ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பொழுது உபயோகமாகப் போகிறதா?


பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது. ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால் முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.
இளம் பருவத்தினர் பாடங்கள் படிப்பதை தவிர்த்து மீதமான நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதில் தெளிவில்லாமலேயே இருக்கின்றனர். பொழுதை கழிப்பதற்காக முதலாவதாக இவர்கள் தேர்ந்தெடுப்படுப்பது தொலைக்காட்சியை, அடுத்ததாக கணினி விளையாட்டுகள், திரைப்படம் என தங்களுக்கு விருப்பமானதாக தெரியும் இவற்றை பயன்படுத்துகின்றனர். நண்பர்கள் இணைந்து திரைப்படம் பார்க்கிறார்கள் என்றால் திரைப்படம் முடிந்தவுடன், நண்பர்களுக்கிடையே ஒவ்வொருவரிடமிருந்தும் "அடுத்து என்ன செய்வது?, அங்கே போவதா?, இங்கே போவதா?" என்று கேள்விகள் எதிர்படுகின்றன. எங்கு போக வேண்டும் என்று சொன்னாலும், அது முதலில் தவிர்க்கப்பட்டு பின்னர் எதாவது இரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கே திருப்தியில்லாமல் செல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது.
நேரத்தை எப்படி கழிப்பது என்று கூட தெரியாமல் அல்லது புரியாத தலைமுறைகளாக இந்தத் தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததோ அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் சூழ்நிலைகளை கட்டமைக்கப்படாதது கூட காரணமாக இருக்கலாம். நேரத்தை எப்படி கழிப்பது? என்பதை சென்னையை கடந்து வெளியூர்களில் இருக்கும் நகரத்து குழந்தைகள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் மின்சாரம் இல்லாத நேரங்கள்.
ஏனென்றால், நேரத்தை செலவழிப்பதற்கு மின்சாரத்தால் இயங்கும் சாதனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை சாதனங்கள் நேரத்தை மட்டுமல்ல அறிவு வளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மின் மற்றும் மின்னணு சாதனங்கள் மனிதர்களுக்கு இடையே இடைவெளியையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பில் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடுமாற்றங்களை சரி செய்ய வேண்டுமென்றால் மீண்டும் தடைகளை கடந்து வெளியேற வேண்டியது இருக்கிறது.
பொழுதை கழிக்கக்கூடிய நேரங்கள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறதா என்பதில் இளம் பருவத்தினர் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சில பெற்றோரும் "தங்கள் பிள்ளை தொந்தரவு செய்யாமல் இருக்கிறதே அதுவே போதும்" என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர். அவசியமில்லாததில் நேரத்தையும், மூளையையும் செலவிடும் இது போன்ற நிலையால், எதிர்கால சமூகத்தின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் எனபதனை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
நேரங்களை உபயோகமான முறையில் மேம்படுத்த நண்பர்களோடு தங்கள் முந்தைய காலத்தில் செய்த குறும்புகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை ஓவ்வொருவரும் பகிர்ந்துகொள்வதே மிகச்சிறந்த பொழுதுபோக்காகும். மனம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது உற்சாகத்தால் நிரம்பி வழிகின்றது. இரவு நேரமாக இருந்தால் வானத்தின் நிலவொளியில் உற்சாகமாக பேசலாம். மரங்கள் சூழ்ந்த பகுதியில் மோட்டார் வாகனங்களை தவிர்த்து கைவீசி பேசலாம். பறவைகளையும், கடல் அலையையும் ரசிக்கலாம். கடல் இல்லாவிட்டால் ஆற்றின் நீரோட்டத்தையும், குளத்தின் அமைதியையும் கண்டு உணரலாம். இயற்கை கணக்கில்லாத பாடங்களை நமக்கு கற்றுத்தர தயாராக இருக்கிறது. பாடங்கள் படிக்க தயாரா?
கல்வி மலர்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

வளமான வாய்ப்புகளைக் கொண்ட வேளாண் துறை



நமது எதிர்காலத்தை தேர்வு செய்யும்பொழுது, பெரும்பாலானோர் அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகளாகப் பார்த்து தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் பொருளாதார முன்னேற்றம்தான் வாழ்க்கையின் முன்னேற்றம் என்ற சூழ்நிலைக்கு இந்த உலகம் நம்மை தள்ளிவிட்டது.
பணம் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும், நல்ல வீடு, செழிப்பான வாழ்க்கை என்று  வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம் என இன்றைய இளைஞர்களும், அவர்களின் பெற்றோரும் நினைக்கின்றனர். பொருளாதார செழிப்பு தான் வாழ்க்கை என்று முடிவெடுத்தவுடன் வாழும் வாழ்க்கையின் நடைமுறைகளும் மாறிவிடுகிறது. பொருளாதாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகளை தேடி ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.
 
வாய்ப்புகளை கண்டறிய முயற்சி செய்யும்பொழுது நாம் வசிக்கும் இடம் மாறுகிறது. நாம் வாழும் முறையை மாற்ற முயற்சி செய்கிறோம். வேலைக்கு தகுந்தவாறு நாம் மாறவேண்டும், என்ற எண்ணம் உருவாவதன் விளைவாக நாம் நம் அடிப்படையை விட்டு விலக தயாராகிறோம். இந்த தயார்படுத்துதல் நம்மோடு முடிவதில்லை, நம் நண்பர்கள், நம் வாரிசுகள் என தொடர்ந்து வரும் இளம் தலைமுறையும் நாம் அமைத்த வழியில் நம்மை தொடர்ந்து வருகிறது. இப்படியாக ஒருவர் பின் ஒருவராக பொருளாதாரம் என்ற வார்த்தையின் பின்னால் பெரும் கூட்டமே சென்று கொண்டிருக்கிறது. இந்த பொருளாதாரம் அடுத்த கட்டமாக நகரமயமாக்கலுக்கு அழைத்துச் செல்கிறது.
 
"நகரமயமாக்கல் என்பது நரகமயமாக்கல்" என்று அழைக்கும் விதத்தில் நகர வாழ்க்கை அவலம் மிகுந்ததாக உள்ளது. காரணம் பொருளாதாரத்தை தேடி ஓடி வரும் பெரும் கூட்டத்தால் தான் என்பது, நாம் கண் கூடாக கண்டுகொண்டிருக்கும் உண்மை. ஒங்கி உயர்ந்த மரங்களும், சலசலப்பான நீரோடைகளும், வாய்க்காலும், பசுமை போர்த்திய வயல்வெளிகளும், ஓடியாடி விளையாடிய விளையாட்டுகளும் என இயற்கையை ரசித்து வாழ்ந்த வாழ்வை நகரமயமாக்கல் அப்படியே எதிராக மாற்றிவிட்டது.

ஆம், இன்று மரங்களே இல்லாத கடும் கோடை வெப்பம் தாக்கும் வெப்பம் மிகுந்த சாலையிலும், சாக்கடை ஓடும் ஆறுகளைக் கண்டு விலகிச் செல்லும் அவலத்தையும்,  தூசியும், புழுதியும் பறக்கும் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் காற்றோட்டமில்லாத நெருக்கடி மிகுந்த இடத்தில் தங்கி நகர வாழ்வை வாழ்ந்து வருகிறோம். இதற்கு காரணமாக சொல்லப்படுவது பொருளாதாரம்.
 
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனுக்கு அவசியமா? தொழில்நுட்பங்களோடு வாழ்வதுதான் வாழ்க்கையா? நகரமயமாக்கல் மட்டுமே வளர்ச்சியா? என்ற கேள்விகள் பலருக்கும் தோன்றியிருக்கலாம். மனித வாழ்வின் அடிப்படை என்பது இயற்கை சார்ந்தது. இயற்கையை பெருக்குவதன் மூலமும், வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது பலரும் இன்று கண்கூடாக நிரூபித்திருக்கும் உண்மை.

ஐ.ஐ.டி.யில் படித்தவர்களும், பெரும் வணிக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்தவர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களும் விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலம் தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த வருமானத்தை பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் தகவல்களை நாம் நாளேடுகளில் பார்த்திருக்கிறோம்.
 
திட்டமிட்டு சரியான தொலைநோக்கு திட்டத்தோடு செயல்பட்டால், விவசாயம் சார்ந்த துறையிலும் வருமானத்தை காணமுடியும். அப்படிப்பட்ட இத்துறை சார்ந்த துறைகள் தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் ஆட்கள் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை, விவசாய நிலங்கள் குறைந்து வருவது என உணவு உற்பத்தித்துறையின் வளர்ச்சி தற்போது குறைந்து வரும் அதே நேரத்தில், கட்டுப்படியாகக்கூடிய விலையில் உணவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதன் அவசியத்தை அரசாங்கமும் மக்களும் உணர்ந்து வருகின்றனர்.
 
இதனால் தற்பொழுது நீர் மேலாண்மை, ஆட்கள் பற்றாக்குறையை களைவதற்கு இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தத்தக்க புதிய தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பக் கருவிகள், உர மேலாண்மை, மண் வள மேம்பாடு, சூழல் மேம்பாடு என விவசாயத் துறை சார்ந்த வல்லுநர்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு என்பதோடு, வளமான வாய்ப்புகள் நிறைந்த நாடு என்பதனாலும் நாம் எளிதாக வேலை வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளக் கூடியதாக இத்துறை உள்ளது. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் "நாம் உயர்வதோடு, நம் நாடும் உயரும்" என்பது விவசாயத்துறைக்கும், ராணுவத்திற்கும் மட்டுமே உரிய வேத வாக்கு. நிலைத்து நீடித்து நிற்கும் நிலையான வளமான வாழ்வை கனவு காணும் யாவரும் தேர்ந்தெடுக்கலாம், விவசாயத்துறையை.
கல்வி மலர்

விடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி



தேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ கவலையை ஏற்படுத்திவிடுகிறது.
ஏனென்றால் பள்ளி, பாடம், பரீட்சை என்று பரபரப்பாக ஒரு இயந்திர வாழ்க்கையில் பிள்ளைகள் இருந்துவிட்டு, சுதந்திரம் கிடைத்தவுடன் தேவையில்லாத நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, செலவு வைப்பது, வீட்டில் உடன்பிறந்தோருடன் சண்டை சச்சரவில் ஈடுபடுவது, அதை செய்து கொடு, இது வேண்டும் என் பல வகை உண்வு பதார்த்த வகைகளை கேட்டு அடம் பிடிப்பது என பிள்ளைகளால் விடுமுறைக்காலங்களில் பெற்றோர் படும் பாடு நாம் அறிந்ததே.
 
பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ இசை வகுப்புகள், நாட்டிய வகுப்புகள், இதர பயிற்சி வகுப்புகள் என விடுமுறை காலத்திலும் வாட வைத்துவிடுகின்றனர். பெற்றோர்கள் பெரும்பாலானோரின் கருத்தும் "படிக்கும் வயதில் அவர்களுக்கு படிப்பது மட்டும் தானே வேலை" என்பதாகத்தான் இருக்கிறது.
 
படிப்பதுதான் வேலை என்றாலும் கற்றுக்கொள்வது என்பது நாம் இருக்கும் நகரத்தில் மட்டும் தான் என்பதாகவோ அல்லது இதனை விட பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் தெரிந்துகொள்வது என்பதாகவோ நினைப்பது தவறு. வாழ்க்கை என்பது பெரும் கட்டடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் வாழ்வது அல்ல. அதன் தொடர்புடைய தேவைகளுக்காக மட்டும் கல்வி கற்றால் போதும் என்று நினைப்பதும் தொலைநோக்கு பார்வை இல்லாததுதான்.

ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதற்கு தேவையான அனைத்து விசயங்களையும், தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் அனைத்துமே கற்கக்கூடியதுதான். அதற்கான அதிக வாய்ப்புகளை பெற்றுத்தருவது விடுமுறைக்காலங்கள் தான்.
 
இன்றைய நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமங்களைத் தெரிவதில்லை, விவசாயியை. ஆறுகளை, குளங்களை, பரபரப்பில்லாத புறநகர், கிறாமப்புற வாழ்க்கை முறைகள் தெரிவதில்லை. மற்ற மாவட்டங்களின் வசதியின்மையும், வெயிலும் வெயில் சார்ந்த வாழ்வும் புரிவதில்லை. பாரம்பரிய பழக்க வழக்கங்கள், பெரியோருடைய பரிவு ஆகியவற்றை உணர்வதுமில்லை.

நாம் நலமாக வாழ பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவர்கள் எத்தனை பேர், நமக்காக எப்படி உழைக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதுமில்லை. ஆனால் இவையெல்லாம் கிராமப்புறங்க்ளிலிருந்து வந்த பெற்றோருக்கு தெரியும். ஆனாலும் தங்கள் பிள்ளைகள் அதனை தெரிந்துகொள்ளவேண்டும், என எண்ணாமல் அந்த வாழ்க்கை கடினம் என்று தடை போடுவதில்தான் குறியாக இருக்கின்றனர்.
 
கடும் போட்டியும், பொருளாதாரச் சிக்கல்களும், சமூகப் பிரச்சனைகளும் பெருகி நவீன வாழ்க்கையை பணம் ஒன்றைச் சுற்றியே வாழ கட்டயாப்படுத்திவிட்டது. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் மனம் உற்சாகம் அடைவதற்கும், மனிதத்தன்மையோடு வாழ்வதற்கும் நாம் வந்த அடிப்படை வாழ்வு தெரிந்திருக்க வேன்டியது அவசியம்.

இளமை காலத்தின் மகிழ்ச்சியை மட்டும் கருத்தில்கொள்ளாமல், முதுமையிலும் மகிழ்ச்சியுடன் வாழ சொந்த உறவுகளையும், சொந்த ஊரையும், சிறந்த பழக்கவழக்கங்களையும் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த முயற்சி செய்வோம். மாணவர்களாகிய நீங்களும், தெரியாத இது போன்ற விசயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமுடன் தயாராகுங்கள்.
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தில் வேலையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டுமானால் நகர்ப்புறத்தை கட்டாயம் கடந்து சென்றிருக்கவேண்டும். ஏனெனில் இது வாழ்க்கைக்கான களப்பயிற்சி.
கல்வி மலர்

திங்கள், 16 டிசம்பர், 2013

சுய விவரம்: வேலை கிடைப்பதற்கான முதல் நுழைவுச்சீட்டு



வேலை என்ற சொல் அனைவரும் விரும்பும் அற்புத சொல்லாக இருக்கிறது. ஒரு நல்ல வேலையில் சேர்வதுதான் அனைவருக்குமான பெரும் லட்சியமாக இருக்கிறது. நல்ல வேலை கிடைத்தவுடன் வீடு கட்ட வேண்டும், பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும், குடும்ப பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பது அனைவருக்குமான சிந்தனையாக இருக்கிறது.
வேலை கிடைக்க வேண்டுமானால் குறிப்பிட்ட வேலைக்கு தகுந்த வகையில் கல்வி மற்றும் திறன்கள் இருக்க வேண்டியது அவசியம். இந்த தகுதி மற்றும் திறன்களை சிறப்பான முறையில் நாம் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கும் நிறுவனத்திற்கு தெரிவிப்பது நமது "ரெஸ்யூம்" எனும் சுய விவரம் தான். அப்படிப்பட்ட சுய விவரமானது சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது.
"ரெஸ்யூம்" வடிவமைப்பில் பல்வேறு வகையான வடிவங்கள் உருவாக்கம் பெற்று பயன்பாட்டிற்கு வந்தாலும், பெரும்பாலோனோர் இன்னும் பழைய வடிவமைப்புகளிலேயே தகவல்களை நிறுவனங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பழைய வடிவமைப்புகள் பல நேரம் வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலைகளை மாற்றிவிடுகிறது.
மாறிவரும் பொருளாதாரச் சூழல்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனங்களுக்கிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றது. அதே நேரம் ஒரு வேலைக்கு பலபேர் போட்டியிடும் நிலையும் அதிகரித்திருக்கிறது. இதனால் திறன்களையும், திறன்கள் குறித்து நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் விதமும் சற்று மேம்பட்டு இருப்பது அவசியமாக இருக்கிறது. பழைய "ரெஸ்யூம்" வடிவமைப்புகளை உபயோகப்படுத்துபவர்கள் பெரும்பாலும் காலங்காலமாக பயன்படுத்தும் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள் ஆகியவற்றையே பயன்படுத்துகின்றனர்.
பழைய வடிவமைப்புகள், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு விளங்கும் தங்களின் தனிப்பட்ட திறன்கள் குறித்து நிறுவனங்களுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. தங்களிடம் இருக்கும் திறன்களை எப்படி சிறப்பாக வெளிப்படுத்த முடியுமோ, அதற்கேற்றவாறு சுய விவரத்தை வடிவமைப்பதுதான் சிறப்பாக இருக்கும். "ரெஸ்யூம்" வடிவமைப்பதிலும் பலமாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. "ரெஸ்யூம்" வடிவமைப்புகள் இலவசமாகவும், சேவைக் கட்டணத்திலும் இணையதளத்தின் வழியாகப் பெறுவதற்கு பல இணையதளங்கள் துணைபுரிகின்றன.
குறிப்பாக "ரெஸ்யூம்" வடிவமைப்பில் தற்பொழுது "பவர்பாயின்ட் பிரசண்டேஷன்", "விஷுவல் பிரசண்டேஷன்" போன்றவை முக்கிய மாற்றங்களாக கருதப்படுகிறது. ரெஸ்யூமானது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொதுவான வடிவமைப்பு இல்லை. ஏனெனில் ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற வகையில் கல்வி, அனுபவம், பயிற்சி மற்றும் தேவைகள் போன்றவை மாறுபடுகிறது. எனவே ஒரு வேலைக்கான ரெஸ்யூம் வடிவமைப்பு, மற்றொரு வகையான வேலைக்கு கச்சிதமாக பொருந்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
மேலும், வேலை தேடுவோர் பலரும் செய்யும் தவறு ஒரே "ரெஸ்யூமை" அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்புவது. ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே படிப்பை படித்த, சமமான திறன் வாய்ந்த இரு நபர்கள், ஒரே மாதிரியான வேலைக்கு வேறு வேறு நிறுவனங்களுக்கு சென்றாலும் அவர்களுக்கான பொறுப்புக்களும் மற்றும் பதவியின் பெயரும் மாறுபடும். அதனை நினைவில் வைத்து நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், விண்ணப்பிக்கும் பதவிக்கான தேவைகள் ஆகியவற்றை கணக்கிட்டு அதற்ற வகையில் விண்ணப்பிப்பதுதான் புத்திசாலித்தனமான செயல்பாடு ஆகும்.
சிறந்த "ரெஸ்யூம்"ஐ வடிவமைப்பதற்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். அதற்காக செலவழிக்கும் நேரம் நிச்சயம் வீண் போகாது. "ரெஸ்யூம்"இல் சிறு தவறு இருந்தாலும் அது நம் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதற்கான முக்கிய வாய்ப்பாக நிறுவனங்களுக்கு இருக்கும். திறன் வளர்க்கும் செயல்பாடுகளோடு சுய விவரத்தை உருவாக்குவதிலும் அதிக அக்கறையை செலுத்துவதுதான் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கல்வி மலர் 

சனி, 14 டிசம்பர், 2013

வேலைகளில் உயர்ந்தது எது? தாழ்ந்தது எது?




உலகம் எத்தனையோ விதமான வேலைகளால் நிறைந்து இருக்கின்றது. வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது முன்னேற்றத்திற்காகவும், தன்னைச் சார்ந்தவர்களின் வளர்ச்சிக்காகவும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறான்.
வேலைகளை வகைப்படுத்தலாம் என்றால் அதன் என்ணிக்கை கணக்கில் அடங்காத எண்ணிக்கையாக நீள வாய்ப்பிருக்கிறது. வேலைகளின் துறைகளை வேண்டுமானால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அடக்கலாம். அது பார்க்க எளிதானதாக தெரிந்தாலும் ஒவ்வொரு துறையும் கடல் போன்று பரந்து விரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
ஒரு துறையை எடுத்துக் கொண்டோம் என்றால், அதில் ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு வகையான வேலைகள் இருக்கின்றன. இவை நிறுவனத்திற்கு நிறுவனம், இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. மேலும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அலுவலர்களுக்கு ஏற்பவும் பணியின் தன்மை மாறுகிறது.
வேலைகளின் உருவாக்கம்
உலகம் தடைபடாமல் இயங்குவதற்கு உணவுத் தொழிலும், உடை வடிவமைப்புத் தொழிலும், மருத்துவத் தொழிலும் சிறப்புற செயல்பட்டாலே போதும். ஆனால் மனிதன் தனது ஆசைகளை அதிகரிக்க அதிகரிக்க தேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்க ஆரம்பித்தது. தேவைகள் அதிகரித்ததனால் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நபர்கள் தேவைப்பட்டார்கள். இதன் மூலம் பணிகள் அதிகமாக ஆரம்பித்தது.
கால ஓட்டத்தில் வருமானம் அதிகமாகத் தரக்கூடியதும், உடைகள் நன்றாக உடுத்தி பார்க்கக்கூடியதுமான வேலைகள் மதிப்பான வேலைகளாக மக்கள் மனதில் தவறான மாய தோற்றத்தை உருவாக்கியது. இது போன்ற மாய தோற்றத்தில் சிக்கியதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு சில வேலைகளுக்கான போட்டி அதிகமானது.
ஓரே வேலைக்கு அதிகமான நபர்கள் போட்டியிட்டதை கண்ட பிறரும், அந்த வேலையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை தாங்களும் பெற வேண்டும் அல்லது தங்கள் வாரிசுகள் அந்த பணிகளை பெற வேண்டும் என்று, குறிப்பிட்ட பணி சார்ந்த ஆசையை போட்டியிட்டு வளர்த்தனர்.
பணி சார்ந்த ஆர்வம்
பணி சார்ந்த ஆர்வம் அதிகரித்ததன் காரணமாக தாழ்வான பணிகள் என தாங்களாகவே நினைத்த வேலைகளை எல்லாம் புறந்தள்ள ஆரம்பித்தனர். இதன் காரணமாக பாதிப்புள்ள பணிகளுக்கான தேவைப்பாடுகள் அதிகரித்ததே தவிர, கொடுக்கப்படும் ஊதியம் அதிகரிக்கப்படவில்லை.
மேலும் பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஒரு சில வேலைகள் கால ஓட்டத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருப்பெறவும் ஆரம்பித்தது. குறிப்பாக அரசாங்க வேலைகள். ஒரு காலத்தில் விவசாயம் சிறப்புற செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை, அப்படியே தலைகீழாக மாறி, இன்று விவசாயம் செய்பவர்களுக்கான மரியாதை மக்களால் போதிய அளவில் கொடுக்கப்படாத நிலையில் இருக்கிறது.
இதே போன்று பாதிக்கப்பட்ட வேலைகளும், புதியதாக மதிப்புப் பெற வைக்கப்பட்ட வேலைகளும் அதிகம். இந்த மாற்றங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்க்கை முறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மனித மனங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்கச் செய்துவிட்டது.
வேலைகளை நோக்கிய பயணம்
வேலைகள் குறித்த எண்ணங்கள் குழந்தைகள் மனதிலும் சிறு வயதில் இருந்தே புகுத்தப்பட்டு சுதந்திரமான சிந்தனைகளும், அறிவு சார் ஆர்வமும் கத்தரிக்கப்பட்டு மருத்துவம், பொறியியல், உயர் அரசுப் பதவிகள் என ஒரு கைதியைப் போன்று அனுமதிக்கப்பட்ட பணிகளை மட்டுமே பார்ப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரமான எண்ணங்களும், தனி மனிதனின் அர்ப்பணிப்பும் அவசியமானது என்பதனையும் மறந்து கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் புறக்கணிக்கும் வகையில் உடனடியாக அதிக வருமானம் தரக்கூடிய வேலைகளை தங்கள் குழந்தைகளும் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
கட்டாயப்படுத்துதல் எனும் தேவையில்லாத கட்டுப்பாடு தனி மனித பாதிப்பு மட்டுமல்ல சமுதாயத்தின், சமுதாயங்களால் கட்டமைக்கப்பட்ட நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
எல்லாம் சிறந்ததே
ஏனெனில் ஒரு வேலையானது தடைபட்டதன் தொடர்ச்சியாக இடைஞ்சல்கள் உண்டானால் அந்த வேலை சிறந்த வேலையே. ஒரு வேலையை நம்மால் செய்ய முடியாது என்றாலும் அந்த வேலை மதிப்பு வாய்ந்ததுதான். எனவே எந்த ஒரு வேலையும் தரம் குறைவானது, தரம் கூடியது என்பது கிடையாது. ஏனெனில் அனைத்து வேலைகளும் அவசியமானதாகவும், புறந்தள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கிறது.
அனைத்து வேலைகளும் சமமானதே. மனம் தான் பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும் மூல காரணமாக அமைகிறது. பார்க்கும் பார்வையை மாற்றினாலே, சிந்தனைகள் தெளிவடையும். உற்சாகமும், மகிழ்ச்சியும் தரக்கூடிய அவசியமான வேலைகள் அனைத்தும் சிறந்த வேலையே.
கல்வி மலர் 

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

வருங்காலம்: தயாராகுங்கள் இளைஞர்களே, இனி உங்கள் வீடும் அலுவலகமே


தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தொழில்நுட்ப உதவியுடன் வேலை பார்த்து வரும் நபர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தை தங்களுக்கு பிடித்த இடமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
தற்போது பல நிறுவனங்கள் தங்கள் அலுவலர்கள் மகிழ்ச்சிகரமாக இயங்குவதற்கு வசதியாக, அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையை மாற்றுவதற்கான திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் உருவாக்கி வருகின்றன.
ஒரு ஆய்வறிக்கையின்படி, சிறு குழந்தைகளுடன் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நேரத்தை விட பிற பெண்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதே போன்று 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் உழைப்பவர்களாக உள்ளனர். பிறர் குறைவான நேரமே வேலை பார்க்கின்றனர். 5பேரில் ஒருவர் தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை கவனிப்பவர்களாக உள்ளனர். வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது போன்று ஓவ்வோருவருக்கும் உள்ள கடமைகள் மாறுபடும்பொழுது, கிடைக்கக்கூடிய நேரமும் வித்தியாசப்படுகிறது. பணிச்சூழலைப் பொறுத்த அளவில், தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் 2025ஐ நெருங்கும்பொழுது வேலைவாய்ப்புச்சந்தையை 75 சதவிகிதம் தங்களதாக்கிக் கொள்வர்.
இத்தகைய நிலவரத்தில், நெகிழ்வான பணியிட விவகாரம் என்பது ஒரு நிறுவனத்தின் அதிமுக்கிய முடிவாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இது நிறுவனத்தின் வளர்ச்சி, வீழ்ச்சியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு காரணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும், நிர்வாக நிலை சம்பந்தபட்டதாகும்.
பணியாளர்கள் தாங்கள் விருப்பப்படும் இடத்தில் வேலை பார்க்கும்பொழுது, தங்கள் மேலதிகாரிகளின் கோபப் பார்வையிலிருந்து விலகி இருக்கலாம். ஆனால் அதே நேரம் இரவு நேரத்தில் அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் அவர்களை கவலைக்குள்ளாக்க வாய்ப்புகள் அதிகம்.
முன்னணி நிறுவனங்கள், வேலைச்சூழலை மாற்றுவதற்கான அவசியத்தை உணர்ந்தாலும், அனைத்து விதமான வேலைக்கும் இம்முறை ஒத்து வராது என்பதனை உணர்ந்திருக்கின்றனர். எனவே வேலைக்கு தகுந்தவாறு எல்லைகளை நிர்ணயிப்பது அவசியமாகிறது. ஊழியர்கள் எதிபார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் திட்டங்களை தீட்ட வேண்டியுள்ளது.
புதிய வழிமுறைகளை உருவாக்கும்பொழுது நிர்வாகிகள், புதிய நிர்வாக முறைகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி ஓவ்வோரு ஊழியரையும் தொடர்பு கொள்வது? வேலை வாங்கும் விதம், ஓவ்வொரு குழுவுக்கும் இடையே தொடர்புகளை சரியான முறையில் பராமரித்தல் போன்றவையும் இதில் அடங்கும்.
பணியாளர்களுக்கு நல்லதாக இருப்பது, நிறுவனத்திற்கும் நல்லதாகவே இருக்கும் என்ற நிலைப்பாடு நிறுவனத்திற்கிடையே உள்ளது. பணியாளர் தான் குறிப்பிட்ட சூழலில் திறம்பட இயங்க முடியும் என்று மனதளவில் எண்ணும்பொழுது வேலைத் திறன் அதிகமாகிறது, இதன் மூலம் பணிகள் விரைவாக முடிவதுடன், நிறுவனமும் லாபத்தை விரைவாக காண முடியும் என்பதே நிறுவனங்களின் கணிப்பு ஆகும்.
கல்வி மலர் 

வியாழன், 5 டிசம்பர், 2013

இளம் தலைமுறையே திறனோடு தலைமை ஏற்க வா...


அனைவருக்குமே பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும், பெரும் சாதனைகளை புரிய வேண்டும் என்பதே லட்சிய கனவாக இருக்கிறது. ஆனால் பெரும் பொறுப்புகளுக்கு வரும் பலர் அந்த பொறுப்புகளை எப்படி கையாளவேண்டும் என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
சிறந்த நேர்மையான தலைவனால், அந்த தலைவனுக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்துள்ள மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையை திறமையின்றி அடைய நினைப்பது அவனைச் சார்ந்துள்ள மக்கள் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
தலைமைப் பண்பை சிறு வயதிலிருந்தே ஊக்கம் கொடுத்து வளர்த்து வந்தால் தான் பிற்காலத்தில் பெரும் பதவிகள், பொறுப்புகளை அனைவரும் பயன்பெறும் வகையில் பயன்படுத்த முடியும். சிறந்த தலைவனாக உருவாக சில மாற்றங்கள் நமக்குள்ளாக ஏற்படுத்த வேண்டியது உள்ளது. அந்த மாற்றங்கள் தானாகவே நம்மை தலைவனாக்கும்.
திட்டமிடுங்கள்
எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு முன்னால், அந்த வேலையை எப்படி, எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என தெளிவான திட்ட அறிக்கையை தயார் செய்யுங்கள். கடைசி நேரத்தில் அவசரத்துடன் செயல்படாதீர்கள். படிக்க வேண்டும் என்றால் எந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும், எதனை கடைசி படிக்க வேண்டும் என்றும் எப்பொழுது விளையாட வேண்டும் என திட்டமிடுங்கள்.
செயல்படுங்கள்
திட்டமிடுவதற்கான அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படாமல் இருந்தால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. படிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் படிப்பதில்லை. ஆனால் அந்த நேரம் கடந்தவுடன் படித்து முடித்த திருப்தியை மட்டும் அடைந்து விடுகின்றனர். இதனால் நன்மை விளையாது. எந்த ஒரு செயலையும் அடுத்தவர் செய்ய காத்திராமல், நீங்களாகவே முதல் ஆளாக முன் நின்று செயலாற்ற தொடங்குங்கள்.
நணபர்களுக்கு மரியாதை அளியுங்கள்
நட்பு என்று வந்தவுடன் மரியாதை என்பது மறந்துபோகும். மரியாதையை மறந்தால் தான் நட்பு இனிமையாகும் என்பது நண்பர்களின் எண்ணமாக இருந்தாலும் நட்பின் பெயரால், தான் செய்யக்கூடிய வேலைகளுக்கு மாற்றாக நண்பர்களை கட்டாயப்படுத்தி ஈடுபட வைக்காதீர்கள். ஒரு முறை, இரு முறை என்றால் நட்புக்காக நண்பர்கள் உதவுவார்கள். உதவி தவறாகப் பயன்படுத்தப்படுவதை அவர்கள் உணரும்பொழுது நட்பில் விரிசல் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
தொடர்ந்து தொடர்புகொள்ளுங்கள்
மழலையர், நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை, இளநிலை, முதுநிலை என ஒவ்வொரு மாணவரும் புதிய புதிய நண்பர்களை குறிப்பிட்ட நிலைகளில் பெறுகின்றனர். குறிப்பிட்ட காலம் நட்பாக இருக்கும் பலரும், அடுத்த நட்பு வட்டம் வந்தவுடன் பழைய நட்பு வட்டத்தை மறந்து விடுகின்றனர். அனைத்து நட்பு வட்டத்திலும் உள்ள நண்பர்களையும் அவ்வவ்பொழுது தொடர்பு கொள்ளுங்கள். இதன் மூலம் பல்வேறு வகையான தகவல்களை நீங்கள் பெறலாம்.
தொடர்பில் இருங்கள்
உங்களால் உங்கள் நட்பு வட்டத்தில் சரியாக தொடர்பில் இருக்க முடியாத சூழ்நிலைகள் அமையலாம். அந்த நேரத்தில் நிச்சயம் பிற நண்பர்கள், அறிமுகமானவர்கள் உங்களை தொடர்புகொள்ள முயற்சிக்கலாம். அப்பொழுது அதனை தட்டி கழிக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் அருகில் இருக்கும் நபர்களிடம் சொல்லக்கூடிய ஒரு வணக்கம் கூட உங்களை தொடர்பில் வைத்திருக்கும் என்பதை மறவாதீர்கள்.
உங்கள் எல்லைகளை தெரிந்துகொள்ளுங்கள்
எந்த ஒரு செயலையும் செய்யும்பொழுது அதற்கான தேவைகள், சூழ்நிலைகள், விதிமுறைகள், வாய்ப்புகள் என அனைத்தையும் ஆராய்ந்து செயல்படுங்கள். சிறியவன் இவனிடம் இந்த பொறுப்பை கொடுக்கலாமா என்று வீட்டில் உள்ளவர்களோ, உறவினர்களோ அல்லது சுற்றத்தாரோ சிந்திக்கும்படியாக இல்லாமல், பொறுப்பானவன் என்ற பெயரை எடுக்க இது உதவும்.
நம்புங்கள்
உங்களோடு இருக்கும் நண்பர்களின் மேல் நம்பிக்கை வையுங்கள். பள்ளியிலோ, கல்லூரியிலோ நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை உங்களை பொறுப்பேற்று நடத்தச் சொல்லும்பொழுது, உடன் பணியாற்றும் சுமாராக செயல்படக்கூடிய ஒரு நண்பர் சிறப்பான செயல் திட்டத்தோடு வருகிறார் என்றால், "இவரால் வெற்றிகரமாக நடத்த முடியாதே" என நம்பிக்கை இழக்காதீர்கள். அவரின் கோரிக்கையை புறந்தள்ளாமல் சிறப்பாக செயல்படக்கூடிய மேலும் சிலரை உடன் இணைத்து வெற்றிகரமாக செயல்பட வையுங்கள். அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தி அவரை சிறப்பாக செயல்பட வையுங்கள்.
பாராட்டுங்கள்
ஒவ்வொருவரும் தங்கள் செயல்பாடுகளுக்கு அங்கீகாரத்தை எதிர்பார்ப்பார்கள். அங்கீகாரம் என்பது பெரிய பரிசாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் தோள் தட்டி பாராட்டும் ஒரு சில வார்த்தைகள் போதும்; அதுவே அவர்களுக்கு அங்கீகாரமாக இருக்கும். பாராட்டுவதற்கு ஒரு போதும் தயங்காதீர்கள். வெற்றிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்காக தோல்வி அடைந்தவர்களையும் பாராட்டுங்கள். மற்றவர்கள் வளர்ச்சியை பாராட்டும்பொழுது அவர்கள் மனதில் நீங்கள் வளர்கிறீர்கள்.
சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள்
மாணவப்பருவத்தில் சண்டைகளும், விளையாட்டுத்தனங்களும் அதிகமாகவே இருக்கும். இவை சில நேரங்களில் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். அந்த நேரத்தில் எல்லோரும் தப்பிப்பதற்கான முழு முயற்சிகளிலே இருப்பார்கள். நீங்கள் அப்படி இருக்காதீர்கள். அந்த நேரத்தில் தவறு உங்கள் மேல் இருந்தால் அதற்கு மன்னிப்பு கேளுங்கள், இனி இதுபோன்று நடக்காது என நீங்களாகவே முன் நின்று உறுதி மொழி அளியுங்கள். தவறு உங்கள் மேல் இல்லாவிட்டாலும், சூழ்நிலைகளை எடுத்துக்கூறி இதுபோன்று நடக்காமல் இருக்க நண்பர்களிடம் வலியுறுத்துவதாக கூறுங்கள். உங்களின் செயல்பாடு நிச்சயம் தண்டனையின் அல்லது பாதிப்பின் வீரியத்தை குறைக்கும்.
சமமாக நடத்துங்கள்
உங்கள் நண்பர்கள் வட்டத்தில் அனைத்துவிதமான நண்பர்களும் இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டாலும் அனைத்துவிதமான நண்பர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரம் நண்பர்களில் பாகுபாடு பார்ப்பதை முற்றிலும் கைவிட வேண்டும். ஏனெனில் நண்பர்களில் திறமையானவர்கள், திறமையில்லாதவர்கள், பொருளாதாரம் அதிகமாக உள்ளவர்கள், குறைவாக உள்ளவர்கள் என பல்வேறு வகையான நண்பர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு முன்னுரிமை, மற்றொருவருக்கு மரியாதைக் குறைவு என பிரித்து பார்ப்பது பகைமையையும், மன வருத்தத்தையும் உருவாக்கலாம். எனவே அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மனதில் நிறுத்தி செயல்படுங்கள்.
நேர்மறையாக எண்ணுங்கள்
எந்த நல்ல செயலையும் செயல்படுத்த முடியாது என்று தன்னம்பிக்கை இல்லாமலோ அல்லது நாம் அதற்கு தகுதியானவன்தானா என்று தாழ்வு மனப்பான்மையுடனோ எண்ண வேண்டாம். எதனையும் வெற்றிகரமாக தன்னால் செய்ய முடியும் என்று நேர்மறையாக எண்ணுங்கள். மேலோட்டமாக இதனை எண்ணாமல் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து; இதனை இவ்வாறு செயல்படுத்த வேண்டும் என திட்டத்துடன், எந்த செயலில் இறங்கினாலும் வெற்றி நிச்சயம். ஆராயாமல் இது நமக்கு சரிவராது என சிந்தித்தால் அது வளர்ச்சிக்கான தடையாக அமையும்.
நிதானமாக இருங்கள்
உற்சாகம் எப்பொழுதும் அவசியம் என்றாலும், சிறப்பான முடிவுகளை தராது என தெளிவாக ஆராய்ந்து அறிந்த ஒரு செயலை செய்யத் துணிந்து பயன் தராமல் போவது, உங்கள் மேல் அவநம்பிக்கையை பிறருக்கு ஏற்படுத்தலாம். உங்கள் வெற்றிகளும், திறன்களும் எப்பொழுதும் மனதைக் கடந்து மூளைக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நோக்கி மற்றவர்களிடமிருந்து வரும் பாராட்டுக்களும், நம்பிக்கைகளும் அதிகமாகும்பொழுது; உங்களுக்குள்ளாக நிதானம் அதிகமாக வேண்டும்.
எடுத்துக்காட்டாக விளங்குங்கள்
உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், உங்களால் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு செயல்களும் உங்கள் குணத்தை, நல்ல எண்ணத்தை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். வன்முறைகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்துபவராகவும், துன்பங்களுக்கிடையே உதவுபவராகவும், கவலைகளுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துபவராகவும் இருங்கள்.
ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. அந்த வாய்ப்பினை சோம்பல் தவிர்த்து, அன்புடன் அன்றாட பணிகளை சிறப்பாக முடித்தலும், பொறுப்புகளை தேடிப் பெற்று வெற்றி காண்பதும், நாளைய தலைமுறைக்கு உங்களை நிச்சயம் தலைவனாக்கும். தலைவன் என்ற பொறுப்பு கிடைக்காவிட்டாலும், தலைமைப் பண்போடு பணிகளை செய்வதே சமுதாயத்திற்கு செய்யும் அரும்பணியாகும்.

கல்வி மலர் 

திங்கள், 2 டிசம்பர், 2013

கற்பது எளிது


மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகளை நாம் சந்திக்கிறோம்.
காலையில் எழும்பியதிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை நாம் சந்திக்கும் மனிதர்கள், படிக்கும் புத்தகங்கள், பிறர் மூலம் பெறும் தகவல்கள், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்கள் வழியாக அறிந்து கொள்ளும் தகவல்கள் என நமக்கு சம்பந்தமான, சம்பந்தமில்லாத, தேவையான, தேவையில்லாத தகவல்கள் பலவற்றை அறிகிறோம். வரக்கூடிய நாட்களிலும் அது போன்ற நிகழ்வுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பிறர் வாழ்வில் கண்ட சம்பவங்கள் நாளை நமக்கும் நேரிடலாம்.
நமக்கு கற்றுக்கொள்ள கிடைக்கும் இந்த சந்தர்ப்பங்களை, நாம் உபயோகமாக பயன்படுத்தினால் தான் நமது அறிவை வளர்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஏடறிவு மட்டும் அல்லாமல் அனுபவ அறிவும் அவசியம் தேவை என்பதாலேயே செய்முறை வகுப்புகள் நமக்கு கற்றுத்தரப்படுகிறது. செய்முறை வகுப்புகள் மூலமாகவே ஒரு மாணவன் எளிதாக புரிந்துகொள்கிறான் என்பது கல்வியலாளர்களின் வாதம். அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு "ப்ளே ஸ்கூல்ஸ்" என்று சொல்லப்படுகின்ற விளையாட்டின் வழியாக கற்றுத்தரக்கூடிய பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றன.
பாடப்புத்தகங்களை குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்கேற்ற சூழ்நிலையை இருப்பிடத்தில் அமைத்துக்கொடுக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை சத்தமாக படிக்கும், ஒரு சிலர் அமைதியாக உட்கார்ந்து படிப்பர். சத்தமாக படிக்கும் குழந்தைகளை அமைதியாக படிக்குமாறு அறிவுறுத்தக்கூடாது. படிக்கும்போது மனப்பாடம் செய்து மட்டும் படிக்காமல் பாடத்தினை புரிந்து படிக்கவேண்டும். வார்த்தைகளை விட கருத்தே முக்கியம் என்பதை உணர வேண்டும்.
எடுத்துக்காட்டாக அறிவியல் பாடத்தை படிக்கும் பொழுது வேதிவினை எவ்வாறு நடைபெறுகிறது என்று புரிந்துகொண்டாலே போதும். வேதியல் தனிமங்களின் பெயர்களை மட்டும் நன்கு நினைவில் கொண்டு புரிந்து கொள்ளலாம். சமூக அறிவியல் பாடங்களை படிக்கும் பொழுது வரலாற்று சம்பவங்களை தெளிவுபட கேட்டறிந்தாலே போதும். ஆண்டுகளை மட்டும் சரியாக நினைவில் நிறுத்தி எளிதாக படிக்கலாம்.
கணிதப் பாடங்களை கூட எளிதாக சம்பவங்களை கொண்டு புரிய வைக்கும் ஆசிரியர்கள் நம்மிடையே உண்டு. பாடங்களை நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய சம்பவங்களை தொடர்புபடுத்தி கற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அதுபோன்று ஆசிரியர்களும் புத்தகங்களை கடந்து கற்றுக்கொடுக்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களை பாடப் புத்தகங்களில் உள்ளவாறு மட்டும் கற்காமல், நமக்கு ஏற்ற வகையில் நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியுமோ அதற்கு தகுந்தவாறு நினைவில் நிறுத்தினாலே போதும். கற்பது எளிதாக மாறும்.
கல்வி மலர் 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உங்கள் மனதை தயார்படுத்துங்கள்


ஓவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மாணவர்கள் 1,500க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். படித்த பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு வேலை பார்ப்போர் இருந்தாலும், அதிர்ச்சி தரும் வகையான எண்ணிக்கையில் தாங்கள் படித்திருக்கும் பாடம் தவிர்த்து பிற வேலைகள், தொழில்கள் என வேறு துறைகளில் ஈடுபடுவோர் பலரும் இருக்கின்றனர்.
இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், தெளிவில்லாமல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்ததும், தேர்ந்தெடுத்த துறையில் முழு ஈடுபாட்டுடன் தங்கள் அறிவை தன்னம்பிக்கையோடு வளர்த்துக்கொள்ளாததும் முக்கிய காரணமாகும். தன்னம்பிக்கையோடு தங்கள் அறிவை வளர்ப்பது என்றால் எப்படி? நாம் எடுத்திருக்கும் துறையில் எவ்வித தயக்கமும் இல்லாமல், நம்மால் சாதிக்க முடியும் என்று மன ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
ஏனென்றால் இன்றைக்கு ஒரு வேலைக்கு ஆட்தேர்வு விளம்பரம் கொடுக்கப்பட்டால், வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. விண்ணப்பங்களை தரம் பிரித்து சிறந்த முறையில் நேர்முகத்தேர்வு நடத்தினாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர் நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில்லை. அதற்கு காரணம் "இது தனக்கு சரியான வேலை இல்லை, திறமைக்கேற்ற ஊதியம் இல்லை, தனது திறமைக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை" என்பது போன்ற எண்ணங்களை தங்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டதே காரணமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் திறமையான ஆட்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நிறுவனங்களுக்கு இருப்பதால், நேர்முகத்தேர்வின் ஒரு பகுதியாக தற்போது "சைக்கோமெட்ரிக் டெஸ்ட்" எனப்படும் உளவியல் திறன் ஆய்வையும் மேற்கொண்டு வருகின்றனர். உளவியல் தேர்வானது, நேர்முகத்தேர்வுடன் நடத்தப்படுவதால் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் நபர் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு வேலைக்கு தயாராக வந்திருக்கிறாரா? வேலை பெற்றபின் நிறுவனத்தின் வெற்றி இலக்குகளை அடைவதற்கு உறுதுணையாக இருப்பாரா? என்று கண்டறிந்துகொள்கின்றனர்.
இது போன்ற புதிய, புதிய நேர்முகத்தேர்வு முறைகளுக்கு ஏற்றவாறு, நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஓரு போர் வீரன், போரின் பல்வேறு கட்ட தாக்குதல்களுக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திச் சென்றிருந்தால்தான் களத்தில் பயமின்றி வெற்றிக்கனியை பெற முடியும். அது போன்று நேர்முகத்தேர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு எல்கைக்குள் தங்களை தயார்படுத்தாமல், கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என நடைமுறை பிரச்சனைகளை ஆராய்ந்து தங்களை தயார் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
எனவே, இத்தகைய போட்டி மிகுந்த வேலை வாய்ப்பு எனும் சந்தையில், ஆயிரக்கணக்காண வேலை தேடுகிறவர்களுடன் நாமும் கடை விரித்திருக்கின்றோம் என்பதை உணர வேண்டும். நாம் விலை போகவேண்டும் எனில், நம்மிடம் உளவியல் தயாரிப்பு எனும் ஒளிவட்டமும் அவசியம் என்பதை உணர்ந்து, படிக்கும் காலத்திலேயே மன ரீதியான முன் தயாரிப்பை வளர்த்துக்கொள்ள உங்களை தயார்படுத்துங்கள்.
கல்வி மலர் 

வியாழன், 28 நவம்பர், 2013

வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்...


பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப் பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது.
வேலைச் சோர்வும், பயணக் களைப்பும் ஒன்று சேர்ந்துவிடுவதால், வீட்டிற்கு வந்தவுடன் உணவருந்தி தூங்குவதையே உடல் விரும்புகிறது. உணவிற்கும், தூக்கத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே குழந்தைகளை கவனிக்க முடிகிற்து.
காலை நேர பரபரப்பு அலுவலகத்திற்கும், பள்ளிக்கூடத்திற்கு கிளம்புவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. இரவு நேரம் ஒரு சில வார்த்தைகளோடு முடிந்துவிடுகிறது. பல பெற்றோர்  தங்கள் குழந்தைகள் தாமாகவே படிக்கும் அறிவு பெற்றவர் என்று எண்ணிவிடுகிறார்கள். ஒரு சிலர் தங்கள் பிள்ளைகள் பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக  பாடம் படித்துவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்துவிடுகின்றனர். பெற்றோர்கள் பலரது நிலையும் என்னவென்றால் பிள்ளைகளுக்கு படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே பிரச்சனைகள் இருக்கும், அந்த பிரச்சனைகளை பள்ளிக்கூடங்களும், பயிற்சி நிலையங்களும் தீர்த்து விடும் என்று நினைப்பதுதான்.
தொலைக்காட்சி பார்ப்பதன் மூலமும், தவறான நண்பர்கள் நட்பின் மூலமும் வீணாக பொழுதை கழிக்கும் மாணவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்றால், பெற்றோர் தங்கள் செலவுக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதும் வேறு எதை பற்றியும் கேள்வி கேட்கக்கூடாது என்றே நினைக்கின்றனர். தொழில்நுட்ப அறிவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கமும், பிள்ளைகளின் மனதில் தங்கள் பெற்றோருக்கு தற்போதைய சூழ்நிலைகள் பற்றிய புரிந்துணர்வு இருப்பதில்லை, அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை, அந்த காலத்திலேயே இருக்கிறார்கள் என்ற  மனநிலையை ஏற்படுத்தி கோபத்தை உருவாக்கி விடுகிறது.
 
இதற்கான தீர்வு என்ன? நேரமில்லை என்பதைவிட அரை மணிநேரம் கிடைத்தால் கூட குழந்தைகளோடு அவர்கள் படிப்பினை கடந்து, அவர்கள் நட்பு வட்டம், விருப்பம், இலட்சியம், திட்டம், பள்ளிக்கூடத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள், பயிற்சி நிலையங்கள் குறித்த குறைகள், பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிள்ளைகளின் வளர்ச்சிகள் குறித்த தங்களின் பெருமை, சந்தோசம் போன்றவறை நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டாலே போதும். அந்த அரை மணி நேரம் பிள்ளைக்ளின் 24 மணி நேர உற்சாகத்திற்கு நிச்சயமாக உரமாக அமையக்கூடும்.

பெற்றோர் இரு பக்கங்களிலும் உள்ள குறைகள், நிறைகளை ஆராய்ந்து தீர்வை கண்டுகொள்வதில் ஆர்வம் செலுத்தினால்தான் இன்றைய இளைய சமுதாயம் எதிர்காலத்தில் பன்முக வளர்ச்சி கொண்ட கட்டமைப்பான குடும்ப அமைப்பில் சிறந்து விளங்கும்.
கல்வி மலர் 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?


வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும் மாணவப்பருவத்திலேதான்.
பகைமையை எளிதாக மறப்பதும், பாசத்தை உருவாக்குவதுமான சூழ்நிலைகள் அதிகமாக ஏற்படுவதும் மாணவப்பருவத்திலேதான். தன்னுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதாகக் கருதும் இரண்டு கட்டங்களான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றை காண்பதும் மாணவப் பருவத்திலேதான். இப்படிப்பட்ட அருமையான மாணவப்பருவத்தை எந்த அளவுக்கு நாம் ரசித்து வாழ வேண்டும். ஆனால் ரசிக்கும்படியாகவா இருக்கிறது பள்ளிப்பருவம்?
தமிழ்ப் பள்ளிக்கூடங்களை விட, ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களுக்கு அதிகம் மன நெருக்கடிகள் ஏற்படுகிறது. ஏனெனில் தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களைவிட ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் தவிர்த்து, கூடுதலான பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது. அது போக பெற்றோரும் போதாக்குறைக்கு பள்ளி விட்டு வந்தவுடன், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர். பிள்ளைகளும், பெற்றோரும் சந்திக்கும் வேளைகள் குறைந்து விடுகின்றது.
சனி, ஞாயிறுகளிலும் செல்லக்கூடிய சிறப்பு வகுப்புகள் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து மட்டுமல்லாது, உறவினர்களிடம் இருந்தும் தள்ளி வைத்து விடுகின்றது. அது தவிர்த்து முக்கியமான விசேஷ நாட்களில் விடுமுறை எடுப்பதற்கும் பள்ளி நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.
சில பண்டிகைகளின் போது அந்த குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கிறார்கள். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும், கல்வி நிலையத்தை நடத்தும் கல்விமான்களும் கல்வியை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த நடைமுறைகளே சாட்சி. பண்டிகைகள் என்பதே கொண்டாடும் சமூகத்தவர் பிற சமூகத்தினருடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், சமத்துவத்தை பேணுவதற்கும் உதவுவதுமாகும். அப்படிப்பட்ட நாட்களில் மாணவப் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகளின் மன நிலையை எண்ணிப் பாருங்கள்.
பல திறமைகளை வெளிப்படுத்தும் வயதில், சிறிது கூட ஒய்வின்றி ஒரே பாடங்களை மட்டும் கற்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வீட்டில் யாரேனும் கடைக்கு போகச்சொன்னாலும், அவன் பிளஸ் 2 படிக்கிறான் அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என பதில் கிடைக்கும். உறவினர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால்தானே அவர்களுக்கும் யார் உறவினர்கள் என்று தெரியும்.
பள்ளிக்கூடங்களும், பயிற்சி வகுப்புகளும் மட்டுமே பாடம் படிக்கும் இடங்கள் அல்ல. இது போன்ற உறவினர் வீடுகளும், மகிழ்ச்சியும் துக்கமுமான சம்பவங்கள் கூட வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தரும் சிறப்புவாய்ந்த இடங்கள் அல்லவா. யார் உறவினர்கள் என்றே தெரியாமல் இந்தத் தலைமுறை வளர்வதற்கு பயிற்சி வகுப்புகளும், அதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் பள்ளிக்கூடங்களும் மட்டுமே காரணம்.
படிக்கும் நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைகள் கிடைப்பதில்லை என்றால் படிப்பு முடிந்தவுடன் வரக்கூடிய ஏப்ரல், மே விடுமுறைகளிலும் கூட மாணவர்களின் மகிழ்ச்சி பறிபோகிறது என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். விடுமுறைக் காலங்கள் ஓய்வு காலம் மட்டுமல்ல, பல நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு, உறவினர் வீடுகளுக்கு சென்று உறவைப் புதுப்பித்தல், புதிய ஊர்களுக்கு சுற்றுலா சென்று அந்த ஊர்களையும், மனிதர்களையும் கண்டுகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் வெகுமதியான காலங்கள் அவை. அப்படிப்பட்ட நாட்களின் சுவையை அறிய முடியாத வகையில் பள்ளிக்கூடங்கள் மாணவர்களை கட்டிப்போட்டுவிடுகின்றன.
ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், பதினொன்றாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், இன்று ஐ.ஏ.எஸ்.க்கு தயாராகுபவர்களை விடவும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களின் பணியை விட கடுமையான ஒன்றாக பார்க்கும் மனோநிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
இப்படி மாணவர்களின் மனதை வளப்படுத்த வேண்டிய பள்ளிகள், நஞ்சை விளைவிக்கும் வகையில் செயல்படுவது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதா? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும், நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறார்களா? அல்லது சமுதாய அக்கறை உள்ள நல்ல குடிமகனாக, இயற்கையை, மனிதனை, மொழியை நேசிப்பவானாகவும், அன்பும் பண்பும் மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்குபவனாகவும் வளர வேண்டும் என விரும்புகிறார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பள்ளிக்கூடங்களும், தங்கள் மாணவர்கள் வருமானம் ஈட்டக்கூடிய இயந்திரங்களாக உருவாக வேண்டுமா? தலைமுறைகளை கடந்தும் பயன்படக்கூடிய நற்குணங்களை உடைய மண்ணின் மைந்தர்களாக, பண்பாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமிது.
கல்வி மலர் 

சுயமாக தொழில் தொடங்குங்கள் பட்டதாரிகளே...


தமிழகக் கல்விக்கூடங்களிலிருந்து ஆண்டுதோறும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். இன்றைக்கு இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையில், பெரும்பான்மையானவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடிவதில்லை, அதே போன்று பலருக்கும் வேலையும் கிடைப்பதில்லை, என்பதே உண்மை.
அப்படிப்பட்ட நிலையில் சுயமாக தொழில் தொடங்க சரியான ஆலோசனையும், வழிகாட்டுதலும் இன்றி பலரும் தவிக்கின்றனர். அவர்கள் சுருக்கமாக தெரிந்துகொள்ளும் வகையில் சில கருத்துக்களை காணலாம்.
 
துறை
 
நமக்கு பிடித்தத் துறை எதுவோ அந்தத் துறை நமக்கு எளிதானதாக இருக்கும். அனுபவம் இருப்பது அவசியம் என்றாலும், சரியான திட்டமிடுதல்களோடு, துறை சார்ந்த நிபுணர்களின் அனுபவ அறிவைக்கொண்டு செயல் திட்டங்களை வகுத்தால் அனுபவம் இல்லையென்றாலும் சாதிக்க முடியும். பொருள் உற்பத்தித்துறையோ, மனித வளத்துறையோ எதுவாக இருந்தாலும் தற்போதைய தேவைப்பாடு, கடந்த கால வளர்ச்சி, எதிர்கால வளர்ச்சி, அந்தத்துறை குறித்த அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
 
அவை நமக்கு முழு திருப்தி அளித்தவுடன் மட்டுமே களத்தில் இறங்க வேண்டும். எங்கே இருந்து ஆரம்பிப்பது, எப்படி நம்மை வெளிப்படுத்துவது என்பதில் தெளிவான பார்வை இருப்பது அவசியம்.
 
அளவு

தொழில் நிறுவனங்களை ஆரம்ப கட்டத்தில் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என்பன ஆகும். நம்மிடம் இருக்கும் முதலீட்டைப் பொறுத்து நாம் ஆரம்பிக்கும் நிறுவனத்தின் அளவும் மாறுபடும். பெரிய அனுபவமின்றி ஒரு தொழிலை அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பிக்கும்பொழுது பொருளாதார வசதி அதிகம் இருந்தாலும், சிறு நிறுவனமாக ஆரம்பிப்பது நல்லது. ஏனென்றால், அறிக்கைகளை விட நடை முறை வேலை சற்று கடினமாக இருக்கலாம். மன ரீதியில் நாம் அதற்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம்? என்பதைப் பொறுத்து தான் நமது உற்சாகம் இருக்கும்.
 
பெரிய நிறுவனமாக ஆரம்பிக்கும்பொழுது, வேலைப்பளு, கண்காணிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் போன்றவற்றை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோமா? என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்துக்கொள்வது நல்லது.
 
சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கும்பொழுது நிறுவனம் முழுவதும் நமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். சந்திக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் நிர்வாக அமைப்பை மாற்றுவது எளிதானதாக இருக்கும்.  பொருளாதாரத் தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஒரு வேளை நிறுவனம் வெற்றிகரமாக இயங்காமல் போனாலும், இழப்பு குறைவானதாக இருக்கும். 
 
இயக்கம்
 
பெரிய நிறுவனங்களில் பல தடைகள் இருக்கும். குறிப்பிட்ட எல்லையைக் கடந்து செயல்பட முடியாது. நாம் அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான நேரம் கிடைக்காது. ஆனால் சிறு நிறுவனங்களில் அந்தத் தடைகள் இருக்காது. எந்த எல்லை வரை சென்றும், எல்லா விதமான வேலைகளையும் செய்யலாம். அதில் நமக்கு ஆர்வம் இருக்கிறதா? என்பதுதான் முக்கியம்.
 
அவ்வவ்பொழுது தொழில் ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே தொழில் செய்தவர்கள், அனுபவ சாலிகள் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது தொழில் நிறுவனத்தின் இயக்கம் தடைபடாமல் இருக்க உதவும். நாம் மட்டும் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் சரியானதாக இருக்காது. வேறு கோணங்களில் சிந்தித்து திட்டங்களை தீட்டுவதற்கு, சரியான நபர்களின் ஆலோசனைகள் மட்டுமே உதவியாக இருக்கும். அதுவும் குறிப்பாக தொழிலே தெரியாதவர்களிடமெல்லம் ஆலோசனைகள் கேட்பது, முடிவெடுக்க முடியாத சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்.
 
கட்டமைப்பு
 
நிறுவனங்களைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பது இன்றைக்கு எளிதானதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழைய காலங்களைப் போன்று பல்வேறு கட்ட நிலைகளைக் கடந்து முடிவெடுக்கப்படும் நிலை பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் ஆன் லைன் முறையிலேயே கோரிக்கைகள், செயல் திட்டங்கள், அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே உள்ள நிறுவனங்களை ஆராய்ந்து, அவை எந்த மாதிரியான நிறுவனம், எப்படி செயல்படுகிறது, நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டிகள், அதற்காக அந்த நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள், என பல கோணங்களில் சிந்தித்து, அதற்கேற்ற வகையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 
 
குறிப்பிட்ட ஒரு வேலைக்கு, ஒரு தனி நபரை மட்டும் சார்ந்திருக்காதவாறு நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் திடீரென்று ஒரு நபர் வேலையை விட்டு நின்றாலும், நிறுவன வேலைகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும்.
 
கலாச்சாரம்
 
நிறுவனத்தின் கலாச்சாரம் எப்படி இருக்கிறதோ, அதற்கேற்றவாறு வேலை புரிவோரின் மனநிலையும் இருக்கும். எந்த மாதிரியான நிறுவனமாக இருந்தாலும், அந்தந்த நிறுவனத்திற்கு ஏற்றவாறு வேலையும் இருக்கும். நமது நிறுவனம் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடிய நிறுவனமா? அல்லது விரைவாக வேலைகளை முடிக்கும் வகையைச் சேர்ந்த நிறுவனமா? என்பதைப் பொறுத்து அலுவலக நடைமுறைகளை அமைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். அதுபோன்று உடலுழைப்பை கொடுத்து உழைக்கும் நிறுவனத்திற்கும், சிந்தனைத்திறனை மட்டும் கொடுத்து வேலை செய்யும் நிறுவனத்திற்கும் ஏற்ப ஊழியர்களின் மன நிலையும் அமையும்.
 
            தொழில் ஆரம்பிக்கும் புதிதில் கடின உழைப்பு தேவைப்படும். அந்த நேரத்தில் சுதந்திரமான அணுகுமுறை பொருளாதார ரீதியாக பாதிப்பை உண்டாக்கலாம். எனவே ஆரம்பத்தில் உழைக்கும் ஊழியர்களிடம், எதிர்காலத்தில் நிறுவனம் வளர்ச்சியை காணும்பொழுது,  குறிப்பிட்ட சலுகைகள், அலுவலக கலாச்சாரம் ஆகியவை மாற்றி அமைக்கப்படும் என உறுதிமொழி கூறலாம்.
 
பாதுகாப்பு
 
தொழிலில் பாதுகாப்பு என்பது நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமல்ல நிறுவனத்தையே பாதுகாப்பதாகும். நிறுவனம் என்பது அலுவலகச் சொத்துக்கள், வேலை பார்ப்போர், பொருளாதாரம், திட்டங்கள், தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், என நிறுவனம் சார்ந்த அனைத்தையும் பாதுகாத்து வழி நடத்த வேண்டும். ஏதேனும் ஒன்றை இழந்தாலும் அது தொழிலின் வளர்ச்சி தடைபட வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு பிரிவையும், ஒரு துறையாக நினைத்து செயல்பட வேண்டியது அவசியம்.
 
நிறுவனம் சற்று தளர்ச்சியையோ, வளர்ச்சி குறைவையோ சந்திக்கும்பொழுது வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்சனைகள் எழலாம். எனவே அதற்கேற்றவாறு பண இருப்பு அவசியம். தொழில் ஆரம்பிக்கும்பொழுதே  ஒரு குறிப்பிட்டத் தொகையை தனியாக வங்கியில் இருப்பு வைப்பது, தொடர்ச்சியான தொய்வில்லா நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும்.
 
எதிர்காலம்
 
வளர்ச்சி அடையும் நிறுவனத்திற்கு, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை இருப்பது அவசியம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி சக பணியாளர்களிடம் விவாதித்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். சிறிய நிறுவனம் தானே, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என் தள்ளிப்போடுவது வளர்ச்சிக்கு பாதகமாக அமையும். மாதத்திற்கு ஒருமுறையேனும் பணியாளர்களின் கருத்துக்களை வெளிப்படையாக அறிவது நல்லது. வளர்ச்சியினால் வரும் பொருளாதாரம் அனைத்தையும், செலவுக்கு மட்டுமே பயன்படுத்துவதும் கூடாது. எதிர்கால செயல்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வரவேண்டும். அப்படி செய்தால்தான் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான பணத்தேவையை எளிதாக சந்திக்க முடியும்.
 
உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும், நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து சரியான திட்டமிடுதல்களோடு செயல்பட்டால் வெற்றியும், வளர்ச்சியும் நமதாகும்.

கல்வி மலர் 

செவ்வாய், 19 நவம்பர், 2013

தலைமைப் பண்பு


தலைமைப் பண்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. பலரும் நினைப்பது போன்று அது பெரும் நிர்வாகிக்கும், தலைவருக்கும் உரியது மட்டுமல்ல. ஏனெனில் தலைமைப் பண்பை முடிவெடுப்பது, செயல்படுத்துவது என்ற கோணத்தில் பார்க்கலாம்.
ஒரு குழந்தை வளர்கிறது, படிக்கும்பொழுது இந்தப்படிப்பு தனக்கு சரி வரும் என்று படிப்பை தேர்ந்தெடுக்கிறது, பள்ளிப் படிப்பிற்கு பின் எதிர்காலம் குறிப்பிட்ட துறையில் தான் இருக்க வேண்டும் என தனக்கான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கிறான், தனக்கான வேலையை கண்டுபிடிக்கின்றான், துணையை தேர்ந்தெடுத்தவுடன், இந்த உலகம் அவனுக்கு குடும்பத்தலைவன்/ தலைவி என்ற பட்டத்தை வழங்குகிறது, தனது குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் பொறுப்புள்ளவனாகிறான். சமூகத்திற்கு தேவையானவற்றை பிறரோடு இணைந்து கேட்டுப்பெறும் அக்கறையுள்ளவனாகிறான்.
இப்படி பல பொறுப்புகளை ஒவ்வொரு மனிதனும் கடந்து வரும்பொழுது, நமக்கு, நம்மோடு உள்ளவர்களுக்கு நல்வழி காட்டும் பொறுப்பும், பின்னால் வருகிறவர்களுக்கு சரியான வழியை காட்டும் வழிகாட்டியாகவும் இருக்ககூடிய நம் அனைவருக்கும் தலைமைப்பண்பு அவசியமானதாகிறது. அப்படிப்பட்ட தலைமைப் பண்பை வளர்ப்பதற்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
தலைமைப் பண்பு என்றவுடன், அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதே நேரம் தலைமைப் பண்புகள் சிறந்து விளங்கும் நபர் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வை அடைகிறார். தலைமைப் பண்பை வளைர்க்காமல் தலைமைப் பொறுப்பை அடைந்த ஒரு சிலரும் அந்தத் திறனை  மெருகேற்றாததன் விளைவாக நிர்வாகத்தில் தோல்வியை சந்திக்கின்றனர். அப்படிப்பட்ட அவசியமான தலைமைப் பண்பிற்கு தேவையான தகுதிகள் என்ன?
 
தொடர்ந்து செயல்படுங்கள்

இந்த உலகத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருத்தல் அவசியமாக இருக்கிறது. புதுப்புது தொழில்நுட்பங்களும், தொழில்முறைகளும், துறை சார்ந்த உட்பிரிவுகளும் தொடர்ந்து அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. நாம் அவை பற்றி அக்கறை கொள்ளாமல் இருந்தால், நாம் பின் தங்கியவர்களாகி விடுவோம்.

எனவே ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுதல் என்பது அவசியமானதாகி விடுகிறது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தன்னுடன் இணைந்து பணியாற்றும் சக ஊழியர்கள் சோர்வின்றியும், கால விரயமின்றியும் வேலைத்திட்டங்களை விரைவாகவும், பிழைகளின்றியும் முடிப்பதற்கு அவ்வவ்பொழுது வரக்கூடிய எளிதான முறைகளை அறிந்து, அதனை பிற ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வேலைகளை முடிக்கவேண்டும்.
சக ஊழியர்கள், தொடர்ச்சியான செயல்பாட்டினால் சலிப்படைவது வெற்றிக்கான பயணம் மெதுவாக செல்வதற்கு வழி வகுக்கும். எனவே அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அலுவலக நடைமுறைகள் எளிதானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுமென்றால் நாம் அவற்றை அறிந்திருக்க வேண்டும்.
ஆகையால் நாம் உயர் பதவியில் இருக்கிறோம் என்பதற்காக முடிவுகள் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் செயல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு நம்மிடம் தகவல்கள் இருக்கிறதோ, அதற்கேற்ற வகையில்தான் நமது செயல்படுதலின் வேகமும் இருக்கும். எனவே தலைமைப் பொறுப்பை விரும்புபவர்கள் பலதரப்பட்ட செய்திகளையும் அறிந்து, அதில் தெளிந்து புதிய அறிமுகங்களை தொடர்ந்து செயல்படுத்துவது தலைமைப் பண்பின் அடையாளம்.
 
கண்டுபிடியுங்கள்

            
ஒவ்வொருவரிடமும் தனித்திறமை இருக்கும். ஒரு நபர் செய்யும் வேலைக்கும், அவரிடம் உள்ள திறமைக்கும் சம்பந்தமிருக்காது. குறிப்பிட்ட நபரிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதனை தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என  ஆராய வேண்டும். நிறுவனத்தின் தனிப்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது முக்கியமான நெருக்கடி காலகட்டங்களிலோ அவர்களின் தேவைகள் பயன்படும். அதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் தேவைகள் என்ன? அவை வெளியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டுமா? அல்லது நம்மிடமே இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். தான் மட்டுமே சிந்திக்காமல், நிறுவனத்தின் பல மட்ட தொழிலாளர்களின் சிந்தனைத்திறனையும் அக்கறையோடு கண்டுகொள்ள முயற்சிக்க வேண்டும்.
புதிய வேகத்தில் செல்ல சரியான இலக்குகளை கண்டுகொள்ள வேண்டும். பொருள் உற்பத்தித்துறையாக இருந்தால், பொருளின் வடிவமைப்பு, உபயோகத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என ஆராயலாம். நிர்வாகத்துறையாக இருந்தால் எந்த வேலைக்கு எந்த நபரை தேர்ந்தெடுக்கலாம் என தீர்மானிக்கலாம்.
  
வெற்றி


ஒரு பெரிய பொறுப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகத்தானே தவிர, தோல்வி அடையச் செய்து நிலைகுலைய செய்வதற்காக அல்ல. பெரும் மனித வளமும், பொருளாதார காரணிகளும் நம்மை, நம் முடிவுகளை வைத்தே இயங்குகிறது என்பதை, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளின் போதும் உணர்ந்திருக்க வேண்டும். தோல்வியை எவரும் விரும்புவதுமில்லை, அதுவும் தனி மனித தோல்வியை விட நிர்வாகத்தின் தோல்வி என்பது, வேலை பார்க்கும் நபர்கள், நிறுவனத்தின் கட்டமைப்பு, பொருளாதார நிலை, எதிர்கால இலக்குகள் என முழு நிறுவனத்தையும் காயப்படுத்திவிடும்.
முடிவெடுப்பது என்பது ஒரு நொடியில் எடுப்பது அல்ல. நீண்ட ஆய்வு, சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை, தேவைகள், நிதி நிலைமை,  பயன்கள், விளைவுகள், பிரச்சனைகள் என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வெற்றியை விட தோல்விக்குத்தான் நாம் அதிகம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பது தான் உண்மை. தோல்வி எளிது. வெற்றி கடினம். வெற்றிதான் நமக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். வெற்றியைத்தான் நம்மிடம் நிறுவனமும் எதிர்பார்க்கிறது. தயக்கத்தை விட, தன்னம்பிக்கையோடு முடிவெடுத்தால், நாம் தோல்வி அடைந்தாலும், நம்மை திரும்பவும் எழச்செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.
 
பொறுப்புகளைப் பெறுங்கள்


தொடர்ச்சியான பயிற்சியும், கற்றலும், அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டதும், தன்னம்பிக்கையும் எல்லாவற்றிற்கும் மேலாக பொறுப்பேற்றலும் நம்மை தலைமைக்குரிய பாதையில் பயணிக்கச் செய்யக்கூடிய காரணிகள். படிக்கும் காலத்திலேயே பள்ளி, கல்லூரி மற்றும் சமுதாய அளவில் சிறு சிறு பொறுப்புகளைப் பெற்று செயல்பட ஆரம்பித்தோமானால், வேலைக்குச் செல்லும் பொழுது நம்மிடம் தயக்கம் இருக்காது, அதற்கு பதில் சாதிக்கத் துடிக்கும் உற்சாகம்  இருக்கும்.
கல்வி மலர்