டு வீரர்களாகவும் திகழ வேண்டும்" என்று மிக ஆர்வத்துடன் பயிற்சியை வழங்கி, போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள்.

550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அரசு வழங்கும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 500 இடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு கல்லூரிக்கு ஒரு இடம் என்ற அளவில் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்லூரிக்கு ஒரு விளையாட்டு வீரர் இருந்தால் போதுமா? ஒரு விளையாட்டினை விளையாடுவதற்கு 10 பேருக்கு மேற்பட்ட விளையாட்டுக்குழு தேவைப்படுகிறது. பிறகு எப்படி விளையாட்டு மேம்படும்.

மருத்துவக் கல்லூரிகள்

உடல் நலமிக்க இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மற்றவர்களின் உடல்நலம் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க கற்றுத்தரும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விளையாடுவதற்கான வாய்ப்புகளை அளிப்பதில் பின் தங்கியே இருக்கின்றன.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடின் மூலமே, மாணவர்களுக்கு மருத்துவ துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை உணர்ந்துகொள்ளலாம்.
சரிவிகித வளர்ச்சி
"அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும்" என்ற நோக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதியை முதல்வர் ஒதுக்கீடு செயததாக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கல்வி வளர்ச்சி மட்டும் தனியாக இருப்பது, ஒரு கை மட்டும் நல்ல வளர்ச்சியையும், மற்றொரு கை குறைவான வளர்ச்சியும் பெற்றதற்கு ஈடாகும். உடல்நலம் சார்ந்த உடற்பயிற்சியும் இணைந்தால்தான் அது சரிவிகித வளர்ச்சி.
2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக  பட்ஜெட்

உயர் கல்வித்துறை - ரூ.3,627 கோடி
பள்ளி கல்வித் துறைக்கு - ரூ.17,731 கோடி
இலவச புத்தகங்கள்- ரூ.264.35 கோடி 
இடைநிற்றலைக் குறைக்க - ரூ.55.11 கோடி 
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் - ரூ.585.17 கோடி  
இலவச மடிக்கணினி - ரூ.4,200 கோடி 
உடற்பயிற்சி & உபகரணங்கள் - ?

என்ன செய்யலாம்?
பள்ளி, கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு விளையாட்டு வீரர்களையும் அழைத்து வந்து வீரர்களுக்கு மரியாதையையும், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் கொண்டு வரவேண்டும்.
சி.எஸ்.ஆர். எனப்படும் "கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி" நடவடிக்கைகளில் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொண்டு வருவதற்கு விதிமுறைகள் கொண்டு வரவேண்டும். பெரு நிறுவனங்கள் தங்கள் நிதியில் குறிப்பிட்ட பங்கினை விளையாட்டு மன்றங்களைத் துவக்கி வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உலகத் தரத்தில் புதிய மைதானங்களை உருவாக்க வேண்டும்.
நலிவடைந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டு அவசியம் என்ற நிலையைக் கொண்டு வந்து, மாணவரின் மதிப்பெண் சான்றிதழில் அதனை பதிய வேண்டும்.
வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வேறு மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்களை அழைத்து வரும் நிலையை மாற்றி, விளையாட்டு வீரர்களை பணியமர்த்த வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து துறையிலும் வேலைவாய்ப்பினை அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல் நலம் எனும் மாபெரும் பொறுப்பு அனைவருக்கும் இருந்தாலும், அதனை பேணிக்காப்பதில் அரசாங்கமே முக்கிய பங்காற்றுகிறது. தொற்று நோய் பரவினாலும், தொற்றா நோய் இருந்தாலும் அரசாங்கமே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன் நின்று நடத்தவேண்டிய கடமை இருக்கிறது. எதிர்காலமானது, நலமுடன் கூடிய வெற்றி பதக்கங்களை நாட்டுக்கு அளித்து, உலக அளவில் பெறுமை சேர்க்கும் வீரர்களைக் கொண்டதாக நாடு அமையட்டும்.
- இலா. தேவா
கல்விமலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24723&cat=1

ஞாயிறு, 15 ஜூன், 2014

மாற்றங்கள்: நிகழ்வுகளும், விளைவுகளும்

\


மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை கட்டமைப்பை பல்வேறு சூழ்நிலைகளில் நாம் கேட்டிருக்கலாம்.
அந்த வார்த்தைகளை சிந்தித்தும் இருக்கலாம். மாற்றம் என்பது தொழில்நுட்பத்திற்கும், உடை,  வாய்ப்புகள் போன்றவற்றிற்கு மட்டுமே என்பது பலரது எண்ணமாக இருக்கலாம். அல்லது பெரிய மாற்றங்களால் மனது கவலை கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமல் அதன் சாராம்சத்தையோ  பயன்படுத்தியிருக்கலாம்.
எவை மாற்றங்கள்?
அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் மாற்றங்கள் என்பது உடனடியாக நம்மையே மாற்றிப்போடும் பெரும் நிகழ்வுகள் மட்டுமல்ல. நம்மை சிறிது சிறிதாக செதுக்கும் சின்னஞ்சிறிய கருத்துக்கள், நிகழ்வுகள், புரிதல் போன்றவையும் மாற்றங்களே. சிறிய வயதில் பிடித்த உணவு, பொழுதுபோக்குகள், பயணங்கள் போன்றவை இப்போதும் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும், அதனை அப்படியே தொடர்ந்து பின்பற்றுவதில்லை. நம்மிடையே துரித உணவுப் பழக்கங்கள், நவீன தொழில்நுட்பப் பொழுதுபோக்குகள், பெரும் ஓய்வு என தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

பெரும்பாலும் மாறுதலுக்கு மனம் எப்போதும் தயாராக இருப்பதில்லை. ஒரு சில நேரங்களில் முற்றிலும் மறுக்கும் நிலையிலேயே மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால், அரைகுறை மனதுடன் மாற்றங்களை ஒரு வித சந்தேகப் பார்வையின் வழியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் செயல்களே வெற்றிகரமான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.


மாற்றங்கள் நம்மை மாற்றும்


சின்ன  மாற்றங்கள் கூட பெரிய மாறுதலை உருவாக்கும். ஒரு சிறு தீக்குச்சியிலிருந்து வரும் தீயானது பெரும் வெளிச்சத்தை உருவாக்குகிறது. சின்னஞ்சிறு விதையிலிருந்து வெளிவரும் விதையிலைதான் பெரும் ஆலமரத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நாம் அறிந்த முதுமொழி. எனவே எந்த ஒரு செயலையோ, நிகழ்வையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மண்ணில் விழும் முதல் மழைத்துளியானது கோடைகாலத்தின் வெப்பத்தை எல்லாம் தணிக்கும் பெரு மழையாய் மனம் எண்ணும் வகையில் ஆனந்தத்தைத் தருகிறது.


வித்தியாசத்தை உணரவேண்டும்


மாற்றங்கள் நீதி நெறிகளின்படியும், ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கானதாகவோ அல்லது நேர்மையான வழியில் பொருள் ஈட்டித்தருவதாகவோ இருக்கலாம். தவறான பாதையில் நம்மை இட்டுச்செல்லும் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன்னுரிமையோ அல்லது ஆதரவையோ தருவது அழிவிற்கு மட்டுமே இட்டுச்செல்லும். அதேபோன்று ஒருவர் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதற்காக நாமும் அதனை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் மருத்துவரின் கையில் இருக்கும் கத்திக்கும், கயவனின் கையில் இருக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசம் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


அன்றும், இன்றும்


வாழும் நாட்கள் அனைத்தும் நாம் நினைத்தாலும் ஒன்றுபோல் இருப்பதில்லை, இருக்காது. ஆனால் வழக்கமான ஒரு சில நடைமுறைகளில் ஒரு சிலவற்றை மாற்றாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பலர் இருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இருவர் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள் "ஆளே மாறிவிட்டாயே". மாறிவிட்டாயே என்பதற்கான அர்த்தம், உடல் ரீதியானதாகவோ அல்லது உடை ரீதியானதாகவோ அல்லது வாழ்க்கை நடைமுறைகள் சார்ந்ததாகவோ இருக்கலாம். இளம் வயதில் பிடித்தவை, தற்பொழுது வெறுப்புக்குரியதாகவோ அல்லது கடந்த காலத்தின் சிறு பிள்ளைத்தனமான ஆசையாகவோ மாறி இருக்கலாம்.


மாறாமல் இருப்பதும் நல்லதே


எனவே ஒரு மாற்றம் குறித்து முடிவெடுக்கும்பொழுது கடந்தவை, எதிர்கால சூழல்கள் என அனைத்தையும் சிந்தித்து தெளிவான முறையில் மாற்றங்களை நோக்கி சென்றால் அதுவே வளர்ச்சியும் வெற்றியுமாகும். மாற்றங்கள் அனைத்திற்கும் தேவை என்பது போன்று தோன்றினாலும், ஒரு சிலவை மாறாமல் இருப்பதுதான் வருங்காலத்திற்கு நாம் கொடுக்கும் சிறப்பான வரவேற்பாக இருக்க முடியும். குறிப்பாக சத்தான உணவுப்பழக்க வழக்கங்கள், சூழலுக்கு ஏற்ற உடை, இயற்கையோடு இணைந்த வாழ்வு மற்றும் உறவுகளின் தொடர்ச்சி ஆகியவை மாறாமல் இருப்பது வாழ்வை மாறாத மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.


- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24524&cat=1

ஞாயிறு, 16 மார்ச், 2014

மதிப்பீடுகள்: உங்களை அறிவதற்கு




தங்கள் முன்னேற்றத்திற்காக தங்களைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து அதனை சீர்படுத்திக்கொள்ள முயற்சி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகளே, அவரை அறிவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும், பணிக்கு சேர்வதாக இருந்தாலும் அங்கே கூறப்படும் முக்கியமான வார்த்தைகள் "பையன்  ஒழுக்கமானவன்", "வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவாள்", "நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நடப்பான்" போன்றவை ஆகும். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் மதிப்பும், நம்பிக்கையுமே அவைகளைக் கூறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த மாணவன் புத்தி கூர்மையானவன், இந்த இளம் பெண் திறமையானவள் என மற்றவர் கூறுவதை விட, நம்மை நாமே அந்த உயர்ந்த  நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும்.  அதற்கு தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தன்னைப் பற்றி அறிய வேண்டுமானால் அதற்கு மற்றொருவரின் கருத்துக்களும் தேவைப்படுகிறது.
மதிப்பீடு செய்வது எப்படி?
நீங்கள் உங்களின் உண்மையான திறன்களை நீங்களாக அறிந்துகொள்ள முடியாது. உங்களைப் பற்றி உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு சில முயற்சிகள் தேவைப்படுகிறது. உங்களை சுற்றி உள்ளவர்கள் மற்றும் உங்களோடு நீண்ட நாட்களாகப் பழகியவர்களுக்கு உங்கள் குணங்கள், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி மாறுபடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களிடம், நீங்களாக கேட்டால் மட்டுமே சொல்வார்கள். உங்களைப் பற்றி அறிந்துகொள்ள மாற்றுக் கருத்து உடையவரும் கூட உதவி புரிவார். ஏனெனில் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை கூறக்கூடியவர், உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் அவர்களிடமிருந்து உங்கள் முன்னேற்றத்திற்கான சமரசமில்லாத தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். அதனால் அவர்கள் கூறும் கருத்துக்கு நீங்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை, அதே போன்று அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.
கருத்துக்களை ஆராயுங்கள்
மற்றவர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை எல்லாம் வைத்து, கூறப்பட்டவைகளில், உண்மைத் தன்மை இருக்கிறதா? என்பதை வெளிப்படையாக ஆராயுங்கள். பெறப்பட்ட கருத்துக்கள் பொதுவானவையாக இருக்கிறதா அல்லது கூறியவரின் தனிப்பட்ட பார்வையில் இருக்கிறதா என்பதை கண்டுகொள்ளுங்கள். பொதுவான, சமூகத்திற்கு நன்மை தரும் கருத்துக்களே நாட்டிற்கும், நாம் வாழும் ஊருக்கும் பெருமை சேர்க்கும்.
தனிப்பட்ட நபரின் பார்வையில் இருக்கும் கருத்துக்கள், நமக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. பெறப்பட்ட கருத்துக்களை செயல்படுத்தினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை ஆராயுங்கள். இது போன்ற செயல்பாடுகளினால், பிறர் எந்த மாதிரியான முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள் என ஆராய்வது எளிதாக முடிவுகளை எடுக்க உதவும்.
மாற்றங்களை செயல் வடிவத்திற்கு கொண்டு வரும்பொழுது ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துங்கள், நடைமுறைப்படுத்தப்பட்டதின் விளைவுகள் உடனடியாக தெரியாவிட்டாலும், சில காலங்களில் உங்களுக்கு நிச்சயமான மறு மலர்ச்சியை தரும்.
கல்விமலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23092&cat=1

வியாழன், 6 மார்ச், 2014

சுமைகளிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை...



பள்ளியில் படிக்கும் காலத்தில் எடை அதிகமானதும், பெரிய அளவிலுமான புத்தகப் பைகளை சுமந்து செல்லும் மாணவர்களை சில வருடம் முன்பு வரை பார்த்திருக்கலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு பைகளின் அளவு சற்று குறைந்திருந்தாலும், முன்னர் இருந்த நிலைக்கு பெரிய மாற்றம் இல்லை என்ற நிலையிலேயே தான் பைகளின் அளவு இருக்கிறது.
மாணவர்களின் பைகளில் புத்தகங்கள், எழுது பொருட்கள் பெட்டி,  ஜாமெட்ரி பாக்ஸ் (கணித வடிவியல் பெட்டி),  ஓவிய பொருட்கள் என இருக்கும்.  மேலும் ஒரு சில மாணவர்களின் பைகள் கதை புத்தகங்கள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என பல வகையான பொருட்களால் நிரம்பி இருக்கும். மாணவர்களுக்கு மாணவர்கள் இது வேறுபட்டாலும் கொண்டு வரும் பொருட்கள் அதிகம் என்பது பொதுவான ஒன்று.
ஒன்று போதும்
ஆனால் கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஒரு நோட்டு, ஒரு எழுதுகோல் என மாணவர்களின் பொருட்களின் அளவு மிகவும் சுருங்கி விடுகிறது. அதிலும் ஒரு சில மாணவர்கள் ஒன்றிரண்டு தாள்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்துவிடுகின்றனர். அப்படி வரும் மாணவர்களிலும் பேனாவை ஒழுங்காக கொண்டு வராத மாணவர்கள் வகுப்பிற்கு 2 பேராவது இருக்கும் நிலை பல கல்லூரிகளில் காணப்படுகிறது.
கல்லூரியில் நோட்டின் தேவை என்பது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது மாணவர்களின் நினைப்பாக இருக்கிறது. "குறிப்பெடுக்க விருப்பமில்லை என்ற போது, நோட்டு எதற்காக கொண்டு வர வேண்டும்?" என்பது மாணவர்களிடமிருந்து வரும் கேள்வி.
உதவும் தொழில்நுட்பம்
நோட்டு மற்றும் பேனாவுடன் எளிதாக உடன் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு சில பொருட்கள் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். அவற்றில் முதலாவது நம்முடன் இருப்பது அலைபேசி. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடையே "ஸ்மார்ட் ஃபோன்" பயன்படுத்தும் பழக்கம் பரவலாகி வருகிறது. இது போன்ற நவீன அலைபேசிகளில் பேசுவதை பதிவு செய்யும் வசதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதான செயலாக இருப்பதில்லை. அலைபேசிகளில் பல செயலிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
மாணவ மாணவியரிடையே புதிய தொழிநுட்பம் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் தங்களையும் மாற்றிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் சட்டைப் பையில் அல்லது காற்சட்டையில் வைக்கக்கூடிய வகையில் இருப்பது "பென் டிரைவ்" அல்லது "மெமரி கார்டு" தகவல்களை பெற்றுச் சென்று கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பயன்படுத்தி பாட சம்பந்தமான தகவல்களைப் பெறலாம்.
தேவைக்கு மட்டும்
மாற்றங்கள் பாடப்புத்தகத்திற்கான சுமைகளை குறைத்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்களே அவற்றை எளிதாக மாற்றியிருக்கலாம்.  தொழில்நுட்பங்களை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தொழில்நுட்பம் இல்லாமலும் பழக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொழில்நுட்பங்கள் மிகவும் தேவையாக இருக்கின்ற நேரத்தில் செயல்படாமல் நம்மை ஏமாற்றலாம். அதற்கு ஏற்ற வகையிலும் தயாராக இருக்க வேண்டும்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22929&cat=1

புதன், 26 பிப்ரவரி, 2014

பொறியியல் மாணவர்களின் நிலை கேள்விக்குரியதா?



வரும் மே மாதத்தில் தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து முடித்து வெளியேற இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேலை உறுதியாக காத்திருக்கிறதா என்பது கேள்விக்குரியதே.
இதில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முதுநிலை படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை என குறிப்பிடத்தகுந்த அளவான மாணவர்கள் மட்டும் வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல் இருக்கலாம்.
தகவல் தொழில்நுட்பத்துறை
பொறியியல் பாடங்களில் முக்கியத்துவமான பாடமாக பார்க்கப்பட்டு 2002ம் ஆண்டு முதல் 2008 வரை பெரும் முன்னேற்றம் கண்ட துறையாக விளங்கியது தகவல் தொழில்நுட்பத்துறையாகும். 2008க்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பித்ததும்,  ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி வளாகத்தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்ததும்  ஆர்வத்துடன் படிக்க வந்த மாணவர்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது. 
ஆனால், அதே நேரம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கும் ஊதியத்தின் அளவும் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அதிகமான ஊதியத்துடன் கிடைத்த வாய்ப்புகள் மற்ற கல்லூரி மாணவர்களிடையே ஏக்கத்தையும், வியப்பையும் உருவாக்கியுள்ளது. அதே போன்று சிறந்த தனியார் கல்லூரிகள், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நடக்கும் வளாகத்தேர்விலும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சிறப்பான ஊதியத்தை  பெறுகின்றனர்.
மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், கூகுள், விப்ரோ, டி.சி.எஸ்., அக்செஞ்சர், கோக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றன. இது சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும்,  பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.
ஆட்தேர்வில் மாற்றம்
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை கணக்கில் எடுத்தால் 3 ஆயிரத்தை கடந்து செல்லும். இதில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை பெறுவது சந்தேகமே. தற்பொழுது நிறுவனங்களும் ஆள் எடுப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றன. மாணவர்களை தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து பணிக்கு அமர்த்துகின்றனர். பயிற்சிக்கு செலவழிக்கும் தொகை அதிகமாக இருப்பதால், பயிற்சி அளிப்பதை நிறுத்தி நேரடியாக பணிக்கு தயாராக இருப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நிலைப்பாட்டை கல்வியாளர்கள் குறை கூறுகின்றனர். ஏனெனில் வருடம்தோறும் புதிய புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருகிறது.
பாதிப்பிற்கான காரணம்
"இருக்கின்ற கல்வி நிறுவனங்கள் போதிய கட்டமைப்புகளோடு இல்லாத நிலையிலும், மாணவர்கள் வேலை பெறுவதற்கான திறன்களை மேம்படுத்த பல கல்வி நிறுவனங்கள் முயற்சி செய்யாத நிலையிலும், தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் உள்ள நிலையிலும் புதிய கல்லூரிகள் உருவாவது நாட்டின் எதிர்காலத்திற்கும் உகந்தது அல்ல" என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரே துறை சார்ந்து அதிகமான கல்வி நிறுவனங்கள் உருவாவது பிற துறைகளின் வளர்ச்சியை பாதிப்பதோடு, சமூக வளர்ச்சியிலும் ஒரு சம நிலையை உருவாக்குவதில் மறைமுகமான தடைகளாக இவை இருக்கிறது.
சரிவிகித வளர்ச்சி அவசியம்
தமிழகத்தைப் பொறுத்த வரை 2005களில் 200களில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2013ல் 550ஐ கடந்து சென்றுவிட்டது. இந்த அபரிவித வளர்ச்சிக்கு தகுந்த வகையில் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடுவதும், குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் தொழில் நிறுவனங்களைப் போன்றது அல்ல கல்வி நிறுவனம். படிக்கும் இளையோர்களின் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமாக இருக்கிறது.

கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22800&cat=1

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உலகத் தாய்மொழிகள் தினம் - வையத் திறன் கொள்



தாய்மொழி மட்டும் கற்று வந்த நிலை மாற்றம் பெற்று கூடுதலாக வேலைக்காகவும், இருக்கும் இடத்திற்காகவும் மேலும் பல மொழிகளை கற்கும் சூழ்நிலையில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.
பல மொழிகள் அறிந்திருப்பது பயணிக்கும் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒரே இடத்தில் இருந்து மொழிபெயர்த்தல், புரிந்து கொள்ளுதல், வணிகம் சார்ந்த செயல்கள் போன்றவற்றுக்காக அதிகமான மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது.
மொழி அறிமுகம்
மொழியை கற்றுக்கொள்வது மழலைப் பருவத்தில் ஆரம்பமாகிறது. குழந்தை முதலில் தனது தாய்மொழியை கற்றுக்கொள்கிறது. காரணம் குழந்தையைச் சுற்றி இருக்கும் அனைவரும் தாய்மொழியில் வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வதால், அதனைக் கேட்டு கேட்டு புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகிறது. அதற்கடுத்ததாக தொலைக்காட்சி, நண்பர்கள், பள்ளிக்கூடம் மூலமாக ஆங்கில மொழிக்கு அறிமுகமாகிறது.
ஒரு மொழி பேசும் இடத்தில் வளரும் குழந்தையை விட, சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் வசிக்கும் பெற்றோரின் குழந்தைகள் கூடுதலாக மேலும் ஒரு மொழியை எளிதாக தெரிந்துகொள்கிறது. தமிழகத்தில் உள்ள ஒரு குழந்தை டில்லியில் வளரும்பொழுது வீட்டில் தமிழ், வெளியில் இந்தி, பள்ளியில் ஆங்கிலம் என மூன்று மொழிகளை எந்தவித கட்டாயமும் இல்லாமல் தானாகவே தெரிந்துகொள்கிறது.
வாய்ப்புகள் ஏற்படுத்தும் சூழல்
பெற்றோர்கள் தங்கள் பணிக்காக மாநிலம் விட்டு மாநிலம் மாறும்பொழுதோ அல்லது ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்லும்பொழுதோ பெற்றோரை விட குழந்தைகள் விரைவாக அந்த இடத்தில் பேசக்கூடிய மொழியை உள்வாங்கிக்கொள்கிறது. வெளிநாட்டுக்கு கல்விக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் பள்ளியில் அல்லது பள்ளி படிப்பின் இறுதி காலத்தில் தாங்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு ஏற்ப பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.
இதன்மூலம் ஒரு மாணவன் சர்வதேச அளவில் பணியாற்றுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறான். கட்டாயத்தால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதற்கும்,  இயற்கையான சூழலால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது. முதலாவது உள்ளது சற்று கடினமானது, இரண்டாவது உள்ளது வழக்கம்போல் உள்ள ஒரு நிகழ்வைப் போன்றது. குழந்தைப் பருவத்தில் பல மொழிகளைக் கற்றுக்கொள்வது வயது, சூழ்நிலை, வாய்ப்புகள் போன்ற காரணிகளால் எளிதாகிறது.
மொழியை உணர வேண்டும்
பல மொழிகளைக் கற்கும்பொழுது அனைத்து மொழிகளிலும் சிறப்பான முறையில் எழுதுவதும், பேசுவதும் கட்டாயம். மேலோட்டமாக மொழிகளைக் கற்பதால் பயன் ஒன்றும் இல்லை.  கற்பதற்கான தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஒரே மொழி பேசும் மாநிலத்திற்குள் மட்டுமே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களும் தாய்மொழியைக் கடந்து மற்ற மொழியை கற்பது பல்வேறுபட்ட தகவல்களை அறிந்துகொள்வதற்கு துணைபுரியும்.
பல மொழிகள் கற்கும்பொழுது அந்தந்த மொழிகளிகளின் இலக்கியம், அறிவு சார் புத்தகங்கள், குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுடன் எளிதாக பழகுவது என பல நன்மைகள் கிடைக்கின்றன.  எந்த மொழி பேசினாலும் "தாய்மொழி போல சிறப்பான மொழி எதுவுமில்லை" என அந்தந்த மொழி பேசுபவர்களால் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொள்ளப்பட்ட உண்மை.
குழந்தைப் பருவத்தில் தாய்மொழியை தெளிவாக பேசுவதற்கும், பிழையின்றி எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தும் அதே நேரத்தில், மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22730&cat=1

புதன், 12 பிப்ரவரி, 2014

நலமான வளத்தை தரும் வாசிக்கும் பழக்கம்




பொழுதுபோக்கு அம்சங்கள் பெருகப்பெருக பொழுதினை போக்குவது எளிதானதாகிவிட்டது. ஆனால் கடந்து சென்ற பொழுதுகள் கற்றுத்தந்தது என்ன என சிந்தித்தால் பலன் ஒன்றும் மிஞ்சியிருக்காது. இதற்கு முக்கிய காரணம் பயன்தராத பொழுதுபோக்கு அம்சங்கள்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினர் வளர்ச்சியை விரைவாக அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நிதானமாக, தெளிவுடன் ஒரு செயலை செய்து படிப்படியாக அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை மாறி வருகிறது. வாய்ப்புகள் இருக்கிறது வளமாகிக்கொள்வோம் என்று நினைப்பதில் தவறில்லை என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் நல்ல வழியை கொண்டது என்று சொல்ல முடியாத நிலையில் இன்றைய உலகின் நிலை இருக்கிறது.
நகர வாழ்க்கையின் நெருக்கடிகள் பணத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.  பொருளாதாரத்தால் சாதித்தவர்களை கண்டு பிறரும் அந்த பாதையை பின்பற்ற தொடங்குகின்றனர். வாழ்க்கையே பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும்தான் என்ற நினைப்பு மேலோங்கி இருக்கிறது. பொருளாதாரத்தைக் கடந்த வாழ்வியலை மறந்துகொண்டிருக்கிறோம்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அதிகமான ஊதியத்தை தரக்கூடிய படிப்பு, வேலையை வரவேற்கும் வகையில் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்கின்றனர். இதற்கு முக்கிய அடிப்படைக் காரணமாக "பொதுநலன், இரக்கம் போன்றவை குறைந்து வருவதும், சுயநலன் பெருகி வருவது" போன்றவை இருப்பதாக உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பொதுநலன், இரக்கம் போன்றவை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி இருக்க வேண்டும் அல்லது அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்து வரும் வேளையில் சூழ்நிலைகள் இயற்கையாகவே அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. வளரும் இளம் தலைமுறைக்கு தேவையானதை கற்றுக்கொடுப்பதின் மூலமே சுயநலத்தை இல்லாததாக்க முடியும். கற்றுக்கொடுத்தல் என வரும்பொழுது அதில் பெரும் பங்கு வகிப்பது புத்தகங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தெரிவதைப்போல் தெரிவதை மாற்றக்கூடிய திறன் புத்தகங்களுக்கு உண்டு. ஏனெனில் புத்தகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பார்வையையோ, கருத்துக்களையோ, கொள்கைகளையோ கொண்டிருப்பதில்லை. அவை மாறுபட்ட கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கும் பணியை வெற்றிகரமாக செய்கிறது. ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டோம் என்றால் அந்த புத்தகம் நாம் விரும்பும் நேரமெல்லாம் அதன் கருத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. மற்றொரு புத்தகத்தை படிக்கும்பொழுது அது வேறு ஒரு கோணத்தில் இந்த உலகை பார்ப்பதற்கு உதவி செய்கிறது.
படித்த மாறுபட்ட புத்தகங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. சிந்தனை தேடுதலை உன்டாக்குகிறது. தேடுதல் நாம் அறிந்திராத பல கண்டுபிடிப்புகளை நம்மை கண்டுகொள்ள வைக்கிறது. ஒரு இயல்பான வாழ்க்கை முறையை மாற்றி செயல்திறன் வாய்ந்த புதிய வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லும் பணியை புத்தகங்கள் சிறப்புற செய்கின்றன. நாம் சந்தித்திராத மனிதர்களின் வாழ்க்கையை, தெரியாத அறிவியலை, புரியாத வரலாற்றை, உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கலையை, மரபுகளை புத்தகங்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
இளம் தலைமுறைக்கு மின் சாதனங்களிலிருந்து விடுதலை அளித்து புத்தகங்களை கையில் எடுக்க வைப்பது அவசியமாக இருக்கிறது. கண்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பைத் தரும் அவற்றை விட்டு, புத்தக வாசிப்பு பழக்கத்திற்கு அழைத்து வருவது ஒரே நாளில் வந்துவிடாது. அதனை சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.
வாசிக்கும் திறனை மேம்படுத்த குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு, ஆரம்பத்தில் படங்கள் நிறைந்த புத்தகத்தை அளித்து, விளையாடுவதற்கு அளிக்கலாம்.  தொடர்ந்து படிப்படியாக படக்கதைகள் அடுத்து புத்தகங்கள் என மேம்படுத்தலாம். இளம் வயது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடம், துறை, கதைகள் குறித்த புத்தகங்கள் வாங்கி தினமும் 10 நிமிடமாவது ஒதுக்கி வாசிக்க ஆரம்பிக்கலாம். நிச்சயம் முன்னேற்றம் காணப்படும்.
எல்லோருக்கும் அவசியமானது தினந்தோறும் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வது. நாளிதழை படிப்பதன் மூலம் வாசிக்கும் ஆர்வம் நிச்சயம் அதிகமாகும். ஆரம்பத்தில் விருப்பமான செய்திகளை மட்டும் படிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல மற்ற செய்திகளையும் படிக்க தோன்றும். இதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வு புத்தக வாசிப்பிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
புத்தக வாசிப்பானது விழிப்புணர்வு, சிந்தனை, ஆர்வம், ரசிக்கும் தன்மை, ஆராயும் குணம், மனிதத்தன்மை, போராட்ட குணம் என வாழ்வியலின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு களம்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22569&cat=1

புதன், 29 ஜனவரி, 2014

முன்னேற்றத்திற்கான வழி: நேர மேலாண்மை

மாணவர்கள், வேலை தேடும் இளையோர்கள் என ஒவ்வொருவருக்கும் தேவையான நேரம் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றம் காண்கிறது.
பள்ளி செல்லும் மாணவருக்கு அன்றைய வீட்டுப்பாடங்களை தூங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்பதும், கல்லூரி மாணவருக்கு பரீட்சை காலத்தில் தங்கள் பாடங்களை படித்து முடிக்க வேண்டும் என்ற அவசரமும், வேலை தேடுவோருக்கு வயதாகிக் கொண்டே போகிறது விரைவாக வேலையினைப் பெற்று வருமானத்தை பெற வேண்டும் என்பன  போன்ற தேவைகள் இருக்கின்றது.
தனிப்பட்ட தேவைகளுக்காக ஓவ்வொருவரும் செலவழிக்கும் நேரமும், தேவையான நேர அளவும் மாறுபடுகிறது. தேவைப்படும் நேரத்தை சரியாக கணக்கிட்டு, மிச்சமிருக்கும் நேரத்தை உபயோகமான வகையில் பயன்படுத்திக்கொள்வதுதான் அறிவை வளர்க்கும் செயல். ஜப்பானியர்கள் பயணத்தின் போது கிடைக்கும் நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்திவிட்டு, கிடைக்கும் நேரத்தை வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
நாமும் அதுபோன்று இருக்க வேண்டும் என்பது அல்ல. இது ஜப்பானியர்களின் நேர மேலாண்மை குறித்த ஒரு பதிவே. நமக்கானத் தேவைகள், பயணங்கள், சூழ்நிலைகள், காலங்கள் வேறு மாதிரியானவை. நாம் அப்படியே பிறரின் நேர மேலாண்மையை பின்பற்றினால், அது வெற்றிகரமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. கிடைக்கும் நேரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு நாமே ஒரு திட்டமிடலை உருவாக்க வேண்டும்.
* என்னென்ன வேலைகளுக்காக எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்?
* தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரங்கள்.
* தேவைக்கும் குறைவாக இருக்கும் நேரங்கள்
* வருங்காலத் தேவைகள்
* வருங்காலத்திற்காக தயாராக என்ன செய்யலாம்?
* தன்னிடம் குறைவாக இருக்கும் திறனை, கிடைக்கும் நேரத்தைக் கொண்டு * எப்படி மேம்படுத்துவது?

போன்ற கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்தால், நேர திட்டமிடல் குறித்த ஒரு தெளிவான வரையறைக்குள் வர முடியும். திட்டமிடல் குறித்த இந்த வரையறை எதிர்காலத்திற்கான முடிவுகளை எடுக்கும்போது மிகவும் துணை புரியும்.
எனேனில் உங்கள் மூளைக்குள் எப்பொழுதும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் நீங்கள் முடிவுகளை எடுக்கும்பொழுது அது உங்களை வேகமாக இயங்க கட்டாயப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கிறது, நீங்கள் எந்த நிறுவனம் சிறந்த நிறுவனம் என்று ஆய்வு செய்கிறீர்கள், எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதில் தெளிவு காண்கிறீர்கள். மூளையின் செயல் திறன் சிறப்பாக இருந்தால்தான் தெளிவான முடிவுகளை விரைவாக எடுக்க முடியும்.
நேர மேலாண்மையே சுறுசுறுப்பையும், செயல் திறனையும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கிடைக்கும் சுறுசுறுப்பும், தெளிவான திட்டமிட்ட செயல் வேகமும் நம்மை முன்னேற்றத்திற்கான வழியில் அழைத்துச் செல்லும்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22343&cat=1

புதன், 15 ஜனவரி, 2014

பண்டிகைக் கால விடுமுறைகளும், மாணவப் பருவமும்...


மாணவர்களுக்கு பரீட்சை காலம் எப்படி கடினமானதோ அதற்கு நேர் எதிரானது விடுமுறைகளும், பண்டிகைக் காலங்களும்.
விடுமுறைகள் என்றால் விளையாட்டுக்களோடும், பொழுது போக்குகளோடும் மட்டும் கடந்து செல்லும். ஆனால் பண்டிகைக்கால விடுமுறைகள் அப்படிப்பட்டது அல்ல. புதிய உடை, பல்சுவை பலகாரங்கள், உணவு வகைகள், கொண்டாட்டம் என மற்ற விடுமுறைகளை விட மாறுபட்டு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
ஆண்டுதோறும் ஒரே விதமான பண்டிகைகளே இருந்தாலும், ஓவ்வொரு ஆண்டுக்குமான பண்டிகைக் கொண்டாட்டங்களானது சூழ்நிலைகள், வயது ஆகியவற்றைப் பொருத்து மாற்றம் காண்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பண்டிகைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் படிக்கும் காலத்தில் பொதுவானதாக இருக்கிறது. பண்டிகைகளின் போது மற்ற நண்பர்களையும் அழைத்து பலகாரங்களை உண்ண வைப்பது, உணவு வழங்குவது என நட்பையும், ஒற்றுமையையும் அதிகப்படுத்துவதாக அந்தக் காலங்கள் விளங்குகிறது.
வார இறுதிகளில் வரும் பண்டிகைகள் மாணவர்களிடையே "ஒரு விடுமுறை குறைந்து விட்டதே" என சிறு சோர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் கொண்டாட்டங்களில் மட்டும் மாற்றம் இருப்பதில்லை. பொங்கல் கால விடுமுறைகள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை, எப்படி இருந்தாலும் உறுதியாக 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைக்கும் வகையில் வந்துவிடுகிறது.
பலகாரங்கள் பரிமாற்றம்
ஒவ்வொரு பண்டிகைக்குமான தின்பண்டங்களுக்கு நண்பர்கள் மத்தியில் போட்டியே இருக்கும். தீப ஒளித்திருநாளாக இருந்தால் முறுக்கு, அதிரசம், சீடை போன்ற பலகாரங்களும், கிறிஸ்துமஸ் என்றால் கேக்குகளும், ரம்ஜான் என்றால் பிரியாணிகளுமாக உடன் படிக்கும் நண்பர்களால் வீடுகள் களை கட்டும். பாரபட்சம், விருப்பு, வெறுப்புகளின்றி பகிர்ந்து உண்ணும் பண்டிகைக் காலங்கள் இனிப்புகளோடு இனிமையையும் தருகிறது.
தமிழர் திருநாள்
அனைத்து தரப்பினராலும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையாக, ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழகத்தின் அனைத்து வீடுகளும் இதனை எதிர்நோக்கி இருக்கின்றன.  மாணவர்களைப் பொறுத்த வரையில் மாறிவரும் கல்வி முறைகளும், பயிற்சி மையங்களும் பண்டிகைகளை ஒரு சுதந்திரமான நாளாக உணரும் வகையில் மட்டுமே மாற்றி இருக்கிறது. மேலும் தொலைக்காட்சி அலைவரிசைகள் வீட்டிற்கு வெளியே செல்லாத வகையில் வீட்டிற்குள்ளேயே கட்டிப்போடும் வேலையை செய்கின்றன. செயற்கையான பொழுதுபோக்குகள் அதிகரிக்க அதிகரிக்க பண்டிகைகள் தனது அடிப்படையை இழந்து வருகின்றது.
ஒரு பண்டிகைக்கான சாராம்சங்கள் உணரப்பட்டால்தான் பண்டிகையின் நோக்கம் நிறைவேறும். மனிதனை கவலைகள், துன்பங்களிலிருந்து மீட்டு வந்து, மரபினை மங்காமல் வளர்ச்சியடைய வைக்கும் பணியினை சிறப்பாக செய்வதற்குத்தான் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. விடுமுறை நாள் என்று பார்க்காமல் பண்டிகைகளை, அது ஏன் உருவாக்கப்பட்டது? என ஆராய்ந்து அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் நம்மை உண்மையான வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் பாடங்கள் வேலை வாய்ப்பினை முன்னிறுத்தி அளிக்கப்படுகிறது. அவை வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களை அளிப்பதில்லை. ஆனால் அவற்றுள் சிலவற்றை பண்டிகைகள் நமக்கு கற்றுத் தருகிறது.
அடிப்படையை உணர வேண்டும்
எடுத்துக்காட்டாக பொங்கல் பண்டிகை இயற்கையை போற்றுவதற்கும், அதனை பாதுகாக்கும் உழவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது போன்ற நாட்களில் கிடைக்கும் நேரங்களை, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் பகுதிகளில் மரங்கள், செடிகள் நட்டு பராமரிப்பதற்கான பணிகளை தொடங்கலாம்.  விலங்குகள், பறவைகள் வாழ்வதற்கு இடைஞ்சல் இல்லாமலும், அவைகளுக்குமான முக்கியத்துவத்தை நமது வாழ்க்கையில் அளிக்கலாம்.
மேலும் பொங்கல் விடுமுறைகளில்தான் பெரும்பாலான நகர்ப்புற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இளம் மாணவர்களுக்கும் அப்போழுதுதான் தங்கள் ஊரை, உறவினர்களை, புதிய வாழ்க்கை சூழலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உறவினர்களோடு இருக்கும் மகிழ்ச்சியானது உறவுகளை வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். தனது மரபு வழி இங்கே இருந்துதான் தொடங்குகிறது என்பதை உணர்ந்து, தனது வருங்கால வளர்ச்சியின் போது ஊரின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உறுதிகொள்ள வேண்டும்.
விடுமுறை மட்டுமல்ல...
ஏனெனில் பண்டிகைகள் வாரம்தோறும் வந்து போகும் விடுமுறைகள் மட்டுமல்ல,  சக மனிதனின் அன்பையும், மண்ணின் ஈரத்தையும் நம்மில்  உணரச்செய்யும் நல்ல ஆசிரியருமாகும்.
கல்வி மலர் 

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பொழுது உபயோகமாகப் போகிறதா?


பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது. ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால் முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.
இளம் பருவத்தினர் பாடங்கள் படிப்பதை தவிர்த்து மீதமான நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதில் தெளிவில்லாமலேயே இருக்கின்றனர். பொழுதை கழிப்பதற்காக முதலாவதாக இவர்கள் தேர்ந்தெடுப்படுப்பது தொலைக்காட்சியை, அடுத்ததாக கணினி விளையாட்டுகள், திரைப்படம் என தங்களுக்கு விருப்பமானதாக தெரியும் இவற்றை பயன்படுத்துகின்றனர். நண்பர்கள் இணைந்து திரைப்படம் பார்க்கிறார்கள் என்றால் திரைப்படம் முடிந்தவுடன், நண்பர்களுக்கிடையே ஒவ்வொருவரிடமிருந்தும் "அடுத்து என்ன செய்வது?, அங்கே போவதா?, இங்கே போவதா?" என்று கேள்விகள் எதிர்படுகின்றன. எங்கு போக வேண்டும் என்று சொன்னாலும், அது முதலில் தவிர்க்கப்பட்டு பின்னர் எதாவது இரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கே திருப்தியில்லாமல் செல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது.
நேரத்தை எப்படி கழிப்பது என்று கூட தெரியாமல் அல்லது புரியாத தலைமுறைகளாக இந்தத் தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததோ அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் சூழ்நிலைகளை கட்டமைக்கப்படாதது கூட காரணமாக இருக்கலாம். நேரத்தை எப்படி கழிப்பது? என்பதை சென்னையை கடந்து வெளியூர்களில் இருக்கும் நகரத்து குழந்தைகள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் மின்சாரம் இல்லாத நேரங்கள்.
ஏனென்றால், நேரத்தை செலவழிப்பதற்கு மின்சாரத்தால் இயங்கும் சாதனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை சாதனங்கள் நேரத்தை மட்டுமல்ல அறிவு வளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மின் மற்றும் மின்னணு சாதனங்கள் மனிதர்களுக்கு இடையே இடைவெளியையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பில் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடுமாற்றங்களை சரி செய்ய வேண்டுமென்றால் மீண்டும் தடைகளை கடந்து வெளியேற வேண்டியது இருக்கிறது.
பொழுதை கழிக்கக்கூடிய நேரங்கள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறதா என்பதில் இளம் பருவத்தினர் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சில பெற்றோரும் "தங்கள் பிள்ளை தொந்தரவு செய்யாமல் இருக்கிறதே அதுவே போதும்" என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர். அவசியமில்லாததில் நேரத்தையும், மூளையையும் செலவிடும் இது போன்ற நிலையால், எதிர்கால சமூகத்தின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் எனபதனை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
நேரங்களை உபயோகமான முறையில் மேம்படுத்த நண்பர்களோடு தங்கள் முந்தைய காலத்தில் செய்த குறும்புகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை ஓவ்வொருவரும் பகிர்ந்துகொள்வதே மிகச்சிறந்த பொழுதுபோக்காகும். மனம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது உற்சாகத்தால் நிரம்பி வழிகின்றது. இரவு நேரமாக இருந்தால் வானத்தின் நிலவொளியில் உற்சாகமாக பேசலாம். மரங்கள் சூழ்ந்த பகுதியில் மோட்டார் வாகனங்களை தவிர்த்து கைவீசி பேசலாம். பறவைகளையும், கடல் அலையையும் ரசிக்கலாம். கடல் இல்லாவிட்டால் ஆற்றின் நீரோட்டத்தையும், குளத்தின் அமைதியையும் கண்டு உணரலாம். இயற்கை கணக்கில்லாத பாடங்களை நமக்கு கற்றுத்தர தயாராக இருக்கிறது. பாடங்கள் படிக்க தயாரா?
கல்வி மலர்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

வளமான வாய்ப்புகளைக் கொண்ட வேளாண் துறை



நமது எதிர்காலத்தை தேர்வு செய்யும்பொழுது, பெரும்பாலானோர் அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகளாகப் பார்த்து தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் பொருளாதார முன்னேற்றம்தான் வாழ்க்கையின் முன்னேற்றம் என்ற சூழ்நிலைக்கு இந்த உலகம் நம்மை தள்ளிவிட்டது.
பணம் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும், நல்ல வீடு, செழிப்பான வாழ்க்கை என்று  வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம் என இன்றைய இளைஞர்களும், அவர்களின் பெற்றோரும் நினைக்கின்றனர். பொருளாதார செழிப்பு தான் வாழ்க்கை என்று முடிவெடுத்தவுடன் வாழும் வாழ்க்கையின் நடைமுறைகளும் மாறிவிடுகிறது. பொருளாதாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகளை தேடி ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.
 
வாய்ப்புகளை கண்டறிய முயற்சி செய்யும்பொழுது நாம் வசிக்கும் இடம் மாறுகிறது. நாம் வாழும் முறையை மாற்ற முயற்சி செய்கிறோம். வேலைக்கு தகுந்தவாறு நாம் மாறவேண்டும், என்ற எண்ணம் உருவாவதன் விளைவாக நாம் நம் அடிப்படையை விட்டு விலக தயாராகிறோம். இந்த தயார்படுத்துதல் நம்மோடு முடிவதில்லை, நம் நண்பர்கள், நம் வாரிசுகள் என தொடர்ந்து வரும் இளம் தலைமுறையும் நாம் அமைத்த வழியில் நம்மை தொடர்ந்து வருகிறது. இப்படியாக ஒருவர் பின் ஒருவராக பொருளாதாரம் என்ற வார்த்தையின் பின்னால் பெரும் கூட்டமே சென்று கொண்டிருக்கிறது. இந்த பொருளாதாரம் அடுத்த கட்டமாக நகரமயமாக்கலுக்கு அழைத்துச் செல்கிறது.
 
"நகரமயமாக்கல் என்பது நரகமயமாக்கல்" என்று அழைக்கும் விதத்தில் நகர வாழ்க்கை அவலம் மிகுந்ததாக உள்ளது. காரணம் பொருளாதாரத்தை தேடி ஓடி வரும் பெரும் கூட்டத்தால் தான் என்பது, நாம் கண் கூடாக கண்டுகொண்டிருக்கும் உண்மை. ஒங்கி உயர்ந்த மரங்களும், சலசலப்பான நீரோடைகளும், வாய்க்காலும், பசுமை போர்த்திய வயல்வெளிகளும், ஓடியாடி விளையாடிய விளையாட்டுகளும் என இயற்கையை ரசித்து வாழ்ந்த வாழ்வை நகரமயமாக்கல் அப்படியே எதிராக மாற்றிவிட்டது.

ஆம், இன்று மரங்களே இல்லாத கடும் கோடை வெப்பம் தாக்கும் வெப்பம் மிகுந்த சாலையிலும், சாக்கடை ஓடும் ஆறுகளைக் கண்டு விலகிச் செல்லும் அவலத்தையும்,  தூசியும், புழுதியும் பறக்கும் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் காற்றோட்டமில்லாத நெருக்கடி மிகுந்த இடத்தில் தங்கி நகர வாழ்வை வாழ்ந்து வருகிறோம். இதற்கு காரணமாக சொல்லப்படுவது பொருளாதாரம்.
 
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனுக்கு அவசியமா? தொழில்நுட்பங்களோடு வாழ்வதுதான் வாழ்க்கையா? நகரமயமாக்கல் மட்டுமே வளர்ச்சியா? என்ற கேள்விகள் பலருக்கும் தோன்றியிருக்கலாம். மனித வாழ்வின் அடிப்படை என்பது இயற்கை சார்ந்தது. இயற்கையை பெருக்குவதன் மூலமும், வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது பலரும் இன்று கண்கூடாக நிரூபித்திருக்கும் உண்மை.

ஐ.ஐ.டி.யில் படித்தவர்களும், பெரும் வணிக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்தவர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களும் விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலம் தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த வருமானத்தை பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் தகவல்களை நாம் நாளேடுகளில் பார்த்திருக்கிறோம்.
 
திட்டமிட்டு சரியான தொலைநோக்கு திட்டத்தோடு செயல்பட்டால், விவசாயம் சார்ந்த துறையிலும் வருமானத்தை காணமுடியும். அப்படிப்பட்ட இத்துறை சார்ந்த துறைகள் தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் ஆட்கள் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை, விவசாய நிலங்கள் குறைந்து வருவது என உணவு உற்பத்தித்துறையின் வளர்ச்சி தற்போது குறைந்து வரும் அதே நேரத்தில், கட்டுப்படியாகக்கூடிய விலையில் உணவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதன் அவசியத்தை அரசாங்கமும் மக்களும் உணர்ந்து வருகின்றனர்.
 
இதனால் தற்பொழுது நீர் மேலாண்மை, ஆட்கள் பற்றாக்குறையை களைவதற்கு இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தத்தக்க புதிய தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பக் கருவிகள், உர மேலாண்மை, மண் வள மேம்பாடு, சூழல் மேம்பாடு என விவசாயத் துறை சார்ந்த வல்லுநர்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு என்பதோடு, வளமான வாய்ப்புகள் நிறைந்த நாடு என்பதனாலும் நாம் எளிதாக வேலை வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளக் கூடியதாக இத்துறை உள்ளது. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் "நாம் உயர்வதோடு, நம் நாடும் உயரும்" என்பது விவசாயத்துறைக்கும், ராணுவத்திற்கும் மட்டுமே உரிய வேத வாக்கு. நிலைத்து நீடித்து நிற்கும் நிலையான வளமான வாழ்வை கனவு காணும் யாவரும் தேர்ந்தெடுக்கலாம், விவசாயத்துறையை.
கல்வி மலர்